குளிர்காலப் பிரச்சினையும், சமாளிக்கும் வழியும்!

5 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

மருத்துவம்

மருத்துவர் நா.மோகன்தாஸ்
(இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு மாநில மேனாள் தலைவர்)

பருவநிலை மாற்றத்தால் பல தொல்லைகள் ஏற்படலாம். அதற்கேற்றாற்போல நாம் சில வாழ்க்கை வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டால் எல்லாப் பருவத்தையும் இனிதாக அனுபவிக்க முடியும். குளிர்காலத்தில் தலைவலி, காய்ச்சல், இருமல், சளித் தொல்லைகள் அதிகம் ஏற்படும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் அதிகமாக வரும்.

இதற்குக் காரணம் குருதி (இரத்த)நாளங்கள் சுருங்கி விடுவதால் குருதி (இரத்த) ஓட்டம் மெதுவாகி விடும். இதன் விளைவாக மாரடைப்பு, சர்க்கரை நோய், நரம்பில் வலி ஏற்படும். இதைத் தவிர்க்க உடலை வலுப்படுத்தும் உணவைச் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்ற கலோரி குறைவாக உள்ள பழங்களை சாப்பிட வேண்டும். இவை குருதி (இரத்த)த்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதோடு அதிகரித்த சர்க்கரையால் ஏற்படும் நரம்புக் கோளாறுகளை குறைக்கவும் உதவும். குளிர்காலத்தில் தோல் வனப்பு குறைந்து வறட்சி ஏற்படும்.எனவே, குளித்த பிறகு தேங்காய் எண்ணையை பூசிகொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

ஈரத்துணிகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஈர ஆடைகளைப் பயன்படுத்தினால் உடலில் பூஞ்சைக் காளான் நோய்த் தொற்று ஏற்படலாம். அது அக்குள் மற்றும் இடுப்புப் பகுதியில் அரிப்பை ஏற்படுத்தும். மேலும் ஒருவர் பயன்படுத்திய உள்ளாடைகளை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. குளிர் காலத்தில் சோம்பலைத் தவிர்க்க வேண்டும். வேலையே செய்யாமல் முடங்கிக் கிடக்கக் கூடாது. எளிதான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும்.

வயதானவர்கள் அமர்ந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்திருக்கக் கூடாது. இரவில் சிறுநீர் கழிக்கப் படுக்கையில் இருந்து எழும்போதும் நிதானமாக எழ வேண்டும். படுக்கையில் ஒரு நிமிடம் அமர்ந்து அதன் பிறகு செல்ல வேண்டும். திடீரென நடக்கும்போது மயக்கம் எற்பட்டு கீழே விழும் நிலை ஏற்படும்.

நீரிழிவு, உயர் குருதி (இரத்த) அழுத்தம், ஆஸ்துமா, இதய நோய் உள்ளவர்கள் குளிர்காலம் வருவதற்கு முன்பே தக்க மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம். குளிர்காலத்தில் தாகம் அவ்வளவாக இருக்காது. குறைந்தது 2, 3 லிட்டர் தண்ணீர் அல்லது வேறு ஏதாவது திரவமோ அருந்த வேண்டும். இதய நோய் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான நீரை அருந்தலாம். மின் விசிறி, ஏர்கூலர், குளிர் சாதனப் பெட்டி ஆகிய உபகரணங்களை தேவைக்கேற்ப உபயோகிக்க வேண்டும்.

உணவு

எளிதில் செரிக்கும் உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மசாலா அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக புலால் உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கஞ்சி, கம்பு, திணை ஆகியவற்றால் செய்த கஞ்சி எளிதில் செரிக்கவல்லது. செயற்கைப் பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

நோய்க் கிருமிகள்

தேங்கிக் கிடக்கும் மழை நீரினால் மலேரியா, டெங்கு, டைப்பாய்டு, காலரா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பினாயில், பிளீச்சிங் படவுரை உபயோகிக்க வேண்டும்.

சாலைகளில் தேங்கி நிற்கும் மழைநீரில் எலிகளின் எச்சம் கலந்து இருக்கும். காலில் வெடிப்புள்ளவர்கள் அதில் நடந்து செல்லும்போது வெடிப்பின் வழியே நோய்க் கிருமிகள் புகுந்து காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் வர வாய்ப்புள்ளது. இதை சரியாக கவனிக்காத பட்சத்தில் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

வீட்டின் முன்பு மணல்வெளியில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது. வயதானவர்கள் குளிரை தாங்கக் கூடிய ஸ்வெட்டர்கள் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும். தூங்கும்போது போர்வையை உபயோகப்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஸ்வெட்டர்,.தலையில் குல்லாய் அணிந்து செல்ல வேண்டும்.

காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடக் கூடாது. நன்றாக வேக வைத்த பின்னரே சாப்பிட வேண்டும். வறுத்த தின்பண்டங்கள், உணவுகளை சாப்பிடக் கூடாது.

பாத வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலை, இரவு இருவேளை வெதுவெதுப்பான வெந்நீரில் கால் பாதங்களை நன்றாக மூழ்க வைத்து கழுவ வேண்டும். ஆலிவ் எண்ணை அல்லது தேங்காய் எண்ணையுடன் நன்றாக கலந்து பாத வெடிப்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

குளிர்காலத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகம் ஏற்படும். காய்ச்சல்  வந்தவர்கள் காரத்தைத் தவிர்த்து, இட்லி, இடியாப்பம், கோதுமை, ரவை, உப்புமா, புழுங்கல் அரிசி கஞ்சி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். ஆப்பிள், மாதுளை ஆகிய பழங்களை சாப்பிடலாம். குளிர்காலத்தில் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும் என்பதால் குளிர்ந்த நீரைக் குடித்தால் தொண்டை வலி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான நீரையே குடிக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது அவர்களை முழுவதும் மறைக்கும் ஆடைகளையே அணிவிக்க வேண்டும். ஸ்வெட்டர் ஆடைகளை அணிவிக்கலாம். பனிக் காலத்தில் ஓட்டல் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

“வீட்டில் பெரியவர்களுக்கு சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படும். எனவே, இரவு நேரங்களில் அவர்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். பஜ்ஜி போன்ற எண்ணைப் பலகாரங்களைச் சாப்பிடுவது உடல் நலனைப் பாதிக்கும். குளிர்காலத்தில் உடலில் நீர்ச்சத்து வேகமாகக் குறைய வாய்ப்புள்ளதால் தலைவலி, தலை சுற்றல் மற்றும் சோர்வு ஏற்படுகிறது. போதுமாக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

பகலில் போதுமான உணவை, குறிப்பாக கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது அவசியம். சரியான கையுறைகள், சாக்ஸ் மற்றும் காலணிகள் அணிவது அவசியம். தலை மற்றும் காதுகளை சூடாக வைத்து இருக்கும் தலைக்கவசத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

முதியவர்கள் சூடான ஆடைகளை அணிந்து குளிர் காற்று படாமல் காது, தலை போன்றவற்றை மூடிக் கொள்ள வேண்டும். கையுறைகள், சாக்ஸ், ஸ்கார்ப், கம்பளி, தொப்பி போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.

தலையணை உறை

பல நாட்களுக்கு ஒரே கைகுட்டை, டவல் அல்லது தலையணை உறைகளை மாற்றாமல் பயன்படுத்துவதால் வைரஸ்கள் வளர்ச்சி அடைந்து மீண்டும் மீண்டும் உங்களுக்கு சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படலாம். எனவே, இந்தத் துணிகளை அடிக்கடி துவைத்துப் பயன்படுத்த வேண்டும். முந்திரி, பாதாம், வால்நட் ஆகிய வைட்டமின் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *