சென்னை, ஜூன் 9- கிளாம் பாக்கத்தில் புதிய ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அடுத்த மாதத்துக்குள் பயன் பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.
சென்னை, வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதை இருக்கிறது.
ஆனாலும், ரயில் நிலையம் இல்லை. இதனால், இங்கு மின்சார, விரைவு ரயில்களை நிறுத்த முடியாத நிலை இருக்கிறது. இங்கு ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, ரூ.20 கோடி மதிப்பீட்டில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே கிளாம் பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்படுவதற்கு தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதையடுத்து, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன. 3 நடைமேடை களுடன் ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒரு நடைமேடையில் மேல் கூரை அமைக்கப்பட்டு விட்டது.
தரைத்தளம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் உள்ளது. இதுதவிர, உயர்நிலை மின்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துவிட்டது. பயணச்சீட்டு புக்கிங் அலுவலகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, மற்றொரு நடைமேடைக்கான பணிகளும் நடைபெறுகின்றன.
அடுத்த மாதத்துக்குள் ரயில் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப் பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.