பழைய டில்லியின் துர்க்மான் கேட் (Turkman Gate) பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதியைச் சுற்றியுள்ள கட்டடங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் டில்லி மாநகராட்சி நள்ளிரவில் இடித்துத் தள்ளியுள்ளது. ஃபைஸ்-இ-இலாஹி மசூதி சுமார் 100 ஆண்டுகள் பழமையானது.
‘‘1940-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி மசூதிக்கு 0.195 ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. அதற்கு அப்பாற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பாகும். மசூதி நிலத்தை திருமண மண்டபமாகவோ அல்லது கிளினிக் ஆகவோ பயன்படுத்துவது சட்ட விரோதம்’’ என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு டில்லி உயர் நீதிமன்றத்திலும் உள்ளது. மசூதி ஆணையம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அதாவது 6.1.2026 அன்று நள்ளிரவில் 17 புல்டோசர்கள் மூலமாக மசூதியை இடித்துத் தள்ளியுள்ளது பாஜக தலைமையிலான டில்லி மாநகராட்சி. ‘‘நீதிமன்ற உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பே, நள்ளிரவில் இவ்வளவு அவசரமாக இடிக்க வேண்டிய அவசியம் என்ன?’’ என்று மசூதி தரப்பு வழக்குரைஞர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக அரசு தொடர்ந்து முஸ்லிம்கள் உள்ளிட்ட மதச் சிறுபான்மையினர், தலித், பழங்குடி மக்களின் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் அவர்களின் பொருளாதாரத்தையும் திட்டமிட்டு சிதைத்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாகவேதான் ஆட்சி நடத்துகின்ற மாநிலங்களில் தண்டனை என்ற பெயரில் பாஜக அரசு இடித்துத் தள்ளும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
இவை எல்லாம் வட மாநிலங்களில் சாங்கோ பாங்கமாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்!
அதே நேரத்தில் இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? அரசு நிலத்தில் எத்தனை எத்தனைக் கோயில்கள் ஆக்கிரமித்துள்ளன?
ஆனால், நடைப்பாதை ஓரங்களில் அன்றாடம் சிறுசிறு வியாபாரம் செய்து அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் நிலையில் அந்தக் கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே, ஈட்டி வீராம்பாளையம் ஊராட்சி – ராச்சியாப்பட்டி அறிவொளி நகரில் ஒரு முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அரசு இடத்தில் கட்டப்பட்ட அந்தக் கோயிலை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அந்தக் கோயிலை அகற்றுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் அவினாசி வட்டாட்சியர் சந்திரசேகர் தலைமையில், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். எந்தவித அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தும், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கூடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். வேறு வழியின்றி முக்கியமான 38 பேர்களைக் காவல்துறை கைது செய்ய நேர்ந்தது.
வட மாநிலங்களில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட மசூதிகளெல்லாம் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலோ உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு நிலத்தில் அத்துமீறிக் கட்டப்பட்ட கோயிலை சட்டப்படி இடிக்கச் சென்றால் ரகளை செய்கிறார்கள். மதத்தையும், கோயிலையும் வைத்து அரசியல் நடத்துவோர் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே!
