சென்னை, ஜூன் 15- தமிழ் நாட்டில் 40 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது இல்லை என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணிக்கு செல்லும் பெண்கள்…
திருமணமான பெண்கள் குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப் போகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் நாட்டில் ஏறக்குறைய 40 சதவீத தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:-
40 சதவீதத்திற்கும் மேல்…
குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. குழந்தை பிறந்து சில மாதங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்ப தில்லை.
இதனால் எளிதில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. சரியான தாய்ப்பால் கிடைக்காததால் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தை களுக்கு கொடுக்கலாம்.ஆனால் தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவுகள் கொடுக்கும்போது குழந்தை களுக்கு ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
உலக தாய்ப்பால் நாள்
தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப் பால் நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.
தாய்ப்பால் வங்கி
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கருப்பை விரைவில் சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைதல் போன்ற நன்மைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தாய்ப்பால் வங்கி அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ளன.
தாய் அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் கொடுக்கப் படுகிறது.
தாய்ப்பாலை ஒப்பிடு கையில், தாய்ப்பால் வங்கியில் உள்ள பதப் படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவாகவே உள்ளது.
எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.