பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி



பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
(நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
வல்லம், ஜன. 14- சனவரி 12 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திராவிடர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் சமத்துவப் பொங்கல் கலை விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக செயற்குழு உறுப்பினர் முனைவர் வீ.அன்புராஜ் பொங்கல் வைத்து அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, செயற்குழு உறுப்பினர் முனைவர் வீ.அன்புராஜ் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறையில் முனைவர் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டு பணியாளர் நலமன்ற சார்பாக பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பல்வேறு போட்டிகளான கும்மியடித்தல், உரியடித்தல், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி மற்றும் நடன நிகழ்ச்சி போட்டி யும் நடைபெற்றன.

இவ்விழாவில் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா. ஆர்.மல்லிகா, பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா மற்றும் அனைத்து துறையைச் சார்ந்த முதன்மையர்கள், இயக்குநர்கள், பேரசிரியர்கள் பணியாளர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை வணிகவியல் துறையினர் மற்றும் பணியாளர் கூட்டு நல மன்றம் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம், ஜன.14- “தமிழர் போற்றும் நன்னாள் உழவர் போற்றும் பொன்னாள்” தமிழரின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், வீரத்தையும், நன்றி உணர்வையும் போற்றும் வகையில் கொண்டாடப்படும் தைத்திருநாளே பொங்கல் விழாவாகும். வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி வெயில் மழை பாராமல் பாடுபட்டு விளைத்தெடுத்த நெல்மணிகளைப் புது பானையில் போட்டு பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என்று அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் பொங்கல் விழாவினை பள்ளியின் முதல்வர் இரா. கீதா பொங்கலை முன்னிட்டு 12.1.2026 அன்று தொடங்கி வைத்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான புதுப்பானையில் புத்தரிசியிட்டு மஞ்சள் இஞ்சி கொத்தோடு எறும்பூரும் கரும்போடு தித்திக்கும் வெள்ளத்தில் பொங்கல் வைத்து மகிழ்ச்சி வெள்ளத்தில் பொங்கலோ பொங்கல் என அனைவரும் கூடி குலவையிட்டு மகிழ்ந்தனர்.
மாணவர்கள் வேட்டி, சட்டையிலும் மாணவிகள் தமிழரின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி அணிந்து கொண்டு வண்ண உடையில் மின்மினி பூச்சிகளாக மின்னி கண்களைக் கவர்ந்தனர்.

மாணவிகள் கோலப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய தனித் திறமைகளை வெளிக் கொணர்ந்தனர். மாணவர்கள் கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போட்டிகளில் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்களும் பானை உடைக்கும் போட்டியில் மகிழ்வுடன் கலந்து கொண்டு விளையாடினர். பாரம்பரிய முறையில் பொங்கல் சமைக்கப் பட்டு அனைவருக்கும் வழங்கப் பட்டது. முதல்வர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் இணைந்து பொங்கலை சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்த விழா ஒற்றுமையும் பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, வல்லம்


வல்லம், ஜன.14 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ‘பொங்கல் விழா – 2026’ 12.01.2026 அன்று இப்பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாணவ, மாணவிகளால் அழகுற அமைக்கப்பட்ட “பெரியார் குடில்” முன்பு பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. பொங்கல் விழாவை யொட்டி மாணவ, மாணவிகள் அழகான வண்ணமயமான கோலங்கள் வரைந்து, பலூன் வாயில்கள் அமைத்து வளாகம் முழுவதும் அலங்கரித்த விதம் காண்பவர் கண்களையும் கருத்துகளையும் கவர்வதாக அமைந்தது. மாணவ, மாணவி யரின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.
இக்கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி. துணை முதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்ட அனைவரும் சுவையான பொங்கல் உண்டு மகிழ்ந்தனர்.
