மீனம்பாக்கம், ஜன.12- சென்னை உள்பட பல விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்கு புறப்பாடு, வருகை பயணிகளுக்கு சுங்க சோதனையின்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும் அதிகாரிகளின் சட்டை பாக்கெட்டுகளில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ‘பாடி வார்ன் காமிரா’ அணிந்திருக்க வேண்டும். அவை, அதிகாரிகளின் சோதனைகளை காட்சிப் பதிவு மற்றும் ஒலிப் பதிவாகப் பதிவு செய்யும். அக்காட்சிகள் கணினிகளில் தேதி, நேரம் வாயிலாக குறிப்பிடப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்பட்டதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் அல்லது சந்தேகங்கள் வந்தால், இந்த ‘பாடி வார்ன் காமிரா’ பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சுங்கத்துறைக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த நவீன நடைமுறை பெங்களூருவில் அமல்படுத்தப்பட்டது.
2ஆவதாக நேற்று முன்தினம் (10.1.2026) சென்னை விமான நிலையத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அய்தராபாத், கொச்சி விமான நிலையங்களிலும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. சென்னையில் முதல்கட்டமாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு 8 பாடி வார்ன் காமிராக்களை ஒன்றிய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது.
புதிய காமிரா
இவை போதுமானதாக இல்லை என்பதால், கூடுதலாக 24 காமிராக்கள் வர இருக்கின்றன. இதன்மூலம் சென்னை விமானநிலைய வருகை பகுதி சுங்க சோதனை பிரிவில், கிரீன் சேனல், ரெட் சேனல் என்று 2 வழிகளில் சுங்கத்துறை அதிகாரிகள், தங்களின் சட்டை பாக்கெட்டுகளில் ‘பாடி வார்ன் ’ எனும் நவீன காமிராக்களை அணிந்திருப்பர். இந்த காமிராவில் பயணிகளிடம் நடத்தப்படும் சோதனை உள்பட அனைத்தும் தேதி, நேரம் வாயிலாக காட்சிப் பதிவு மற்றும் ஒலிப்பதிவாக கணினிகளில் பதிவாகிவிடும். ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது, இக்காட்சிகளை சுங்கத்துறை உயரதிகாரிகள் முறைப்படி ஆய்வு செய்து முடிவு செய்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் பயணி, சுங்க சோதனையின்போது, தனது ‘தாலி’யை கழற்றும்படி அதிகாரி கூறியதாக புகார் தெரிவித்தார். விசாரணையில், அதுபோன்று நடக்கவில்லை என தெரியவந்தது.
இத்தகைய அவலநிலையை தடுக்க, புதிய திட்டத்தை ஒன்றிய நிதி அமைச்சகம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த திட்டம் திருச்சி, கோவை, மதுரை ஆகியவற்றில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
ஏற்கெனவே பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு முடக்கமாகி விடுகிறது. அதுபோன்று இல்லாமல் இந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று சுங்கத்துறை அதிகாரிகளும் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மைக்கு சவால்!
புதுடில்லி, ஜன. 12- “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதை இது காட்டுகிறது. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் , வரைவுப் பட்டியல் வெளியாவதற்கு முன்பே புள்ளிவிவரங்களைக் கூறுவது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூணான தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது,” இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று என சமாஜ்வாடி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
