சென்னை, ஜூலை 7- சிறப்பு வாடிக்கையாளர் மற்றும் நடைமுறை மூலதன திட்டங்களின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடனை, தமிழ்நாடு அரசின், ‘டிக்’ நிறுவனம் 2 கோடி ரூபாய் என அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவில் தொழில் துவங்கவும், விரிவான திட்டங்களுக்கும், தமிழக தொழில் முதலீட்டுக் கழகம், பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன் வழங்குகிறது.
அதிகபட்ச கடன்
கடன் பெற்று, மூன்று ஆண்டுகளுக்கு மேல் நல்ல முறையில் சிறப்பாக செயல்படும் வாடிக்கையாளர்களுக்கு, அவசர மற்றும் தொழில் ரீதியான செலவுகளை மேற்கொள்ள சிறப்பு வாடிக்கையாளர் திட்டத்தில் அதிகபட்சம், 2 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
மேலும், நெகிழ்வு நடைமுறை மூலதன திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் செயலாக்க நிறுவனங்களின் நடைமுறை மூலதன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
தற்போது, சிறப்பு வாடிக்கையாளர் திட்டத்தில் வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை, 4 கோடி ரூபாயாகவும், நடைமுறை மூலதன திட்டத்தில் அதிகபட்ச கடன் தொகை, 6 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.