சென்னை, ஜூன்.9- இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து வருகிற ஜூன் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு பயணம் செய்ய இருக்கிறார்.
இதையொட்டி இந்தியாவில் இருந்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவினர் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷூ சுக்லா கூறும் போது, ‘ஆக்சியம்-4 விண்வெளிப் பயணத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்வதில் உற்சாகமாக இருக்கிறேன். விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணத்தின் வாசலில் நிற்கிறேன். பல்வேறு அமைப்புகள் முதல் கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதும் மேம்பட்ட தளங்கள் வரை, இந்தப் பயிற்சி தீவிரமானது மற்றும் ஆழ்ந்த பலனளிப்பதாக உள்ளது. விண்வெளியில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் பின்னால் மாதங்கள், ஆண்டுகள் பெற்ற பயிற்சிகள் உதவிகரமாக இருக்கும். இந்தப் பயணத்தில், வெறும் கருவிகள் மற்றும் உபகரணங்கள் மட்டுமல்ல, கோடிக்கணக்கான இதயங்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளையும் நான் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.
இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா கடந்த 1984-ஆம் ஆண்டு ரஷியாவின் சோயுஸில் விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஒரு சிறப்பான பரிசை விண்வெளிக்கு எடுத்து செல்கிறேன். அங்கிருந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பிய உடன் அவரை நேரில் சந்தித்து தனிப்பட்ட முறையில் அந்த பரிசை ஒப்படைப்பேன். பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர்கள் இந்திய உணவு வகைகளை சுவைப்பதற்காக கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா மற்றும் மாம்பழ ஜூஸ் போன்ற இனிப்புகளை எடுத்துச்செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகள்
யுஜிசி அறிவுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 9 மாணவா்கள் ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை உயா் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உயா் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளை பயில்வது தொடா்பாக யுஜிசி சாா்பில் அண்மையில் நடைபெற்ற 589-ஆவது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
முரண்பாடு ஏற்படாமல்
அதன்படி, ஒரு மாணவா் ஒரே நேரத்தில் இரு வேறு பட்டம், பட்டயப் படிப்புகளை நேரடியாக பயில முடியும். அந்தப் படிப்புகளுக்கான வகுப்புகள் ஒரே நேரத்தில் இருக்காத வகையிலும், அவற்றில் முரண்பாடு ஏற்படாத வகையிலும் தேவையான நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், ஒரு படிப்பு நேரடியாகவும், மற்றொரு படிப்பு தொலைநிலைக் கல்வி அல்லது இணையவழியில் பயிற்றுவிக்கப்படலாம். யுஜிசியின் அங்கீகாரத்தைப் பெற்ற உயா்கல்வி நிறுவனங்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இந்த வழிகாட்டுதல்கள் பி.எச்டி. தவிா்த்து பிற படிப்புகளுக்கு பொருந்தும். இவற்றை கருத்தில்கொண்டு உயா் கல்வி நிறுவனங்கள் விருப்பமுள்ள மாணவா்களுக்கு ஒரே நேரத்தில் இரு வேறு படிப்புகளை பயிலுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.