அய்டி துறையில் முன்னேறியுள்ள சீனா ஆங்கிலத்தின் தேவை அறிந்து இப்போது எல்லா இடங்களிலும் எல்ஈடிதிரை போட்டு ஆங்கில பொது வகுப்பு நடக்கிறது.
ஆனால் அமித் ஷா அரசியல் லாபத்திற்காக உயர்கல்வியையும், ஆங்கிலத்தையும் அழித்து உலகத்துடனான தொடர்பையே நிர்மூலமாக்குகின்றார்.
இந்தியாவின் அரசியல் தலைவர்கள் வெளிநாட்டு மோகத்தில் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதும், அதே சமயம் சாமானிய இந்திய குடிமக்கள் மீது ஆங்கிலம் கற்கக் கூடாது, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதிப்பதும் மிகப்பெரிய நடிப்பைத்தான் காட்டுகிறது.
இந்த முரண்பாடு இந்திய சமூகத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது.
பியூஷ் கோயலின் மகன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும், பிரகாஷ் ஜவடேகரின் மகன் பாஸ்டன் பல்கலைக்கழகத்திலும், ராஜ்நாத் சிங்கின் மகன் லீட்ஸ் பல்கலைக்கழகத்திலும், ரவிசங்கர் பிரசாத்தின் மகன் கார்னெல் பல்கலைக்கழகத்திலும், ஜிதேந்திர சிங்கின் மகன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், நிர்மலா சீதாராமனின் மகள் நார்த்-வெஸ்ட் பல்கலைக்கழகத்திலும், சிவராஜ் சிங் சவுகான் மகன் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் பயில்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் பயின்றுவிட்டு இந்தியாவுக்கு திரும்பி, ஆங்கிலம் பேசுவதை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க இந்திய கலாச்சாரத்தையும் மொழியையும் மட்டுமே பின்பற்றுவார்களா? இது ஒரு கேள்விக்குறியே. ஏனென்றால், இவர்களது எதிர்கால வாழ்க்கைப் பாதை பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள், அல்லது மேற்கத்திய நாடுகளுடன் தொடர்பு கொண்ட தொழில்களில் தான் அமையும் என்பது வெளிப்படை.
ஆனால், சாமானிய இந்தியர்களுக்கு, “ஆங்கிலம் படிக்காதே, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றாதே” என்று உபதேசம் செய்யும் இந்த தலைவர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் இந்த விதிவிலக்கை அளிக்கிறார்கள்? “பொதுமக்கள் ஆங்கிலம் படிக்க வேண்டாம், ஆனால் என் மகன் அய்சிசி (ICC) தலைவராக வருவார்” என்று சொல்வது போன்ற ஒரு முரண்பாடாக இது பார்க்கப்படுகிறது.
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார் என்பது மற்றொரு உதாரணமாகும்.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டிய தலைவர்களின் பிள்ளைகள், இந்தியாவின் மொழி, கலாச்சாரம், கல்வி முறை ஆகியவற்றை புறக்கணித்து வெளிநாட்டில் உயர் கல்வி பயில்வதும், அதே சமயம் இந்திய இளைஞர்களை ஆங்கில மோகத்திலிருந்து விலகி இருக்கச் சொல்வதும் இரட்டை வேடம் அன்றி வேறில்லை. இது இந்தியர்களின் மத்தியில் நியாயமான கேள்விகளையும், விமர்சனங்களையும் எழுப்புகிறது. இந்த பாசாங்குத்தனம் எப்போது முடிவுக்கு வரும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.