சென்னை, ஜ.ன.23 போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்கவில்லை . இருபத்து மூன்று ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளோம் . அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று (22.1.2026) எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேள்விக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது : அரசு ஊழியர்கள் போராடிக் கொண்டு இருப்பதை மிகுந்த கவலையோடு, வருத்தத்தோடு, அக்கறையோடு நம்முடைய அமைச்சர் எதிர் கொண்டு இருக்கிறார் . இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?
அரசு ஊழியர்கள் ஏதாவது கோரிக்கை வைத்துப் போராடுவது அவர்களின் உரிமை. ஆனால் உரிமையோடு போரா டக் கூடிய போராட்டத்தைக்கூட முடிக்க வேண்டும், தொடரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தோடு தொடர்ந்து பல முறை அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. முழுமையாக தீர்க்கவில்லை என்று சொன்னாலும், தொண்ணூற்றைந்து சதவீதம் தீர்த்து வைத்து இருக்கிறோம். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை. கொண்டு போய் சிறையில் அடைக்கவில்லை. கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்தது. எங்கள் ஆட்சியில் நடக்கவில்லை. நமது எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சராக இருந்த போது அரசு ஊழியர்களை அதிக ஊதியம் வாங்கிக் கொண்டு இருப்பதாக கொச்சைப்படுத்தி பேசியதை இந்த நாடு மறந்தவிடவில்லை என்பதையும் உறுப்பினர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இருபத்து மூன்று ஆண்டு கால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்துவைத்துள்ளோம்; அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை. இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
