வங்கக் கடலில் எட்டாம் தேதி “மேக்கா” புயல்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, மே 6-  வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் நாளை, 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இது, ‘மோக்கா’ என்ற புயலாக வலுப்பெற உள்ளது. அதனால், மீனவர்கள் நாளை, 7ஆம் தேதிக்குள் கரை திரும்புமாறு, வானிலை மய்யம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில், ஒரு வாரத்துக்கு முன்பு வரை, கோடை வெயில் கடுமையாக தகித்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, மாநிலம் முழுதும் பல இடங்களில், மிதமான மழை முதல், மிக கனமழை வரை பெய்துள்ளது.

மாநிலம் முழுதும், 50க்கும் மேற்பட்ட இடங்களில், மிதமான மழை பெய்துள்ளது.

வரும் நாட்களுக்கான வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டலத்தில், கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சூழலை தொடர்ந்து, தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை உருவாகிறது. இது வலுப்பெற்று, நாளை, 7ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் படிப்படியாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும். இதன் நகர்வுகள் கண்காணிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் இருந்து, 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் அதிகபட்சமாக, 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும்.

சூறாவளி எச்சரிக்கை

தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், 7, 8ஆம் தேதிகளில், 60 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 70 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். தென் கிழக்கு, மத்திய வங்க கடல் பகுதிகளில், வரும், 10ஆம் தேதி மணிக்கு, 80 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.

மேற்கண்ட தேதிகளில், மீனவர்கள் சூறாவளி காற்று வீசும் வாய்ப்புள்ள கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். கடலுக்குள் இருக்கும் மீனவர்கள், நாளை, 7ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மியான்மருக்கு நகரும்

உலக வானிலை ஆய்வு அமைப்பின், அங்கீகரிக்கப்பட்ட இந்திய பெருங்கடல் புயல்களுக்கான பெயர் பட்டியலின்படி, ஏமன் நாடு வழங்கியுள்ள ‘மோக்கா’ என்ற பெயர், இந்த புயலுக்கு சூட்டப்படுகிறது. மோக்கா என்ற வார்த்தை அரபி மொழியில், பருவகாலம், நிகழ்வு மற்றும் வாய்ப்பு ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது.

மோக்கா புயல் இந்தியப் பெருங்கடலில், இந்த ஆண்டில் உருவாகும் முதல் புயல்; கோடை காலத்தில் எப்போதாவது உருவாகும் அரிய புயல் வகையைச் சேர்ந்தது. இந்த புயல் தென் கிழக்கில் இருந்து, தமிழ்நாடு, ஆந்திராவுக்கு நீண்ட தொலைவில், மத்திய வங்க கடல் அருகே நகர்ந்து, மியான்மரை நோக்கி செல்லும் என, வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *