அமெரிக்காவிற்குப் போன ஜாதி (2)-தோழர் ம.வீ. கனிமொழி

viduthalai
13 Min Read

கற்பில் சிறந்தவர் யார் என்று கண்டுபிடிப்பதற்காகத்தான் முளைப்பாரி. யார் முளைப்பாரி நன்றாக முளைத்து வந்திருக்கிறதோ, அவர்தான் கற்பில் சிறந்தவர் என்று சொல்கிற பழக்கவழக்கம் எல்லாம் இருந்தது. இதுதான் அதற்கான அடிப்படை. இதை இங்கு நடத்துகிறார்கள், “முளைப்பாரி ஊர்வலம் அமெரிக்காவில் வந்து எதற்கு நடத்துகிறீர்கள்?” என்று நாம் எதிர் கேள்வி கேட்கும்போது என்ன சொன்னார்கள் என்றால். “ஓ! அப்படியெல்லாம் நடக்கிறதா? அப்படியானால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் எல்லாரும் முளைப்பாரி எடுத்துக்கொண்டு ஊர்வலம் போகலாம் என்று மாற்றிவிட்டார்கள். இதுதான் அவர்களால் முடிந்த அதிகபட்ச முற்போக்கு. நாம் எவ்வளவுதான் எடுத்தச்சொன்னாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், ஜாதிய ஆதிக்கம் என்பது இந்த இடத்தில் வேரூன்றி இருக்கிறது.

தமிழ்ப் பள்ளிகள் கோவில்களில்தான்

இங்கு தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன. தமிழ்ப் பள்ளிகளுக்குள் சென்றால், அங்கும் ஒவ்வொரு நிலையிலும் ஜாதி இயங்கும். ஒரு 10, 15 ஆண்டுகள் முன்பு வரை கூட தமிழ்ப் பள்ளிகள் கோவில்களில்தான் நடத்தப்பட்டன. தனியாக வகுப்பெடுக்க எல்லாம் யாரும் வரமாட்டார்கள். அப்போது கோயிலுக்குள் என்ன சொல்லிக் கொடுப்பார்கள்? மதம் சார்ந்த செய்திக்குள் ஜாதியும் இருக்கிறது. பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நிறைய இடங்களில் ஓரளவுக்கு மதச் சிந்தனையெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தனியாகப் பள்ளிக்கூடத்தை வாடகைக்கு எடுத்து வார இறுதியில் ஏதோ ஒரு நாள் சனிக்கிழமையோ அல்லது ஞாயிற்றுக்கிழமையோ பாடம் நடத்தக்கூடியப் போக்கு இங்கு இருந்தது. கோயில்களிலிருந்து பிரித்து எடுத்து வந்து தமிழ்ப் பள்ளிகள் நடத்தினாலும், அதற்குள் ஜாதி இயங்குகிறது. நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்றால், எந்த மதத்தையும் சாராமல் பிள்ளைகள் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று சொன்னாலும், ஒரு இராமாயணம் உள்ளே வந்துவிடும். அப்போது இராமாயணத்தை எதிர்த்து இது மதம் சார்ந்தது என்று நீங்கள் சொல்ல வேண்டும். இதை நடத்தக்கூடாது என்றால், மறுபடியும் உங்களை எதிர்த்துப் பேசுவதற்கு கூட்டம். கூடிவிடுவார்கள். நீங்கள் என்ன கருத்துடையவர்கள் என்பதை அவர்கள் எளிதாகக் கணித்து விடுவார்கள்.

இந்தியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பகுதிகளில் பார்த்தால், நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள் என்றே தோன்றாது. ஏதோ ஒரு வடநாட்டிற்குள் வந்துவிட்டோம் என்ற எண்ணம்தான் இருக்கும். முழுக்க முழுக்க அங்கு இந்தியக்கடைகள் இருக்கும். இஸ்கான் (ISKCON) அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவி உடை அணிந்து கொண்டு, நாமம் போட்டுக் கொண்டு, குடுமி வைத்துக்கொண்டு சாலைகளில் நின்று கொண்டு பகவத் கீதையை இலவசமாகக் கொடுப்பார்கள். இவையெல்லாம்தான் அமெரிக்காவில் ஜாதி அதிகமாக இருப்பதற்குக் காரணம்.

சம்ஸ்கிருத ஸ்லோகத்தை வைத்துக் கொண்டு visa பெற்றுவிடுகின்றனர்

பார்ப்பனர்கள் அதிகம் வந்ததால்தான் அமெரிக்காவில் ஜாதி அதிகமாக இருக்கிறது என்று தொடக்கத்தில் தோழர் சொன்னார். ஆனால் நாம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் சிங்கப்பூர், மலேசியாவிலும் ஜாதி இருக்கிறது, ஜாதிச்சங்கங்கள் இருக்கின்றன. இங்கேயும் ஜாதிச்சங்கங்கள் இருக்கின்றன. துபாய் அல்லது இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்லக்கூடிய இந்தியர்களுக்குத் தெரியும், கோயில்களுக்கு அங்கு அனுமதி கிடையாது. கோவில்களெல்லாம் கட்ட முடியாது. ஆனால் அமெரிக்காவில், மலேசியாவில், சிங்கப்பூரில் மத உரிமை என்கிற அடிப்படையில் கோவில்கள் கட்டிக்கொள்ளலாம். நிறைய ஒளிப்படங்களில் பார்த்திருப்பீர்கள், அவ்வளவு பெரிய ஏக்கரில் அவ்வளவு பெரிய கோவிலாக இங்கு கட்டி வைத்திருப்பார்கள். கோவில்களுக்கு நீங்கள் அனுமதி கொடுக்கிறீர்கள் என்றாலே அந்த இடத்தில் ஜாதி வந்து விடுகிறது. ஏன் இஸ்லாமிய நாடுகளுக்குப் போகக்கூடிய இந்தியர்களோ அல்லது தமிழர்களோ ஜாதியைத் தூக்கிச் சுமக்க முடியவில்லை என்றால் அங்கு கோவில்களுக்கு அனுமதியில்லை. இங்கு கோவில்களில் யார் பூஜை செய்கிறார்கள்? கருவறைக்குள் பார்ப்பனர்கள்தான் போகிறார்கள். அவர்களுக்கு மத அடிப்படையிலான நுழைவு அனுமதி (religious visa) என்பது சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. இங்கே நாம் பட்டம் பெற்றவர்களாக (okalled workers) இருப்போம், ஆனாலும் இங்கு நிரந்தரமாகத் தங்க வேண்டுமென்றால் நிறைய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இத்தனை ஆண்டுகள்தான் இருக்கவேண்டும் என்பதெல்லாம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு நுழைவு அனுமதி (visa) உடனே கிடைத்துவிடும். ஒரே ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தை வைத்துக்கொண்டு visa பெற்றுவிடுகின்றனர், அதைச் சரியாகச் சொல்கிறார்களா என்பது கூட நமக்குத் தெரியாது. இதுவரைக்கும் இங்கு இருக்கக்கூடிய கோயில்களுக்கு நான் போனதில்லை. என்றாலும் தோழர்கள் போய்விட்டு வந்து படங்களைக் காண்பிப்பார்கள். அந்தக்கோயில்களைப் பார்த்தீர்களானால் அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும். நம்முடைய ஊர் அமைப்பில் அந்தக் கோவில்கள் இருக்காது என்றாலும் ஒரு பளிங்கு மாளிகை போல கட்டி வைத்திருப்பார்கள். இக்கோவில்களிலிருந்து வரக்கூடிய காசு எங்கே போகிறது? இங்கிருக்கும் விஸ்வ ஹிந்து பரிசத்(VHP) அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் (RSS) இவர்களுக்குப் போகிறது. அதைத்தாண்டி, பார்ப்பனர்கள் பனியாக்கள் ஒரு கூட்டம். இந்தச் சங்கிலி அப்படியே தொடர்வதைப் பார்க்கலாம்.

இங்கு செய்யக் கூடிய தொழில்களிலிருந்து வரக்கூடிய பணம். கோவில்களிலிருந்து வரக்கூடிய பணம் இவையெல்லாம்தான் நம் ஊரில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டுவதற்கு அவர்களுக்கு வசதியை ஏற்படுத்துகின்றன. கோயில்கள் மூலமாக அவர்கள் எந்த அளவிற்கு இங்கு வேரூன்றி இருக்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம். கோயில்களுக்குள் நடக்கக்கூடிய சில ஜாதியப் பாகுபாடுகளும் இருக்கின்றன.

சமஸ்கிருதம் என்பது கடவுளின் மொழி என்று ஆறு வயதுக் குழந்தை சொல்கிறது

தமிழ்ப் பள்ளிகளில் வார இறுதியில் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு நான் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்தேன். மொழியைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது சமஸ்கிருதம் என்பது கடவுளின் மொழி என்று ஆறு வயதுக் குழந்தை சொல்கிறது. அப்படியானால் வீட்டில் அவர்கள் என்ன சொல்லிக்கொடுக்கிறார்கள்? அந்தக்குழந்தை சொல்வதற்குள் இருக்கும் விசயம், சம்ஸ்கிருதம் நாம் பேசுகிறோம். நாம் உயர்ந்தவர்கள் என்பது.

இன்னொரு முக்கியமான விசயம் என்னவென்றால் நம் ஊரில் எப்படி குழந்தைகள் புலால் உணவு எடுத்துக் கொண்டு வரும்போது, முகம் சுளிப்பார்களோ, அதே போல் இந்த ஊர்க் குழந்தைகள் சிறிய வயதில் செய்வார்கள். ஏனென்றால், வீடுகள் அவர்களுக்குச் அதைச் சொல்லிக் கொடுக்கின்றன. இங்கே ஓரளவுக்கு வளர்ந்தவுடன் பீப் சாப்பிடுவோம், போர்க் எல்லாமே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அது நம்முடைய வழக்கமான உணவு ஆகிவிடும். எதையுமே தவிர்க்க முடியாது. ஆனால் வீடுகளுக்குள் அவர்கள் எப்படி அந்த ஜாதியைக் கட்டமைக்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.

எனக்கு நேரடியாக நடந்த ஒரு அனுபவம் என்னவென்றால் என்னுடைய பிள்ளையின் தோழி வீட்டிற்கு நான் சென்றிருந்தேன். அவர்கள் வெளிப்படையாகவே கேட்டார்கள். அவர்கள் ஜாதியைச் சொல்லிவிட்டு இடைவெளி விடுவார்கள். என்னவென்றால் அவர்கள் ஜாதியைச் சொல்லிவிட்டார்கள். உங்கள் ஜாதியைச் சொல்லுங்கள் என்று நிற்கிறார்கள். நாம் எப்படிச் சொல்லுவோம்? நான் அவர்களை அமைதியாகப் பார்த்துவிட்டு, நான் இந்த ஜாதிக்குள் எல்லாம் பெரிதாகப் போவதில்லைங்க, என்று சொல்லிவிட்டேன்.

சிலர் வெளிப்படையாகவே நீங்கள் என்ன ஜாதி என்று கேட்பார்கள். ஏதோ ஒரு தமிழ் அமைப்போடு பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு தோழர் மூலம் நான் கேள்விப்பட்ட விஷயம் என்னவென்றால், “அவர்கள் எல்லாருமே உங்கள் ஜாதியைத்தான் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள், நீங்கள் என்ன ஜாதி என்று அவர்களுக்குத் தெரியவில்லை. என்றார்கள். நீங்கள் என்ன ஜாதி?” என்று என்னிடம் கேட்டார். நான் “அதைத் தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றேன். என்ன செய்வார்கள் என்றால் நாம் என்ன ஜாதி என்று தெரிகிறதென்றால், இங்கே ஜாதிச் சங்கங்கள் இயங்குகின்றன; எல்லா ஜாதிக்கும் இங்கே ஜாதிச் சங்கம் இருக்கிறது. அந்த ஜாதிச் சங்கங்களின் காரணம் என்னவென்று நான் பின்னால் சொல்கிறேன். இவர்கள் அந்த ஜாதி என்று தெரிந்துவிட்டால் அந்த ஜாதி ஆட்களை வைத்து நம்மை அடக்கப் பார்ப்பார்கள். இதெல்லாம் இங்கு நடக்கும். அதனால் நாம் தமிழ்ச் சங்கங்களோடு ஏதாவது பிரச்சினை செய்கிறோம் என்றால், இவர்கள் என்ன ஆளு என்பதைத் தெரிந்து கொள்ள அவர்கள் மிகுந்த முயற்சி எடுப்பார்கள்.

ஜாதிச் சங்கங்கள்

ஏற்கனவே நான் சொன்னது போல ஜாதிச் சங்கங்களுடைய தேவை என்ன? அமெரிக்காவில் ஜாதிச் சங்கங்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்று பார்த்தால், ஒன்றும் கிடையாது. அவர்களுக்குத் தங்களுடைய பெண் குழந்தைகள் முக்கியமாக வேறு ஜாதி ஆண்களைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஜாதிச் சங்கங்கள் இங்கு ஏற்பட்டதற்குக் காரணமே அதுதான். நிறைய இடங்களில் நான் கேள்விப்பட்ட வரைக்கும் அந்தப் பெண் குழந்தைகள் பள்ளி இறுதி வரும்போதே அதே ஜாதியைச் சேர்ந்த ஒரு பையனுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதற்குப் பிறகு படிக்க வேண்டும், படித்து முடித்தவுடன் கல்யாணம். இது அமெரிக்காவில் நடக்கிறது ஒரு 17,18 வயதுப் பெண்ணுக்கு நிச்சயம் நடக்கிறது அமெரிக்காவில் இதை மீறிப்போகும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள் அதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தனிச் செய்தி.

இங்கே நிறைய இந்தியக் குடும்பங்களைப் பார்த்தால் பெண் குழத்தை வைத்திருப்பவர்கள் அவர்கள் இந்த நாட்டுக் குடிகளாவே இருப்பார்கள். ஆனால் அந்தப் பெண் குழந்தை அய்ந்தாவது வகுப்பு வரும்போது ஊருக்கு வந்து விடுவார்கள் திறையப் பேரைப் பாருங்கள்,அய்ந்தாம் வகுப்பு (grade) வரும்போது ஊருக்கு வந்து விடுவார்கள். அந்தக் குழந்தை பள்ளி முடிக்கிறவரைக்கும் ஊரில் இருந்துவிட்டு, கல்லூரிக்கு அமெரிக்கா வந்து சேர்ப்பார்கள். ஏனென்றால், அந்தப் பதின் பருவத்தில் தங்களுடைய பெண் குழந்தைகள் இங்கு வளர்வதை அவர்கள் விரும்பவில்லை. ஏனென்றால் ஒரு நாட்டில் இருக்கும் போது அந்நாட்டின் பண்பாடு, அதை முதலில் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். நாம் எப்படி எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தோம் என்பதையே அவர்கள் நினைத்துக் கொண்டு குழந்தைகள் மீது கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடாது. அது அந்தக் குழந்தைக்குக் கலாச்சாரக் குழப்பத்தை ஏற்படுத்தும். இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளை இந்தியாவில் சில ஆண்டுகள் இருக்கவைத்துவிட்டு மறுபடியும் அந்தக் குழந்தைகளை இங்கு கூட்டிக்கொண்டு வருவதால், பண்பாட்டு ரீதியாக அந்தக் குழந்தைகளுக்கு நிறையக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. எந்த நாட்டில் இருக்கிறோமோ, அந்த நாட்டின் பண்பாட்டை முதலில் பெற்றோர் ஏற்றுக்கொள்ள வேண்டும். கெட்ட வாய்ப்பாக இந்த ஜாதியோடு இயங்குகிறவர்களுக்கு அது மிகவும் சிரமம் ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று முதலில் எனக்குப் புரியவில்லை அதற்குப் பிறகுதான் யோசித்துப் பார்க்கும் போது, இந்த நாட்டில் இருக்கக்கூடிய இந்தப் பண்பாடுகள் இவர்களுக்குப் பிடிக்கவில்லை நம் ஊரில் எப்படியாவது தடுத்துவிடலாம். இல்லையா? ஓர் ஆணோடு பழகுவதைத் தடுத்துவிடலாம் அது இங்கே கொஞ்சம் சிரமம் என்பதால் ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்து விடுவார்கள் என்பது பின்னால்தான் புரிந்தது.

இந்த ஜாதிச் சங்கங்கள் எல்லாம் ஒரு பக்கம் நான் ஏற்கனவே சொன்னேன். சென்னையிலிருந்து வந்தவர்கள் அதிகமாக எதிர்கொள்ளக்கூடிய இரண்டு கேள்விகள். அதை நம் ஊரிலும் நாம் எதிர்கொள்வோம்.

புத்தகம் பேசலாம்

இங்கே ஒருவர் வீட்டிற்குப் போயிருந்தேன். அவர் “புத்தகம் பேசலாம்” என்றொரு நிகழ்ச்சி நடத்துவார். எல்லாத் தோழர்களும் கலந்து கொள்வார்கள். அங்கு வந்திருந்த ஒரு தோழர் என்னைப் பார்த்து நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். நான் சென்னை என்றேன். “நீங்கள் சென்னையாக இருக்கலாம். உங்கள் தாத்தா. பாட்டி எல்லோருமே சென்னையா? அவர்களுக்கு ஏதாவது ஊர் இருக்குமே?” என்றார். “அவர்கள் ஊர் எல்லாம் தெரியாது. நாங்கள் சென்னையில்தான் இருக்கிறோம்” என்றேன். அவரால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால். சென்னையை ஒரு ஊராகவே மதிக்கவில்லை. உண்மையாகவே. இங்கு இருக்கிற அமெரிக்கத் தமிழர்களிடம் இதைப் பார்க்கலாம்.

தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும்

ஒரு தமிழ்ச் சங்க நிகழ்ச்சிக்குள் போயிருக்கும்போது ஒரு தோழர் வேகமாக வந்து “நீங்கள் சென்னையா?” என்றார். ஆமாம் என்றேன். சென்னையை நாங்கள் தமிழ் நாட்டோடு சேர்த்துக்கொள்வதே இல்லை என்றார். நீங்கள் என்ன சேர்த்துக்கொள்வது? சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் என நினைத்துக் கொண்டேன். அவ்வளவு வன்மம் இருக்கும் அதை வெளிப்படுத்துவதில். ஏனென்றால் என்ன ஜாதி என்று கண்டுபிடிக்க முடியாது. பாருங்கள். மற்ற மாவட்டங்களில் அவர்கள் ஓரளவுக்கு யூகித்துவிடுவார்கள். இங்கு யூகிக்க முடியாது. இரண்டாவது நம்முடைய பெயர் தமிழ்ப் பெயராக இருந்துவிட்டால், தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று கூட இல்லை. ஏதாவது ஊருடைய பெயர் மாஸ்கோ, ரஷ்யா என்று இருந்துவிட்டால் இவர்களிடமிருந்து தப்பித்துவிடலாம். இலையென்றால் பெயரை வைத்து உங்களுடைய அப்பாவின் பெயரை வைத்து, நீங்கள் எந்த இடத்திலிருந்து வருகிறீர்கள் என்பதிலிருந்து பூர்விகத்தைத் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இவர்களுக்குத் தூக்கமே வராது.

பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம்

இன்னொன்றையும் நாம் நுண்ணியப் பார்வை கொண்டுதான் பார்க்கவேண்டும். அதாவது, பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் இங்கு தொடங்கப்பட்டதற்கான ஒரு காரணம் இருக்கிறது. எழுத்தாளர் பெருமாள் முருகனை ஒரு தமிழ்ச்சங்கம் அழைத்திருந்தார்கள். மாதொருபாகன் நாவலின் ஆங்கிலப்பதிப்பு வெளிவந்த நேரம். தமிழ் நாவல் வெளிவந்து சில ஆண்டுகளுக்குப் பின்னரே இது வெளிவந்தது. அதைப் படித்துவிட்டு இங்கிருந்த அந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் பெருமாள் முருகன் வரக்கூடாது. வந்தால் நாங்கள் செருப்பைக் கழட்டி அடிப்போம், என்று அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு சொன்னார்கள். பெருமாள் முருகன் வரக்கூடாதுதென்று பெரிய பிரச்சினை நடந்தது.

அப்போது நான் இங்கு வந்து 5 அல்லது 6 ஆண்டுகள் இருக்கும். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஜாதி வெறியோடு செயல்படக்கூடியவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள் என்பதால், அப்போது பெரியாரியத் தோழர்களும், அம்பேத்கரியத் தோழர்களும் இணைந்துதான் பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தைத் தொடங்கினோம். தொடங்கும்போது “எதற்கு இதைத் தொடங்குகிறீர்கள்? இங்கே என்ன தேவை இருக்கிறது?” என்று கேட்டார்கள். “நீங்கள் பெருமாள் முருகனை வரவிடாமல் செய்வதே ஜாதிய வெளிப்பாடுதானே? என்ன தேவை என்று எப்படி நீங்கள் கேட்சு முடியும்? என்று நாங்கள் அவர்களுக்குப் பதிலளித்தோம்.

ஜாதியின் பெயரை இறுதியில்…

நம்முடைய ஊரில் பெயருக்கு முன் முதலெழுத்தைப் போடுவோம். ஆனால் இங்கு லாஸ்ட் நேம் (last name) என்று பெயரின்இறுதியில் குடும்பப் பெயரைப் போடுவார்கள். அழைக்கும் போதும் அந்தக் குடும்பப் பெயரை வைத்தே அழைப்பார்கள். இங்கே வரக்கூடிய சிக்கல் நம்முடைய முதலெழுத்தைப் பெயருக்குப் பின் இறுதியில் லாஸ்ட் நேம் (last name) போடுவோம். ஆனால் ஜாதிப் பெயரை பின்னால் வைத்துக் கொள்பவர்கள், ஜாதியின் பெயரை இறுதியில் (last name) போடுவார்கள். அதனால் இவர்களை அழைக்கும்போது இங்குள்ள பழக்கப்படி பெயரின் பின்னொட்டுச் சொல்லை வைத்துதான் கூப்பிடுவார்கள் என்பதால் ஜாதிப் பெயரை வைத்துத்தான் நிறையப்பேர் அவர்களை அழைப்பார்கள்.

எனவே ஜாதி என்பது அவர்கள் நினைப்பது போல் மேம்போக்கான விஷயம் அல்ல என்பதை அமெரிக்கர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. அதில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. நீங்கள் அந்த ஜாதிப் பெயரை வைத்துக்கொண்டு கூப்பிடும்போது உங்களை அறியாமல் நீங்கள் ஏற்றத்தாழ்வுடன் ஒத்துப் போகிறீர்கள் என்ற செய்தியை நாம் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிருக்கிறது.

ஆவணி அவிட்டத்திற்குப் விடுப்பு

அமெரிக்காவில் இருக்கக்கூடிய பன்னாட்டு நிறுனவங்களில் வேலை பார்க்கக் கூடியவர்கள் ஆவணி அவிட்டத்திற்குப் விடுப்பு / அனுமதி எடுத்து பூணூல் போட்டுவிட்டு வருவார்கள். ஏன் அவர்கள் இந்த நூலைப் போடுகிறார்கள் என்கிற புரிதலே அமெரிக்கர்களுக்கு இல்லை. இந்த நூலுக்குப் பின்னால் என்ன ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாம் அதை அவர்களுக்குப் புரிய வைத்து விட்டால், அவர்களுக்குத் தெரிந்துவிடும். ஆனால் அதில்தான் சிக்கல் இருக்கிறது. அது என்ன சிக்கல் என்றால் இங்கு இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் அல்லது பனியாக்கூட்டம் வந்து கிட்டத்தட்ட 50, 60 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50,60 ஆண்டுகளில் அவர்கள் அரசியல் ரீதியாக மிகப் பெரிய அளவிற்கு இங்கிருக்கக் கூடிய அரசியல்வாதிகளோடு இணைத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

50,60 ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த நாட்டுடைய அரசியலில் இவ்வளவு செல்வாக்கோடு இவர்களால் இருக்க முடிகிறதென்றால் 2000 ஆண்டுகளாக நம்மை எப்படியெல்லாம் ஒன்றுமில்லாமல் வைத்திருந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. 50 ஆண்டுகளுக்குள் இங்கு இருக்கக்கூடிய அரசியலுக்குள் அவர்களால் கோலோச்ச முடிகிறது என்பது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். இங்கு அமெரிக்காவில் இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தில் இராவணன் எரிப்பு என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு இங்கு இருக்கக்கூடிய ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்த பிரமுகர் வந்து கலந்து கொள்கிறார். அப்போது நாங்கள் ட்விட்டர் மூலம் “நீங்கள் கலந்து கொள்ளக்கூடாது; இராமனை அவர்கள் கடவுளாகப் பார்க்கலாம். இராவணன், இராமன் இதெல்லாம் ஒரு கதைதான் என்றாலும் இராவணன் ஒரு குறிப்பிட்ட இன மக்களைக் குறிக்கின்றான். நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம் நீங்கள் போய் இராவணனை எரிக்கிற நிகழ்வில் கலந்துகொண்டால் எங்கள் மனம் புண்படாதா?” என்று கேட்டோம். அவர்கள் என்ன செய்தார்களென்றால் அந்த இணையத்தளத்தில் இருந்த இராவணன் எரிப்பு பற்றிய செய்தியை மட்டும் தூக்கிவிட்டார்கள். நாம் என்ன நினைப்போம்? நிகழ்ச்சி நடக்காது போலிருக்கிறது.என்று நினைப்போம். ஆனால், அந்த ஊரில் இருந்த தோழர்கள் அந்த நிகழ்ச்சிக்கும் போய் விட்டு வந்து “நிகழ்ச்சி எல்லாம் நடந்தது தோழர், அவர்கள் இணையத் தளத்தில் இருந்த செய்தியை மட்டும்தான் எடுத்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். நீங்கள் என்ன ட்வீட் செய்தாலும், என்ன பிரதிநிதித்துவம் கொடுத்தாலும் இதுதான் நடக்கும்.

ஏனென்றால் அந்த அம்மா கமலா ஹாரீஸ் ஆளுநர் ஆக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஸ்பான்ஸர் செய்வது இந்த இந்து அமைப்புதான். போட்டிகளுக்கு இங்கு ஸ்பான்ஸர் செய்வார்கள் அல்லவா? அப்படி ஸ்பான்ஸர் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி நமது குரல் இங்கு எடுபடும்?

(தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *