சென்னை, ஜூலை 28- தென்னிந்தியர்களின் சாதனைகள் வரலாற்று புத்தகங்களில் மறைக்கப்பட்டுள்ளதாக கீழடி அகழாய்வு முடிவுகளை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வேதனை தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி யாக பதவி வகித்த மார்க்கண்டேய கட்ஜு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,இந்திய வரலாறு குறித்த புத்தகங்கள் பெரும்பாலும் வட இந்தியாவை மய்யமாகக் கொண்டவை யாக இருப்பதாகவும்,அவற்றில் தென்னிந்தியர்களின் சாதனைகள் மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கி.மு.8ஆம் நூற்றாண்டுக்கு முன்
தமிழ்நாட்டின் மதுரை அருகே உள்ள கீழடி என்ற இடத்தில் தொல்பொருள் கண்டுபிடிப்புகள், கி.மு. 8 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய பண்டைய நகர்ப்புற நாகரிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வணிகத் தொடர்பு
தென்னிந்தியாவில் காணப்படும் அதிக எண்ணிக்கையிலான ரோமானிய நாணயங்கள், கி.மு. 27 முதல் கி.பி. 14 வரை ஆட்சி செய்த ரோமானிய மாமன்னர் அகஸ்டஸ் காலத்தில் இருந்தே, தென்னிந்தியாவிற்கும், பண்டைய ரோமுக்கும் இடையிலான விரிவான வர்த்தகத்தைக் காட்டுவதாகவும், பண்டைய மற்றும் இடைக்கால தென்னிந்தியாவில் பொருளாதாரத்தின் உயர் வளர்ச்சியைக் குறிப்பதாகவும் கூறியுள்ள மார்க்கண்டேய கட்ஜு, கீழடியில் கூட பல ரோமானியநாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியர்கள், வட இந்தியர்களைப் போல் அல்லாமல், தென்கிழக்கு ஆசியாவில் விரிவான வணிக தொடர்பு களைக் கொண்டவர்களாக இருந்தனர் என்றும், உண்மையான ஒருமைப் பாட்டை விரும்பினால், வட இந்தியர்கள் தென்னிந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியங்களை படித்து, தென்னிந்தியர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என மேனாள் நீதிபதி கட்ஜுகுறிப்பிட்டுள்ளார்.