சென்னை, மே 20 கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் என ரூ. 2000 நோட்டுகள் திரும்பப் பெற்றது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை வரும் 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது வங்கியில் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஅய் தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக ட்வீட் போட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! #2000Note #Demonetisation” என பதிவிட்டுள்ளார்.
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை பா. சிதம்பரம் கிண்டல்
புதுடில்லி, மே 20 மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- எதிர்பார்த்தது போலவே ஒன்றிய அரசு, ஆர்.பி.அய்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல என 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சொன்னோம். தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது. எளிதாக பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவின் மூலம் செல்லாததாக்கி விட்டு அதனை மறைக்க ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு அரசும், ஆர்.பி.அய்.யும் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1,000 ரூபாய் நோட்டை அரசும், ஆர்.பி.அய்.யும் மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.