சிகரம் ச.செந்தில்நாதன்
தமிழ்நாட்டில் மதப் பிரச்சினைகளைத் தூண்டி அரசியல் குளிர் காய்வதற்காக ஆர்.எஸ்.எஸ். – சங்பரிவார் கும்பர் ‘முருக பக்தர்கள் மாநாடு’ நடத்துகிறது. தமிழ்நாட்டில் போற்றப்பட்டு வந்த முருகனும், வடநாட்டு ஸ்கந்தனும் ஒன்றல்ல. வடநாட்டு ஸ்கந்தன் முருகனை விழுங்கியது எப்படி என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கடவுளான முருகன்மீது பிராமணிய செல்வாக்கின் வழி வட நாட்டு ஸ்கந்தமரபு ஏவிவிடப்பட்டது. வடநாட்டில் ஸ்கந்தன், தென்னாட்டில் முருகன் இரண்டும் ஒன்றுதான் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இரண்டும் ஒன்றா?
முதலில் ஸ்கந்தனைப் பற்றிச் சிறிது அறிவோம்!
வடநாட்டில் ஸ்கந்தன் ஒரு சிறுதெய்வம்; தமிழ்நாட்டில் முருகன் அப்படி அல்ல. வடநாட்டில் ஸ்கந்தன் வணக்கம், பெருந் தெய்வங்களின் வணக்கம் மேலோங்கும் வரை கணிசமான செல்வாக்கோடு இருந்தது. அப்படி ஒரு செல்வாக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை இருந்ததால்தான் முருகன் வணக்கத்தை ஆக்கிரமிக்க முடிந்தது. ஸ்கந்தனுக்கு இன்னொரு பெயர் ‘சுப்ரமண்யா’. சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் ஸ்கந்தன் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. பதஞ்சலி முனிவர் ஸ்கந்தன் பற்றி எழுதியுள்ளார். ரிக்வேத காலத்திலேயே ஸ்கந்தன் வணக்கம் துவங்கிவிட்டது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். காளிதாசனின் புகழ் பெற்ற படைப்பான குமாரசம்பவம் ஸ்கந்தனைப் பற்றிய காவியமாகும். ஸ்கந்தனின் இன்னொரு தோற்றம்தான் கார்த்திகேயன். மகாபாரதத்தில் ஸ்கந்தன் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது. வால்மீகியின் இராமாயணத்திலும் ஸ்கந்தன் இடம் பெற்றுள்ளான் என்கிறார்கள். குப்த அரசர்கள் ஸ்கந்தனை வணங்கியவர்கள். குப்த அரசர்களில் ஒரு மன்னன் பெயர் குமார குப்தா இன்னொரு மன்னன் பெயர் ஸ்கந்த குப்தா. ஆதி சங்கரர் கூறிய ஆறு சமயங்களில் ஸ்கந்தனை முன்னிறுத்தும் கவுமார வணக்கம் ஒன்றாகும்.
அதர்வண வேதத்தில் அக்னியின் மைந்தன் என்று குமாரன் (ஸ்கந்தன்) அழைக்கப்படுகிறான். ஆனால் அதே சமயம் ஸ்கந்தன் திருடர்களைக் காப்பவன் என்று வடமொழி நாடகமான “மிருச்சகடிகம்” (Mrichchakatikam) கூறுகிறது.
கீதையில் கண்ணன் கூறுகிறான்.
“Among Generals, I am skanda, the lord of war”
இவை எல்லாம் வடநாட்டில் ஆதி நாட்களில் ஸ்கந்தன் பரவலாக வணங்கப் பட்டிருக்கிறான் என்பதை உணர்த்தும். அவன் இளமை, போர், காதல் அனைத்தின் உருவாகவே இருந்திருக்கிறான். அதனால்தான் வடநாட்டு ஸ்கந்த மரபை தென்னாட்டு முருகன் மீது ஏற்றுவது சுலபமாக இருந்திருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் முருகன் வணக்கம் தொடர்ந்து செல்வாக்கோடு இருந்தது போல், வடநாட்டில் ஸ்கந்தன் வணக்கம் இருக்கவில்லை. பெருந் தெய்வங்களின் வணக்கம் மேலே வரவர ஸ்கந்தன் வணக்கம் பின்னிருக்கைக்குப் போய், அங்கும் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. இன்று ஸ்கந்தன் வணக்கம் வடநாட்டில் கிட்டதட்ட இல்லை. இந்த நிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நேர்ந்து விட்டது.
எனினும் ஒரு சில இடங்களில் ஸ்கந்தன் வணக்கம் இருப்பதாகத் தெரிகிறது. அரியானா மாநிலத்தில் சில இடங்களில் ஸ்கந்தன் வழிபாடு இருக்கிறது. அம்மாநிலத்தில் Pehowa என்னும் ஊரில் ஸ்கந்தனுக்கு ஒரு பெரிய கோயில் இருக்கிறது. இங்கு ஸ்கந்தன் பிரம்மச்சாரி.
அதனால் இக்கோயிலில் பெண்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பஞ்சாப் மற்றும் மராட்டியப் பகுதிகளில் சிறுசிறு கோயில்கள் அவனுக்கு உண்டு. வங்கத்தில் துர்கைப் பூஜையின் போது ஸ்கந்தனும் சேர்த்து வணங்கப்படுகிறான். ஆனால் தென்னாட்டில் வட கேரளா, தென்கன்னடம் முதலிய பகுதிகளில் ஸ்கந்தன் வணக்கம் என்பது சுப்ரமணிய வணக்கமாக இருக்கிறது.
ஸ்கந்தன் பற்றிய கதைகளை தமிழ் முருகனுக்கு அணிவித்து புதிய ஒப்பனை செய்து விட்டார்கள். புராணங்களை எல்லாம் அவனுக்குச் சொத்தாக்கிவிட்டார்கள். பல புதிய கதைகளையும் புழக்கத்திற்கு விட்டார்கள்.
எடுத்துக் காட்டு வேண்டுமா?
திருஞான சம்பந்தர் சைவத்தின் கொடியை
ஏழாம் நூற்றாண்டில் உயர்த்திப் பிடித்தவர்
சமயக்குரவர் நால்வரில் முக்கியமானவர்.
இவரையே முருகனின் வடிவமாகக்
காட்டும் புராணக் கதைகள் உண்டு.
முருகனை பால முருகன் என்பர். சம்பந்தரும் பாலகர்தான். பாலுக்கு அழும் சம்பந்தரைப் பார்த்து பார்வதி பால் கொடுக்கிறாள். அது சாதாரண பால் அல்ல; ஞானப்பால்! புராணப்படி சிவன் பார்வதியின் மைந்தன் தானே முருகன்! இந்த முருகனின் அவதாரம் தான் திருஞானசம்பந்தர் என்கிறார்கள். அதாவது பார்வதி பால் கொடுத்தது யாருக்கோ அல்ல. தன் மகனுக்குத்தான்!
இந்தக் கதையின் பின்னால் இன்னொரு தந்திரமும் ஒளிந்திருக்கிறது!
சம்பந்தர்தான் சமணர்களைக் கழுவிலேற்றிக் கொன்றார் என்பது பொதுவான செய்தி. முருகன் அநீதியை, அதர்மத்தை அழிக்கும் ஆண்டவன் என்பது முருகனின் அடையாளம்! இதனால் பெறப்பட வேண்டியது என்ன? முருகன்தான் சம்பந்தர் உருவில் சமணர்களை அழித்தான் என்பது! திறமையாக முருகனை பலிகடா ஆக்கிவிட்டார்கள். கழுவிலேற்றிய நிகழ்வும் உண்மையல்ல.
சமணர்களை வன்முறையால் வீழ்த்தியதை மனிதச் செயல் அன்று, தெய்வச் செயல் என்று நியாயப்படுத்திவிட்டார்கள்.
தமிழ் மூதாட்டி அவ்வை மாட்டுக்காரச் சிறுவனிடம் மாட்டிக் கொண்ட கதை அனைவரும் அறிந்ததுதான். “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று மாட்டுக்காரச் சிறுவன் கேட்ட போது, அதன் பொருளை யோசித்துப் புரிந்து கொள்ளாமல், சுட்டப்பழம் கேட்டாள் அவ்வை. மண்ணில் விழுந்த பழுத்த பழத்தை ஊதிச் சாப்பிட முயன்றபோது, “பாட்டி பழம் சுடுகிறதா” என்று அவன் கேட்க, பாட்டிக்கு அப்போதுதான் புரிந்தது! இருந்தாலும் மாட்டுக்காரச் சிறுவனிடம் அவ்வை தோற்பதா? கூடாது! மாட்டுக்காரச் சிறுவன் முருகன்தான் என்று கதை விட்டார்கள். இப்படிப் பல கதைகள் தமிழ்நாட்டில் உண்டு. முருகனின் பெருமையைப் பறைசாற்றுபவை அவை.
மேலே பார்த்தவை எல்லாம் தமிழ்நாட்டுக் கதைகள் இவை முருகனின் பெருமை பேசும்.
வடநாட்டுக் கதைகள் முருகன் பிராமணியப்படு தலைப் பேசும். ஸ்கந்த மரபு தமிழ்நாட்டில் முதல் நூற்றாண்டில் தொடங்கி பல்லவர் காலத்தில் வளர்ச்சி பெற்றது என்று சொல்ல வேண்டும்.
வடநாட்டில் ஸ்கந்தன் ருத்திரனின் மகனாகக் காட்டப்படும் கதைகள் உண்டு. ஆனால் மகாபாரதக் கதைப்படி, அக்னிதான் ஸ்கந்தனின் தந்தை! தமிழ்நாட்டில் இந்தக் குழப்பம் இல்லை. சிவனின் மகன்தான் முருகன்! தமிழ் முருகனுக்கும் வடநாட்டு ஸ்கந்தனுக்கும் பல வேறு பாடுகள் உண்டு.
வடநாட்டில் அக்னியோடு ஸ்கந்தன் இணைக் கப்பட்டிருப்பதுபோல் தமிழ்நாட்டில் முருகன் இல்லை. இங்கு முருகன் கொற்றவை மைந்தன். முருகன் வள்ளியோடும் தெய்வயானையோடும் வீற்றிருப்பது போல் ஸ்கந்தன் இல்லை. அறுபடைவீடு ஸ்கந்தனுக்குக் கிடையாது. அறுபடை வீடு பற்றிய பல கதைகள் முருகனுக்கு இருப்பது போல் ஸ்கந்தனுக்குக் கிடையாது. ஸ்கந்தன் வடநாட்டு மரபின் பிரதி நிதி என்றால், முருகன் தென்னாட்டின் பிரதிநிதி!
சோமாஸ்கந்தர்
சைவ சமயம் மெல்ல, மெல்ல பிராமணியப்படு வதற்கு ஓர் எடுத்துக்காட்டு சோமாஸ் கந்தர் வரலாறு.
சோமாஸ்கந்தர் வடிவம் என்றால் என்ன?
சிவனும் பார்வதியும் வீற்றிருக்க இருவருக்கும் இடையில் ஸ்கந்தன் இருக்கும் வடிவம்தான் சோமாஸ்கந்தர் வடிவம்.
இந்த வடிவம் ஒரு சமூக மாற்றத்தின் வடிவம்; அது மட்டும் அல்ல, தமிழர் சமய மரபு பிராமணியப்படுதலின் அடையாளமும் ஆகும்.
நிலவுடைமைச் சமுதாயம் வளர்கின்றபோது, குடும்பம் என்ற அலகு முக்கியத்துவம் பெறுகிறது. விவசாய சமூக வாழ்க்கையில், நவீன கருவிகள் இல்லாத காலகட்டத்தில் குடும்பம் என்ற கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். குடும்பம் ஆள் பலம் கொண்டிருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்த கடவுளுக்கும் குடும்பத்தை ஏற்படுத்தினார்கள். திணைச் சமூக வாழ்க்கைக்கு இந்த வடிவம் தேவைப்படவில்லை.
சங்க இலக்கியங்களில் கொற்றவை, முருகன் மறைமுகமாக சிவன் வணக்கம் பேசப்பட்டாலும், அவை சோமாஸ்கந்த வடிவத்தைக் குறிப்பதாக இல்லை என்பதைப் பல ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். குறிப்பாக முனைவர் ஏகாம்பர நாதன் கூறியுள்ளார். பக்தி இயக்க காலம் கூட இந்த சோமாஸ்கந்தர் வடிவத்தை ஏற்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார். பக்தி இலக்கியம் சிவனோடு, உமையவளையும், முருகனையும் சேர்த்துப் பேசிய போதிலும் இந்த வடிவத்தை சைவ சித்தாந்தம் அங்கீகரித்த வடிவமாக யாரும் பார்க்கவில்லை.
“செல்லியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்”
(4வது திருமுறை -பாடல் 431)
என்று பாடுகிறார் திருநாவுக்கரசர்.
இதற்குமேல் இந்த வடிவம் பரவலாகப் பேசப்படவில்லை. காரணம், இது சைவ மரபு சார்ந்தது அல்ல.
ஆனால் பல்லவர் சிற்பங்களில் இந்த வடிவம் முக்கியத்துவம் பெறுகிறது. இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறாத வடிவம் சிற்பங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் சமயம் வெகுவாக பிராமணப் படுதலின் விளக்கமாக இது அமைந்துள்ளது. உண்மையில் சிவனுக்கும் உமையவளுக்கும் இடையில் இருக்கும் உருவம் வடநாட்டு ஸ்கந்தன் தான். முருகன் அல்ல. ஆனால் முருகனாக பாவிக்க வைத்துவிட்டார்கள். தேவாரத்தில் ஸ்கந்தன் இல்லை என்றாலும், பல்லவர்கள் தங்கள் கோயில்களில் பண்பாட்டுப் படை எடுப்பை நிகழ்த்திவிட்டார்கள். அது மட்டும் அல்ல. பல்லவர்கள் தங்கள் சிற்பங்களில், விஷ்ணுவையும், பிரம்மாவையும் கூடவே இணைத்துவிட்டார்கள்.
வரலாற்று ஆய்வாளர் முனைவர். செண்பக லட்சுமியும், பிராமணிய மரபு சார்ந்த ஸ்கந்த, துர்க்கையையும் முருகனோடும், கொற்றவையோடும் அடையாளப்படுத்தி விட்டார்கள் என்பதை எடுத்துரைக்கின்றார். சில பல்லவர்காலச் சிற்பங்களில், பார்வதியின் இடது தொடையில் ஸ்சுந்தன் அமந்திருப்பது போலவும் உள்ளன. சோமஸ்கந்த வடிவத்தில் பிள்ளையாருக்கு இடம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இடும்பன்
முருகனைப் புராண மரபிற்குக் கொண்டுவந்த பின்னர் அம்மரபை உறுதிசெய்யவும், மேலும் வலு சேர்க்கவும் இன்னும் சில துணைக் கதைகள் தேவைப்பட்டன. அப்படிப்பட்ட கதைதான் இடும்பன் கதை! சூரபன்மனுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுத்த இடும்பன், சூரபன்மன் அழிவிற்குப் பின்னர் பொதிகை மலைக்கு வருகிறான். பொதிகை மலையில் இருக்கும் அகத்தியர் நற்பயன் வேண்டுமாயின் வடக்கே சென்று அவர் சொல்லும் இரண்டு மலைகளை அப்படியே தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்று இடும்பனிடம் சொல்கிறார். இருமலைகளையும் தன் தோள்களில் காவடி போல் தூக்கிவரும் இடும்பன், வழியில் இளைப்பாறுவதற்காக மலைகளைக் கீழே வைக்கிறான். பின்னர் வைத்த மலையைத் தூக்க முயலும்போது முடியவில்லை. அண்ணாந்து பார்த்தால் மலை உச்சியில் முருகன். முருகனின் வேல் இடும்பனைக் கொல்கிறது. இடும்பனின் மனைவி கேட்டதற்கு இணங்கி இடும்பனை உயிர்த்தெழச் செய்து அவனைத் தன் அடிமையாக்கிக் கொள்கிறான். பழனி தலபுராணத்தில் மட்டும் இந்தக் கதை இருக்கிறது. முருகன் கோயில்கள் சிலவற்றில் இடும்பனுக்கும் இடம் உண்டு. இடும்பன் கதை காவடியை அறிமுகப்படுத்துகிறது.
நன்றி: “தமிழ்நாட்டுச் சமய வரலாறு
– ஒரு புதிய பார்வை” நூல்