சரியா? இது சரியா ?

Viduthalai
3 Min Read

புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த ராசனின் அறிவுரையின்  பெயரில் இந்த முடிவை புதுச்சேரி முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதாவது  அரசுத் துறையில் பணியாற்றும் பெண் களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு.. வெள்ளிக் கிழமை தோறும் காலை 9 மணிக்கு பதிலாக 11 மணிக்கு வேலை தொடங்கும். இந்த அறிவிப்பு கல்வி, சுகாதாரம், காவல்துறை சார்ந்த பெண்களுக்கு பொருந்தாது.

எதற்காக இந்த அறிவிப்பு.  இது உண்மையில் வரவேற்க கூடிய அறிவிப்பா? என்ன காரணத்திற்காக பெண்களுக்கு இப்படிப்பட்ட அறிவிப்பை புதுவை அரசு வழங்கியுள்ளது.  அதுவும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் – வெள்ளிக்கிழமைகளில் பெண்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. அன்று பெண்களுக்கு வேலை அதிகமாக இருக்கும் அதனால பெண்களின் மேல் உள்ள அக்கறையினாலே தங்கள் அறிவிப்பை வெளியிடுகிறார்களாம்.இது உண்மையில் பெண்கள்மீதான அக்கறையா. ஏற்கெனவே செய்யும் வேலையை கூடுதலாக  இன்னும் இரண்டு மணி நேரம் செய் என்ற அதிகார அறிவிப்பு.இரண்டு மணி நேரம் தாமதமாக அலுவலகம் வந்தாலும் தன் வேலையை தானே செய்ய வேண்டும்.

அப்படி எனில் எட்டு மணி நேர வேலையை ஆறுமணி நேரத்தில் அங்கே முடிக்கவேண்டும்.

இது சாத்தியமா?இது பெண்களின் வேலைச் சுமையை அதிகரிப்பது ஆகாதா?ஒருவேளை மறு நாள் ஒத்திப் போடாத வேலையாக இருக்கும் எனில் மட்டும் கூடுதலாக வேலை செய்ய வேண்டி இருக்குமே. அது வேலைப் பளுவை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் தனியாக ஒரு மகளிர் மட்டும் கூடுதலாக சில மணி நேரம் பணி இடங்களில் வேலை பார்ப்பது பாதுகாப்பானதா என்ற அய்யமும் எழுகிறது.

இங்கே கவனிக்க வேண்டியது உண்மையில் அரசு பெண்களுக்கு நன்மையை செய்கிறதா அல்லது பகுத்தறிவுப் பாதையில் இல்லாத – ஆன்மிக வழியில் செல்லும் பெண்களை மதம் சார்ந்த வழியில் தொடர்ந்து மத நம்பிக்கையில் இருக்க வைக்கச் செய்யும் ஏற்பாடா? இது ஒரு அரசு செய்யக்கூடிய செயலா?

எத்தனையோ பிரச்சினைகளை பெண்கள் நாள் தோறும் சந்தித்துக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் சிரமம் அளவில்லாதது. மாதத்தில் இரண்டு நாளாவது அவர்களுக்கு விடுமுறை அல்லது இரண்டு மணி நேரம் ஓய்வு கொடுக்கலாமே. கர்ப்பிணிகளுக்கு மாதாந்திர மருத்துவ சிகிச்சைக்காக அரை நாள் விடுப்பு தரலாமே.பாலூட்டும் தாய்மார்கள் ஆறு மாத விடுமுறைக்கு பின்  காலையில்  ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம் என்று அறிவிப்பை தரலாமே. இப்படிப்பட்ட அறிவு சார்ந்த – பெண்கள் நலம் சார்ந்த திட்டங்களை ஒரு அரசு சிந்திக்க மறுப்பதேன். அதை விட்டு விட்டு கோவிலுக்கு செல்லவும், வீட்டை சுத்தம் செய்யவும் – பூஜை பாத்திரங்களை கழுவவும் என்று நேரம் ஒதுக்குவது நேர்மையான ஒரு அரசு செய்யக்கூடிய செயல் அல்ல. இந்த வெள்ளிக் கிழமை 2 மணி நேர விடுமுறை மற்ற மதத்தை சார்ந்த பெண்களுக்கு பொருந்தாது. மதச்சார்பற்ற நாட்டில் இது போன்ற ஒரு மதம் சார்ந்த வஞ்சனையான முடிவுகளை ஒரு அரசு எடுக்கலாமா? மத நோக்கோடு முடிவுகளை எடுத்தால் அது நியாயமான நேர்மையான முடிவாக இருக்காது என்பதற்கு இந்த உத்தரவு சரியான உதாரணமாக இருக்கிறது.

ஏற்கெனவே பெண்கள் சமையலறை மற்றும் வீட்டு வேலைகளை செய்யும் அடிமைகளாக இருப்பதை இந்த உத்தரவு  உறுதி செய்கிறது.

– தேன்மொழி 

குடியாத்தம் மண்டல மகளிரணி செயலாளர்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *