சென்னை, நவ. 29– மழைக்காலத்தில் உயிர் இழப்புகளைத் தடுக்க, மின்சாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மின் ஆய்வுத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, மின் ஆய்வுத் துறையின் சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் பின்வரும் மின்சாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும்.
அய்.எஸ்.அய் முத்திரை பெற்ற, தரமான வயர்கள் மற்றும் மின்சாதனங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு, மூன்று மின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்க வேண்டும்.
உடைந்த ஸ்விட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் பழுதடைந்த மின்சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது.
கேபிள் டிவி வயர்களை மேல்நிலை மின்சாரக் கம்பிகளுக்கு அருகே கொண்டு செல்லக் கூடாது.
மின் கம்பத்துக்காகப் போடப்பட்ட வயர் மீதோ அல்லது மின் கம்பத்தின் மீதோ கொடிக் கயிறு கட்டி துணிகளைக் கண்டிப்பாகக் காயவைக்கக் கூடாது.
மின் கம்பத்திலோ, தாங்கும் கம்பியிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது.
மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக் கிளைகளை வெட்டுவதற்கு மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சிக்கக் கூடாது.
இடி மற்றும் மின்னலின்போது: தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. இணைந்தாலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்
மு.வீரபாண்டியன் உறுதி
மு.வீரபாண்டியன் உறுதி
சென்னை, நவ. 29– அதிமுக, பாஜக, தவெக இணந்தாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (28.11.2025) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காரல் மார்க்ஸை பின்பற்றுபவர்களால், நாட்டின் பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைந்து விட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளார்.
இரட்டை ஆட்சி
இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தயார். நாட்டின் பண்முகத்தன்மையை, கலாச்சாரத்தை தகர்ப்பது ஒன்றிய பாஜக அரசுதான். தமிழ்நாட்டில் இருந்து திரும்பிச் செல்லும் போது, இடதுசாரியின் நல்ல சிந்தனையோடு ஆளுநர் ஆர்.என்.ரவி செல்வார்.
தமிழ்நாட்டில் போராட்டம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது. மனித உயிர்கள் முக்கியம். வழிகாட்டுகின்ற சட்டங்களால் போராடும் மக்களின் உரிமையை பறித்துவிடக் கூடாது. போராட்டத்தால் ஜனநாயகம் சிதைந்துவிடாது. யாராக இருந்தாலும் ரோடு ஷோக்களை நடத்துவது ஏற்புடையதல்ல. ஒரு கட்சியில் இருப்பவர்கள் மற்ற கட்சிக்கு மாறுகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை.
நாங்கள் கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணியில் இருந்தாலும் அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் பக்கம்தான் இடதுசாரிகள் இருப்போம். இந்திய ஜனநாயகத்தை ஒன்றிய அரசு சிதைத்து வருகிறது. ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சியை நடத்துகிறது. இதனை எதிர்த்துப் போராடும் திமுகவுடன் இணைந்து செயல்படுகிறோம்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்
திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கைரேகை, கிளி ஜோதிடம் போல் கூட்டணி ஆட்சியைக் கணிக்க முடியாது. அதிமுக, பாஜக, தவெக இணைந்தாலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இம்முறை திமுக கூட்டணியில் எங்களுக்கு கூடுதல் இடங்களை கேட்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நில மோசடி வழக்கில் அதிமுக பிரமுகர்கள் கைது
காவல் துறையினர் நடவடிக்கை!
சேலம், நவ.29– எடப்பாடி கொங்கணாபுரம் அருகே நில மோசடி புகாரில் அதிமுக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். அதிமுக பிரமுகர்கள் பச்சமுத்து, ராஜமாணிக்கத்தை சேலம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மகுடஞ்சாவடியைச் சேர்ந்த கந்தசாமி, வெள்ளரி வெள்ளி கிராமத்தில் நிலம் வாங்க அதிமுக பிரமுகர்களை அணுகி உள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகியோரிடம் 3.56 ஏக்கர் நிலம் வாங்க ரூ.1.5 கோடி தந்துள்ளார் கந்தசாமி. 3.56 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக ரூ.2.5 கோடி பெற்றுக் கொண்டு இருவரும் ஏமாற்றியதாக கந்தசாமி புகார் கூறியுள்ளார்.
அதே பகுதியில் மற்றொரு நிலத்தை வாங்குவதற்காக மேலும் ரூ.1 கோடியை கந்தசாமி அதிமுக பிரமுகர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அதிமுக பிரமுகர்கள் இருவரும் நிலத்தை கிரையம் செய்து தராமல் தாமதித்து வந்துள்ளனர். ரூ.1.50 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தை வேறொவருக்கு விற்றுவிட்டதாக கந்தசாமி காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். 2ஆவது முறையாக ரூ.1 கோடி கொடுத்து வாங்கிய நிலத்தை இதுவரை கிரையம் செய்து தராமல் ஏமாற்றுவதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கந்தசாமி அதிமுக பிரமுகர்கள் இருவர் மீதும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
வெள்ளரி வெள்ளி பகுதியில் சுமார் 3.56 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி கந்தசாமியை ஏமாற்றியுள்ளனர். இந்நிலையில் கொங்கணாபுரம் அருகே காரில் செல்லும் போது அதிமுக பிரமுகர்கள் இருவரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்தது.
