அறிவு ஆசான் தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனான நான், வாய்ப்பும், நேரமும் கிடைக்கும் போதெல்லாம் இடையறாமல் அவரது ‘உயர் எண்ணங்கள் மலரும் சோலை’யிலிருந்து, உலகம் தொழும் (பின்பற்றும்) கருத்துக் கருவூலத்திலிருந்து படித்துப் படித்து என்னை நான் பக்குவப்படுத்தியோ, அல்லது வெறுங் கல்லாக இல்லாது, செதுக்கப்பட்டு ஒரு பயனுள்ள கருவியாகவோ அல்லது சிற்பமாகவோ மற்றவர்களுக்குப் பயன்படும் வாழ்க்கையாக – நமது பணி ‘தொண்டறமாக’ ஓர் அணுவளவேனும் அமையாதா என்று என்னை நான் கேட்டுக் கொண்டு என் அன்றாடப் பணிகளை அலுப்பு சலிப்பின்றிச் செய்து வாழ்ந்து வருபவன்.
17.3.1956இல் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் ஆசிரிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் ஆற்றிய அறிவு ஆசானின் தொண்டறம் மிக்க அந்த வகுப்புப் பாடத்தினும் மேற்பட்ட தத்துவ வரிகளினை ஏற்கெனவே படித்திருந்தவற்றை மறுவாசிப்புச் செய்து மகிழ்ந்தேன்.
நமது வாழ்க்கை பெரும்பாலோருக்கு குறிக்கோளற்ற – இலக்கு இல்லாத பயணமாகவே இருக்கிறது.
சிலருக்குப் பணம், பட்டம், பதவி, சொத்து சேர்த்து அதனைத் தக்க வகையில் பாதுகாப்பது என்பதிலேேய நாளும் நாளும் கவலை!
எது வேண்டும்?
அறிவு ஆசானாகவும், பகுத்தறிவுப் பகலவனாகவும் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து, வரலாறாக இன்றும் வாழும், வாகை சூடிடும் தந்தை பெரியார் ஆற்றிய அந்த உரையின் முக்கிய பகுதி இதோ:
மனித வாழ்க்கை இலட்சியமற்றது
‘‘பெரியோர்களே! ஆசிரியப் பெருமக்களே ! மாணவ ஆசிரியர்களே!
என்னைப் பொறுத்தவரை நான் கூறுவேனாகில், மனிதப் பிறவியானது ஒரு இலட்சியமற்ற பிறவி என்றே கூறுவேன். மனிதன் பிறக்கிறான் ; பற்பல எண்ணங்களை எண்ணுகிறான்; பல வகைகளை இச்சிக்கிறான்; எவ்வளவோ காரியங்களில் விருப்பம்கொண்டு அவைகளை நிறைவேற்ற முற்படுகிறான். ஒரு சிலவற்றில் ஆசை நிறைவேறுகிறது ; மற்றவைகளில் ஏமாற்றம் அடைகிறான்; இறுதியில் செத்துப்போகிறான். மனிதன் பிறந்ததுமுதல் செத்துப்போகும்வரை இடையில் நடைபெறுகிறவைகள் எல்லாம் அவனின் சுற்றுச்சார்பு, பழக்கவழக்கம் இவைகளைப் பொறுத்து நடக்கின்றன. எனவே, மனித வாழ்வு இலட்சியமற்ற வாழ்வு என்பது என் கருத்து. இதை அனேக அறிஞர்களும் ஒப்புக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். மேலும், இக்கருத்து யாராலும் மறுக்க முடியாததும் ஆகும்.
பிறப்பும் இறப்பும் இயற்கையே. மனிதன் ஏன் பிறக்கிறான் என்று யாராவது கூறமுடியுமா? பிறந்து எதற்காக வாழ்கிறான், எதற்காக இறந்துபோகிறான்-என்று யார் கூறமுடியும்? இதைக் கேட்டால், ‘அது கடவுள் செயல்; கடவுள் பிறப்பிக்கிறார்; காப்பாற்றுகிறார்; சாகடிக்கிறார்’ என்றுதான் கூறமுடியுமே தவிர, வேறு சரியான காரணம் கூற முடியுமா? அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின்மீது பிள்ளை வேண்டுமென்று பிள்ளையைப் பெறுகிறான் என்றால் – எதற்காகப் பிள்ளை வேண்டும் என்பதைக் கூற முடியுமா? அவன் எந்தக் குறிப்பிட்ட இலட்சியத்தின்மீது தனக்குப் பிள்ளை வேண்டும் என்று முயற்சிக்கிறான் என்று அவனைக் கேட்டால்கூடத் தெரியாது. குழந்தையை அடைந்ததும் அதை ஏன் காப்பாற்றவேண்டும், அதற்கு ஏன் கல்வி புகட்டவேண்டும்-என்ற இலட்சியத்தைக் கூறமுடியாது. ஏதோ, தம் பிள்ளை படிக்கவேண்டும் என்பார்களே தவிர, எதற்காகக் கல்வி கற்கவேண்டும் என்றே தெரியாது. எல்லோரும் படிப்பதற்கு விரும்புகிறார்கள். அவரவர்கள் தங்கள் மக்களைப் பள்ளிக்கு அனுப்பிக் கல்வி கற்க வைக்கிறார்கள். அந்தப் பெற்றோர்களுக்கே தமது மக்கள் ஏன் படிக்கவேண்டும் என்பதற்குச் சரியான பதில் கூறமுடியாது. படிக்கும் பிள்ளையோ நாம் எதற்காகப் படிக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளாமலே படிக்கிறான். அவனை, ‘‘நீ ஏன் படிக்கிறாய்?” என்று கேட்டால் அவனுக்கே பதில் கூறமுடியாது. அப்படி எதாவது பெற்றோர்களோ அல்லது பையன்களோ கூறுவார்களேயானால் ‘படிப்பது பணம் சம்பாதிக்க’ என்று கூறுவார்கள். படிப்பானது பொருள் திரட்ட வழிதேடுவதற்கு என்பதாகமட்டும் கூறுவர்.
ஆனால், அந்தப் பணம் எதற்காக என்றால், அதுவும் குறிப்பிட்ட இலட்சியத்தின்மீது சேர்க்கப்படுவதில்லை. ஏதோ செல்வத்தை மென்மேலும் சம்பாதித்து அதைச் சேர்த்து வைத்துக்கொண்டே போகவேண்டும். அதற்கு அளவே கிடையாது. நாளுக்குநாள் மென் மேலும் சொத்துக்களைச் சேர்த்துக்கொண்டே போகவேண்டும் என்ற ஆசைமட்டும் உண்டே தவிர, அது எந்த அளவுக்குப்போய் நின்றால் போதும் என்ற அளவே கிடையாது. இப்படிச் சொத்துச் சேர்ப்பது என்பதும் குறிப்பிட்ட இலட்சியத்தின்மீதோ, குறிப்பிட்ட எல்லையின்மீதோ சேர்ப்பதில்லை. ஆசைக்கும் எல்லையில்லையே! படித்துப் பாஸ்செய்த பின் வேலைக்குத் திண்டாட்டம். வேலை ஏதாவது கிடைத்துவிட்டால், அந்த வேலை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிய வேலையாக வரவேண்டும்; மென்மேலும் பிரமோஷன் கிடைத்துக்கொண்டே போகவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த வேலை கிடைத் தாலும் அதில் திருப்தி கிடையாது. அதற்கும் மேலான ஸ்தானத்தைத் தாவிப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அதையும் தாவிக் குதித்து எப்படியோ பிடித்து விட்டால், அடுத்தபடியாக மேலே உள்ள உத்தியோகம் வேண்டும். அதற்காகப் பலவழி களிலும் முயற்சிக்க ஆரம்பிக்கிறான். இப்படியே ஒரு குறிப்பிட்ட இலட்சியத்தின்மீதுதான் உத்தியோகம் அடைதல் என்பது இல்லாமல் போய்விடுகிறது. இவ்விதமே – எல்லாம் ஒரு இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் இருக்கின்றன.
வாழ்க்கை என்ற ஏணியின் அடிப்படையில் கால் வைக்கும்பொழுது நாம் எங்தே ஏறுகிறோம், கடைசியாக எங்கே போவோம் என அறியக்கூடவில்லை. நாம் ஏறிமுடித்தால் போதும் என்பதைக் கொண்டிராமல், ஒவ்வொரு படியாக ஏறிக்கொண்டே போகவேண்டும்; அதற்குமேல் என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்கவேண்டும்; அதைப் பிடித்தவுடன் அதற்குமேலே என்ன தெரிகிறதோ அதைப் பிடிக்கவேண்டும்-என்று எல்லையே இல்லாமல் இலட்சியமற்ற முயற்சியிலேயே காலத்தைக் கடத்துகிறோம். இறுதியில் காலம் முடிவடைந்து இறந்து போகிறோம். இப்பேர்ப்பட்ட வாழ்க்கையில் ஒருவிதப் பலனும் கிடையாது. சமுதாயத்துக்குப் பயன் தரும் வாழ்க்கையே சிறந்த இலட்சியம். மனிதன் பிறந்து இறக்கும்வரை இடையில் உள்ள காலத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்ய வேண்டும். அவன் வாழ்க்கை மற்றவர்களின் நலனுக்கும், சமுதாயத்தின் சுகத்திற்கும் பயனுள்ளதாக இருக்கவேண்டும். ஒருவன் வாழ்வதென்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள்; மற்றவர்கள் சுகம் கண்டார்கள் என்று அமையவேண்டும். இதுதான் முக்கியமானதாகும். இதுவே அவசியமும் பொருத்தமும் ஆனதுமன்றி மனித வாழ்க்கை என்பதன் தகுதியான இலட்சியம் இது என்றும் கூறலாம். ஆனால், நாம் இதை யாரிடமும் காண்பது கிடையாது. கண்டுபிடிப்பதென்றால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரிருவரைக் காண்பதே மிகக் கஷ்டமான காரியமாகும். நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது; நமது சமுதாயமும் வாழவேண்டும்; மற்றவர்களின் பிள்ளைகளும் வாழவேண்டும். தம் பிள்ளைகள் மட்டும் சுகம் அடைந்தால் போதாது; ஏனையவர்களின் வாழ்வு சுகம் அடைய வேண்டும். இதற்கு ஏதாவது நம்மால் ஆனமட்டிலும், நம் வாழ்க்கை அவர்களின் நன்மைக்கு அமையும் முறையில் நாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது. இந்த வேலையைச் செய்பவர்கள் மிகக் குறைவு; காண்பதும் அரிது.’’
(திருச்சி, பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில்,
17-3-1956-ல் சொற்பொழிவு-1 விடுதலை 21-3-1956)
(தொடரும்)