சென்னை, நவ.6- எஸ்அய்ஆர் விவகாரத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வாக்குத் திருட்டு
கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் காவல்துறை துரிதமாகச் செயல் பட்டிருப்பது பாராட்டுக்குரியது. 24 மணிநேரத்தில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு சுட்டு பிடித்திருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க காவல் துறையை நவீனப் படுத்த வேண்டும். காவல்துறையில் சிஎஸ்ஆர் நிதியை முழுமையாக பயன்படுத்தி கேமராக்களை அமைக்க வேண்டும்.
சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் தொடங்கியுள்ளன. தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்து 2003ஆம் ஆண்டின் எஸ்அய்ஆர் பட்டியல் நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.
வாக்காளர் திருத்த விவகாரத்தில் தமிழ்நாடு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். பல மாநிலங்களில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது.
விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்தால் மட்டும் போதாது, நீங்கள் சேர்ப்பதற்காக கொடுத்த பெயரை நீக்கி விடவும் வாய்ப்பு உள்ளது. மக்களின் வாக்குரிமையை பறிக்க மோடி அரசு முயற்சிக்கிறது. அதனால் நம் முடைய வாக்குரிமையை யாரும் பறிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டு மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில் மாவட்டம் வாரியாகவும் சென்னை சத்தியமூர்த்தி பவனிலும் ‘வார் ரூம்’ அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
