சென்னை, அக்.7- தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் நிலையில் 13-ஆம் தேதியன்று அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெற வுள்ளது. இதில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
சட்டமன்ற கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்றம் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மார்ச் 14-ஆம் தேதி சட்டமன்றத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது.
அதன்பின்னர் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. பிறகு தேதி குறிப்பிடாமல் சட்டமன்ற கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
6 மாதகால இடைவெளியில் சட்ட மன்றம் மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் வருகிற 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு வெளியிட்டு இருந்தார்.
அலுவல் ஆய்வுக்குழு
இந்தநிலையில் அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும்? என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வருகிற 13-ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பார்.
அலுவல் ஆய்வுக்குழு எடுக்கும் முடிவுகளின்படி சட்டமன்றம் கூடும் நாட்கள் நிர்ணயம் செய்யப்படும். 3 அல்லது 4 நாட்கள் சட்டமன்றம் நடை பெறும் என்று கூறப்படுகிறது.
இரங்கல் தீர்மானம்
கடந்த ஏப்ரலில் சட்டமன்றம் பிறகு ஒத்திவைக்கப்பட்ட மறைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேரின் இறப்பு குறித்த இரங்கல் குறிப்பு, 14-ஆம் தேதியன்று அவையில் தெரிவிக்கப்படும். மறைந்த வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் சில முக்கிய பிரமுகர்களின் மரணம் குறித்து இரங்கல் தீர்மானமும் அன்று நிறைவேற்றப்படும்.
கடந்த 27-ஆம் தேதி கரூரில் த.வெ.க. கூட்டத்தில் விஜய் பேசியபோது ஏற் பட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் மரணம் தொடர்பான இரங்கல் குறிப்பையும் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு வாசிப்பார் என்றும், அவர்களுக்கும் சட்டமன்றத்தில் மரியாதை செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த இரங்கல் நிகழ்ச்சியோடு அன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
எதிர்க்கட்சிகள்
அதைத்தொடர்ந்து அவை கூடும் அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முக்கிய பிரச்சினைகளில் அரசின் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்மொழிய வாய்ப்பு உள்ளது. 2025-2026-ஆம் ஆண்டு கூடுதல் செல வினங்களுக்கான மானிய கோரிக்கை, சட்டமன்றத்தில் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
அரசியல் பரபரப்பு
பா.ம.க.வில் பிளவு ஏற்பட்ட பிறகு அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கும் முதல் சட்டமன்றம் கூட்டத்தொடர் இதுவாகும். அதுபோல, அ.தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் சந்திக்கும் முதல் சட்டமன்றம் கூட்டத் தொடரும் இதுவாகும். எனவே அரசியல் பரபரப்புகளுக்கு இந்த கூட்டத்தொடரில் பஞ்சம் இருக்காது