இந்தியாவிற்கே ‘ரோல் மாடலாக’ இருப்பது நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்!
ஆளுங்கட்சியாக – அமைச்சராக இருக்கும்போது மட்டும் அமைச்சர்
பி.கே.சேகர்பாபு இதுபோன்ற கூட்டங்களை நடத்தவில்லை;
எதிர்க்கட்சியாக இருந்தபோதே, நடத்தியிருக்கிறார்!
சென்னை, ஜூன் 27 இந்தியாவிற்கே ‘ரோல் மாடலாக’ இருப்பது நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தான். ஆளுங்கட்சியாக இருக்கும்போது மட்டும், அமைச்சராக இருக்கும்போது மட்டும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இதுபோன்ற கூட்டங்களை நடத்தவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போதே, இதுபோன்ற கூட்டங்களை நடத்தியிருக்கிறார். பெரியார் திடல், எப்போதும் அவருக்கு உரியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சென்னை வில்லிவாக்கம்: முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள்
விழாப் பொதுக்கூட்டத்தில்…
கடந்த 24.6.2025 அன்று மாலை சென்னை வில்லிவாக்கத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிசிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மிகச் சிறப்போ டும், பொலிவோடும் நடைபெறக்கூடிய செம்மொழி நாள் விழாவில் – எம் மொழி செம்மொழி என்று தலைநிமிர்ந்து நாமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே, இந்த உரிமையை நமக்குப் பெற்றுத் தந்த ஒருவருடைய பிறந்த நாள் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை (ஜூன் 3) செம்மொழி நாள் என்று நாம் அறிவித்திருக்கின்றோம்.
அவர் இல்லையானால், தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியைத் தருவதற்கு ஒன்றிய அரசினர், ஒப்புக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் பெறுகின்ற வரையில், கலைஞர் அவர்கள் போராடினார்.
செம்மொழி நாள் என்று சொல்வது வெறும் அலங்காரத்திற்காக அல்ல.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பிறந்த நாளை, செம்மொழி நாள் என்று கொண்டாடுகின்றோம்.
மீண்டும் முதலமைச்சராக, இன்றைய முதலமைச்சர்தான் வருவார்!
2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராக, இன்றைய முதலமைச்சர்தான் வருவார். இப்போது வெற்றி பெற்று இருக்கின்ற தொகுதிகளைவிட, அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் அளவிற்கு மக்கள் ஆதரவு தருவார்கள் என்பதை இங்கே நம்முடைய மாண்பமை அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் எடுத்துச் சொன்னார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை நம்முடைய அமைச்சர் அவர்கள், ஆண்டுதோறும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றார். ஆண்டுதோறும் நடத்திக் கொண்டிருப்பது மட்டுமல்ல; ஆண்டு முழுவதும் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
தேர்தல் காலகட்டத்தில் மட்டும் தலை காட்டக்கூடிய வர் அல்ல. அவருக்கு எல்லா நாள்களும் தேர்தல் நாள்தான். ஏனென்றால், தேர்வு செய்யப்பட்டவர் அவர். அதனால்தான், நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞரைவிட, துல்லியமாக எடை போடக்கூடியவர் இன்றைய முதலமைச்சர், ஒப்பற்ற முதலமைச்சர், இந்தியாவே பாராட்டக் கூடிய நம்முடைய முதலமைச்சர்.
இந்தியாவிற்கே நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ‘ரோல் மாடல்!’
இன்னுங்கேட்டால், அமைச்சர் அவர்கள், ‘‘என்னை ரோல் மாடல்’’ என்று சொன்னார். நான் ரோல் மாடல் அல்ல; ‘‘ஓல்டு மாடல்’’ – இன்றைக்கு ரோல் மாடல் என்றால், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; இந்தியாவிற்கே நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டவர்தான் ‘ரோல் மாடல்’ ஆவார்.
இன்றைக்கு ரோல் மாடல்; நமக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா நாட்டினருக்கு, கனடா நாட்டின ருக்கும் அவர்தான் ‘ரோல் மாடல்’.
இதை ஏதோ பெருமைக்காக நான் சொல்கிறேன் என்று யாரும் நினைக்கவேண்டாம்.
நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம்!
மதிய உணவுத் திட்டம் தியாகராயர் காலத்தில் தொடங்கப்பட்டது. நீதிக்கட்சி ஆட்சிக் காலகட்டத்தில் முதன்முதலாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப் பட்டது – இந்த வரலாறு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
பின்னர், அந்தத் திட்டம் பகல் உணவுத் திட்டமாக கல்வி வள்ளல் காமராசர் காலத்தில் வந்தது. அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவர்கள் காலத்தில், சத்துணவு திட்டமாக வளர்ந்தது.
ஓர் ஆட்சி மாறினாலும், இந்தக் கொள்கையை எந்த ஆட்சியும் விட்டுவிடவில்லை. இந்தக் கொள்கையில் இருக்கின்ற பிடிமானம் அதுதான். காரணம் என்ன வென்றால், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்’’ என்று பேராசிரியர் ஞானசம்பந்தம், குறளைப்பற்றிக் குறிப்பிட்டார்.
சில நேரங்களில், குறள், குரல் இரண்டும் ஒலித்தது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அந்தக் குறளுடைய பெருமையை என்னவென்று காட்டியவர்தான் நம்மு டைய கலைஞர் அவர்கள்.
கோட்டம் கண்டார்;
நாம் குதூகலம் கொண்டோம்!
‘ரோல் மாடலுக்கு’ நம்முடைய முதலமைச்சர் எப்படி அடையாளம் என்றால், சில நாள்களுக்கு முன்பு, வள்ளுவர் கோட்டத்தை சீரமைத்து திறந்து வைத்தார். கோட்டம் கண்டார்; நாம் குதூகலம் கொண்டோம்.
சென்னை தலைநகரில் கோட்டம்; கன்னியாகுமரியில், 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்குச் சிலை அமைத்தார் கலைஞர் அவர்கள்.
இப்போது வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசுகி றார்கள். நீங்கள் என்னதான் செய்தாலும், உங்கள் ஆவி போகின்ற அளவிற்குக் கத்தினாலும், எத்தனைக் கடவுள்களை கூட்டி வந்தாலும், உங்களுடைய முயற்சி பலிக்காது.
எல்லா கடவுள்களையும் பாதுகாக்கின்றவர் நம்முடைய அமைச்சர்தான்!
எல்லா கடவுள்களையும் பாதுகாக்கின்றவர் நம்முடைய அமைச்சர்தான். காணாமல் போன கடவுள்களையும் மீட்டுக் கொண்டு வருபவரும் அவர்தான். அதற்குரிய புள்ளிவிவரங்களை சட்டப்பேரவையில் சொல்கிறார்.
பாஸ்போர்ட் இல்லாமல், வெளிநாடுகளுக்குச் சென்ற கடவுள்களையும் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறார்.
இந்த அளவு கடவுளுக்கு அவர் செய்தாலும், மக்களும் முக்கியம் என்பதால், மக்களை நம்பி, இதுபோன்ற நிகழ்ச்சிகளை மக்களுக்காக நடத்திக் கொண்டிருக்கின்றார். இல்லையானால், வெறும் பஜனை பாடிக் கொண்டு, ஒரு மாநாட்டினை மட்டுமே நடத்த வேண்டியிருக்கும்.
ஆனால், அதெல்லாம் பயன்படாது என்பதி னால்தான், இன்றைக்குக் கலைஞர் பிறந்த நாள் விழாவினை – நாம் இவ்வளவு பெரிய திருவிழா போன்று கொண்டாடுகின்றோம். இது கலைஞருக்காகவோ, திராவிட இயக்கத்தின் பெருமைக்காகவோ அல்ல.
அமைச்சருடைய பலமே, அவருடைய ரத்தவோட்டமே தோழர்கள்தான்!
நம்முடைய அமைச்சர் அவர்களுக்கு, தோழர்கள் ஒவ்வொருவரையும் நன்றாகத் தெரியும்; அவருடைய பலமே, அவருடைய ரத்தவோட்டமே தோழர்கள்தான். இந்த மேடையை யார் அமைக்கின்றார்கள் என்று அவருக்குத் தெளிவாகத் தெரியும்.
அதனால்தான், அவர் சேகர்பாபு அல்ல, செயல்பாபு என்று நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தெளிவாகச் சொல்வார்.
இன்னொன்றை நான் இங்கே சொல்லவேண்டும். நாங்கள் இரண்டு பேரும் சண்டை போடக்கூடியவர்கள்.
அமைச்சர் அவர்கள், கடவுளைப் பாதுகாக்கக் கூடியவர். நாங்கள், ‘கடவுளை மற, மனிதனை நினை’ என்று சொல்லக்கூடிய பெரியாருடைய தொண்டர்கள்.
நாங்கள், இரண்டு பேரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். காரணம் என்னவென்றால், யாரும், எங்கள் குறுக்கே போக முடியாது. வடக்கே இருந்து வந்த சிலர், குறுக்கே போகலாம் என்று பார்க்கிறார்கள். இங்கே உள்ள சிலர், அதற்காக தங்கள் கட்சியை அடமானம் வைத்துவிட்டு, அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு. காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சருக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால், அவர் இருந்த இடம் அது என்பதால்!
அமைச்சர் அவர்கள் இங்கே நன்றாகச் சொன்னார், ‘‘அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்களே’’ என்று. அவருக்கு நன்றாகத் தெரியும், ஏனென்றால், அவர் இருந்த இடம் அது என்பதால்; யார் யார் எப்படி? எப்படி? என்று அவருக்குத் தெரியும். இதை உரிமை யோடு இங்கே நான் சொல்லலாம், மற்றவர்கள் சொல்ல முடியாது.
இருந்த இடம் வேறு; இருக்கின்ற இடத்தினுடைய தன்மை வேறு.
பெரியார் திடல், எப்போதும் அவருக்கு உரியது!
ஆளுங்கட்சியாக இருக்கும்போது மட்டும், அமைச்சராக இருக்கும்போது மட்டும் அவர் இதுபோன்ற கூட்டங்களை நடத்தவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த போதே, இதுபோன்ற கூட்டங்களை நடத்தியிருக்கிறார். பெரியார் திடல், எப்போதும் அவருக்கு உரியது.
கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற இயக்கம் திராவிடர் கழகம். அந்த இயக்கத்தில், ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்’’ என்று ஏன் சொல்கிறோம்?
கொள்கை என்பது வேறு; உரிமை என்பது வேறு!
எங்களுடைய கொள்கை என்பது வேறு; உரிமை என்பது வேறு. மாறுபடுகின்ற விஷயங்கள் என்பன வேறானவை.
கலைஞரால் உருவான ஆட்சியினால்தான், ‘‘மகாமகா கும்பாபிஷேகம்’’ என்று மட்டுமே போடப்பட்டு இருந்த இடத்தில், ‘‘திருக்குடல் நன்னீராட்டு விழா’’ என்று இடம்பெற்றது இந்த ஆட்சியில்தான்.
மேடையில், கலைஞரை வைத்துக்கொண்டே நான் பேசுவேன். சிரித்துக்கொண்டே கேட்பார். ‘‘கோபுரத்தின்மேல், ஏற்றிவிட வேண்டியவர்களை ஏற்றுங்கள்’’ என்பேன்.
நம் மொழியை செம்மொழியாக ஆக்கினார் கலைஞர். தாய்மார்கள், பெரியோர்கள், நண்பர்கள் எல்லோரும் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இளைய தலைமுறையினர் நிமிர்ந்து இதைத் தெம்பாகச் சொல்ல வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் நம்மை ஆட்சி செய்தனர். ஆங்கிலம் நமக்குப் பயன்படுகிறது. அதனுடைய பயன்பாடுபற்றி உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித்ஷாவிற்குத் தெரியாது. அவருடைய மகன் வேண்டு மானால் பேசுவார், கிரிக்கெட் கிளப்பிற்குச் சென்று.
ஆங்கிலத்தினுடைய பெருமையை உலகம் முழுவதும் உள்ளவர்கள் உணர்ந்துக் கொண்டி ருக்கின்றார்கள்!
இன்றைக்கு அந்த ஆங்கிலத்தினுடைய பெரு மையை உலகம் முழுவதும் உள்ளவர்கள் உணர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். பேராசிரியர், தமிழ் மொழியில் கெட்டிக்காரர்தான். ஆனால், வெறும் தமிழ்மொழியை மட்டும் படித்துவிட்டுப் போனால், இங்கிலாந்தில் என்ன செய்ய முடியும்? மொழிகள் ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.
நம்முடைய அமைச்சர் அவர்களுடைய முயற்சியி னால் இன்றைக்கு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தினை நடைமுறைப்படுத்தியதால், முருகனை தூக்கிக் கொண்டு, எஸ்.ஓ.எஸ்., எஸ்.ஓ.எஸ். (எஸ்.ஓ.எஸ். என்றால் எங்கள் கப்பலைக் காப்பாற்றுங்கள்) என்று கதறுகின்றார்கள். கப்பல் மூழ்கவிருக்கின்றபோது பயன்படுத்துகின்ற வார்த்தைத்தான் அது.
கடவுள் பக்தியில்கூட, அமைச்சருடைய கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஏற்றுக்கொள்ளவில்லை; என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார், ஏற்றுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். பத்திரிகைக்காரர்கள் நாளை காலையில் செய்தி போடுவார்கள், ‘‘இரண்டு பேருக்கும் லடாய்’’ என்று. அவர்கள் நினைப்பதுபோன்று, எந்த லடாய்யும் கிடையாது.
தமிழ்நாட்டிற்கு வந்து ரோடு ஷோ –
காட் ஷோ எல்லாம் செய்தவர் மோடி!
தமிழ்நாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது இருக்கட்டும்; அதற்கு முன்பு, மோடி இங்கே வந்து, ரோடு ஷோ – காட் ஷோ எல்லாம் செய்தார். இராமேசுவரத்திற்குச் சென்று ‘தியானம்’ செய்தார்.
கடவுளை நம்புகின்றவர்கள், கோவிலுக்குச் செல்லுகின்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபோன்று நாம் செய்தால், நமக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என்று நினைத்தார்கள்.
ஆனால், என்னதான் செய்தாலும், தமிழ்நாட்டை வளைக்க முடியவில்லை. ‘‘இது பெரியார் மண், திராவிட மண், இதை யாராலும் மாற்ற முடியாது என்று சொல்கிறார்களே, அதை எப்படியாவது மாற்றவேண்டும்?’’ என்று நினைத்து இராமேசுவரத்திற்குச் சென்றார் பிரதர் மோடி. திருவள்ளுவர் பக்கம் திரும்பாமல், அதற்கு எதிர்த் திசையில் அமர்ந்து ‘தியானம்’ செய்தார்.
இராமேசுவரம் தொகுதியிலாவது வெற்றி பெற்றார்களா என்றால், இல்லையே!
சரி, அவர் ‘தியானம்’ செய்த இராமேசுவரம் தொகுதியிலாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கவேண்டும் அல்லவா, அவர்கள். வெற்றி பெற முடியவில்லையே!
ஏற்கெனவே அவர்கள் நம்பிக் கொண்டிருந்த இராமன் கோவில் தொகுதியிலேயே அவர்கள் வெற்றி பெறவில்லையே – அயோத்தி தொகுதியில் எதிர்க்கட்சியல்லவா வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, அவர்களுக்கு இராமனும் கைகொடுக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு வந்து முருக பக்தர்கள் மாநாடு நடத்துகின்றோம் என்று பெரியார், அண்ணா, கலைஞர், எங்களைப் போன்றவர்களையெல்லாம் கொச்சைப்படுத்தி காணொலியை ஒளிபரப்பினார்கள்.
சொந்தக் காரணங்களுக்காக இன்றைக்கு அடமானமாகப் போய்விட்டீர்களே!
தங்களுடைய கொள்கையை அடமானம் வைத்தது மட்டுமல்ல – இயக்கத்தையே அடமானம் வைத்துவிட்டார்கள். இதைச் சொல்வதற்கு எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனென்றால், தாய்க்கழகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் – ஓர் இயக்கம் எதிர்க்கட்சியாகவாவது இருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. அந்தத் தகுதியைகூட இழந்துவிட்டு, தங்கள் சொந்தக் காரணத்திற்காக இன்றைக்கு அடமானமாகப் போய்விட்டீர்களே! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – அமித்ஷா கழகம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆக்கிவிட்டீர்களே!
எங்களைப் பொறுத்தவரையில் மூடநம்பிக்கை, மூடநம்பிக்கைதான்!
எங்களுக்கு குடமுழுக்கு என்றாலும், நன்னீராட்டு விழா என்றாலும் எங்களைப் பொறுத்தவரையில் மூடநம்பிக்கை, மூடநம்பிக்கைதான்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை. ஆனால், எங்களுக்கு அதில் ஒரு மகிழ்ச்சி என்னவென்றால், தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதுதான்.
(தொடரும்)