திருச்சி, டிச.8– திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழாவாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்றது.
- பிறந்தநாள் சிறப்புக்கருத்தரங்கம்
- புரட்சிகர அமைப்பு
- திராவிட இனத்தின்…
- முதன்மையானவர்
- சிறந்த வாசகப் போட்டி
- சிறந்த ஆய்வுக்கட்டுரை எழுதுதல் போட்டி
- குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
- உலக எய்ட்ஸ் நாள் சிறப்புக்கருத்தரங்கம்
- பணியினை துரிதப்படுத்த வேண்டும்
- மரக்கன்றுகள் நடுதல்
- உயிர் காக்கும் குருதிக்கொடை முகாம்
- மாபெரும் கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம்
பிறந்தநாள் சிறப்புக்கருத்தரங்கம்
தமிழர் தலைவரின் சமுதாயப் பணிகளை பறைசாற்றும் விதமாக பெரியார் மன்றத்தின் சார்பாக சிறப்புக்கருத்தரங்கம் 01.12.2025 அன்று மாலை 3.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தஞ்சை, தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ந.எழிலரசன் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில்:- மருத்தியலோடு பகுத்தறிவையும் சுயமரியாதையையும் கற்பிக்கும் இம்மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவரின் பிறந்தநாளில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைவதாகவும், திராவிட மாணவர் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் திராவிட மாணவர் போராட்ட நாள் உறுதிமொழியேற்பு என்ற நிகழ்ச்சியினையும் ஏற்பாடு செய்திருக்கும் இக்கல்லூரியினை மனதாரப் பாராட்டியும் உரையாற்றினார்.
புரட்சிகர அமைப்பு
மேலும் ஜாதியப் பாகுபாடுகளைக் களைவதற்காக கும்பகோணத்தில் இரட்டைப் பானை முறையை ஒழிக்க உருவான இயக்கம்தான் திராவிட மாணவர் கழகம் என்ற புரட்சிகர அமைப்பு. எதற்கும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கும் துணிச்சலை மாணவர்களுக்கு ஏற்படுத்திய அமைப்பு பிற்காலத்தில் நம்முடைய உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் திராவிட மாணவர் கழகத்திற்கு பின்பே திராவிடர் கழகம் என்று சுயமரியாதை இயக்கம் பெயர் பெற்றது என்றும் தெரிவித்தார்.
திராவிட இனத்தின்…
10 வயதில் மேடையேறி, 13 வயதில் திருமணம் செய்து வைத்து உரையாற்றி, 17 வயதில் 277 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திராவிட இனத்தின் திருஞான சம்பந்தனாக இருப்பவர்தான் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். உலக வரலாற்றில் 93 வயதில் 83 ஆண்டுகள் பொதுவாழ்வு என்பது நம்முடைய தமிழர் தலைவருக்கு மட்டும்தான். அதுமட்டுமல்ல, ஒரு பகுத்தறிவு நாளேட்டிற்கு ஆசிரியராக 63 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து இருந்துவருகின்றார் என்றால் அதிலும் உலக அளவில் இவர் மட்டும்தான் என்றும் உரையாற்றினார்.
முதன்மையானவர்
இன்றைக்கு வரலாறு தெரிந்து வாழும் தலைவர்களில் முதன்மையானவராக திகழ்ந்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சமூநீதியை நிலைநாட்ட ஆசிரியர் அவர்கள் அவர்களையெல்லாம் வழிநடத்திய மாண்பினையும் தெரிவித்து, திராவிட மாடல் ஆட்சியின் பாதையை தீர்மானிப்பதும் பெரியார் திடல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியதையும் தெரிவித்தார். தமிழர் தலைவரின் பிறந்தநாளினை கொண்டாடும் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்புடன் சமுதாய முன்னேற்ற செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்பட்டு சமத்துவ சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியர் முனைவர் கார்த்திகேயன், திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் லோகு, இனியா ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்வில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை பேராசிரியர் அன்பழகன் தமிழ்நாட்டிற்கே மரியாதைக்குரிய அய்யாவாகத் திகழும் தந்தை பெரியார் அவர்கள் பெயர்தாங்கிய இக்கல்லூரியில் தமிழர் தலைவரின் பிறந்தநாளில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சியடைவதாகவும் 93ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தமிழர் தலைவர் அவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரியின் சார்பிலும் குடும்பத்தார் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் உரையாற்றினார்.
சிறந்த வாசகப் போட்டி
தேசிய நூலக வாரவிழாவினையொட்டி ‘வாசிப்பை சுவாசிப்போம்’ என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்ற வாசகப் போட்டியில் தலா 5 வாசகங்களை திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தெரிவு செய்து வழங்கிய வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
சிறந்த ஆய்வுக்கட்டுரை எழுதுதல் போட்டி
விழாவினையொட்டி நடைபெற்ற மருந்தியல் தேசிய மருந்தியல் வார மாணவர்களுக்கான ஆய்வுக்கட்டுரை எழுதுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
குழந்தை திருமணத்திற்கு எதிரான
உறுதிமொழி ஏற்பு
உறுதிமொழி ஏற்பு
திராவிட மாணவர் போராட்டநாளில் ஏற்க வேண்டிய உறுதிமொழியான திராவிட மாணவர் போராட்ட நாள் மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றனர்.
உலக எய்ட்ஸ் நாள் சிறப்புக்கருத்தரங்கம்
முன்னதாக பெரியார் நலவாழ்வு சங்கத்தின் சார்பில் 1.12.2025 அன்று காலை 10.30 மணியளவில் உலக எய்ட்ஸ் நாள் சிறப்புக்கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட எச்.அய்.வி.யினால் பாதிக்கப்பட்டோர் நலவாழ்வு கூட்டமைப்பின் இயக்குநர் ஏ.தமிழ் கலந்து கொண்டு எய்ட்ஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவப் பயனாளிகளை தீண்டாமையுடன் பார்க்கக்கூடிய அவல நிலை இன்றும் நிலவி வருவதாகவும், மருத்துவர்களே எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு ஏதேனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதனை தவிர்ப்பதாகவும் கூறினார்.
இன்றும் அவரிடம் மருத்துவ சிகிச்சை ஆலோசனைக்காக வரக்கூடிய படித்தவர்களிடம் கூட எய்ட்ஸ் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு தயக்கம் காட்டக்கூடிய நிலையே இருக்கின்றது.
பணியினை துரிதப்படுத்த வேண்டும்
20 ஆண்டுகள் இம்மனிதநேய சேவையில் இருந்தபோதிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாக்கப்பட்ட ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட செய்தியை ஊடகத்தில் பார்த்தபோது இன்றும் இச்சமுதாயப் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்று தாம் வேதனை அடைந்து சிந்தித்ததாகவும் உரையாற்றினார். தவறான பாலியல் உறவில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் சுத்திகரிக்கப்படாத ஊசி, பரிசோதிக்கப்படாத இரத்தம், எய்ட்ஸ் பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்கு இப்படி பல வழிகளில் எய்ட்ஸ் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் இதுபோன்ற சூழ்நிலைகளை ஒழிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்றும் உரையாற்றினார்.
மரக்கன்றுகள் நடுதல்
நாட்டு நலப்பணிதிட்டத்தின் சார்பில் 02.12.2025 அன்று காலை 9 மணியளவில் பெரியார் மருந்தியல் கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
உயிர் காக்கும் குருதிக்கொடை முகாம்
செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் திருச்சி அண்ணல் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் குருதி வங்கி மருத்துவர் அரவிந்த், குருதிக்கொடை ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்ற குருதிக்கொடை முகாம் காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இக்குருதிக்கொடை முகாமில் 31 பேர் குருதிக்கொடை செய்து உயிர் காக்கும் மனிதநேயப் பணிக்கு பேருதவிபுரிந்தனர்.
மாபெரும் கண் பரிசோதனை மற்றும்
பொது மருத்துவ முகாம்
பொது மருத்துவ முகாம்
பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் டாக்டர் முனைவர் சுல்தானா, செவிலியர் ஹெலன் மற்றும் மருத்துவக் குழுவினரால் பொது மருத்துவ முகாமும் திருச்சி அய் ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் ஆப்டோமெட்ரிஸ்ட் ஜீவ ஹரிணி மற்றும் மருத்துவக் குழுவினரால் கண் பரிசோதனை முகாமும் நடைபெற்றது. இம்மனிதநேய மருத்துவ முகாமில் பொதுமக்கள் சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியோர்கள், நாகம்மை குழந்தைகள் இல்ல மாணவர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பணித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 112 பேர் பொது மருத்துவ முகாமிலும் 320 பேர் கண் பரிசோதனை முகாமிலும் கலந்துகொண்டு பயனடைந்தனர். இதில் 76 பேர் கண் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மனிதநேய நிகழ்ச்சிகளை பெரியார் மன்ற செயலர் அ.சமீம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஏ. ஜெசியா பேகம் மற்றும் திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

