இராமகிருட்டிணன் ஒரு கொள்கைச் செல்வம் – எங்களால் உருவாக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை – அவரை என்றைக்கும் நாங்கள் பிரித்துப் பார்த்ததே கிடையாது!
அன்றைக்கு எங்களுடைய உள்ளத்தில் பதிந்த இராமகிருட்டிணன், என்றைக்கும் எங்கள் உள்ளத்திலிருந்து வெளியேறியதே இல்லை!
கோவை, ஜூன் 9 இராமகிருட்டிணன் ஒரு கொள்கைச் செல்வம். இராமகிருட்டிணன் எங்களால் உருவாக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை. அவரை என்றைக்கும் நாங்கள் பிரித்துப் பார்த்ததே கிடையாது. அன்றைக்கு எங்களுடைய உள்ளத்தில் பதிந்த இராமகிருட்டிணன், என்றைக்கும் எங்கள் உள்ளத்திலிருந்து வெளியேறியதே இல்லை. அவருக்குப் பிறந்த நாள் விழா, அதில் நாங்கள் கலந்து கொள்கின்றோம் என்று சொன்னால், மகிழ்ச்சி, மகிழ்ச்சி பெருத்த மகிழ்ச்சி என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
கோவை இராமகிருட்டிணன்
75 ஆம் ஆண்டு பவள விழா –
தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
75 ஆம் ஆண்டு பவள விழா –
தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
கடந்த 4.5.2025 அன்று கோவையில் நடைபெற்ற கோவை இராமகிருட்டிணன் 75 ஆம் ஆண்டு பவள விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்..
அவரது வாழ்த்துரை வருமாறு:
எங்களுடைய அன்பு கொள்கைச் செல்வம் கோவை இராமகிருட்டிணன்
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய எங்களுடைய அன்பு கொள்கைச் செல்வம் கோவை இராமகிருட்டிணன் அவர்களுடைய பவள விழா என்ற இந்த சிறப்புமிகுந்த வாழ்த்தரங்கத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போராட்டமே தனது வாழ்க்கை – வாழ்க்கையே போராட்டம்!
இன்றைக்கு நாம் திரண்டிருப்பது யாருக்காக? இதோ போராட்டமே தனது வாழ்க்கை – வாழ்க்கையே போராட்டம் என்று ஒருவர் கொள்கிறார் என்றால், அவர், நம்மால் உருவாக்கப்பட்ட அருமைத் தோழர் கு.இராம கிருட்டிணன் அவர்கள்.
‘‘கு.இரா. கு.இரா.’’ என்று சொன்னார்கள்; அவர் எப்பொழுதுமே கூராகத்தான் இருப்பார்; அதிலொன்றும் சந்தேகமேயில்லை, முனை மழுங்கமாட்டார். ‘‘வெண்ணி லாவும், வானும் போலே’’ என்று புரட்சிக்கவிஞர் அவர்களுடைய பாட்டை நாம் தெளிவாகத் தெரிந்தி ருக்கின்றோம்.
“வெண்ணிலாவும் வானும் போலே
வீரனும் கூர்வாளும் போலே
வண்ணப் பூவும் மணமும் போலே
மகர யாழும் இசையும் போலே
கண்ணும் ஒளியும் போலே எனது
கன்னல் தமிழும் யானும் அல்லவோ’’
என்று பாடல் எழுதிய புரட்சிக்கவிஞர், இன்று இருந்திருந்தால், ‘‘போராட்டமும், இராமகிருட்டிணனும் போலே’’ என்று எழுதியிருப்பார்.
அன்றைக்கு எங்களுடைய
உள்ளத்தில் பதிந்த இராமகிருட்டிணன், என்றைக்கும் எங்கள் உள்ளத்திலிருந்து வெளியேறியதே இல்லை!
உள்ளத்தில் பதிந்த இராமகிருட்டிணன், என்றைக்கும் எங்கள் உள்ளத்திலிருந்து வெளியேறியதே இல்லை!
ஏனென்றால், அவருடைய வாழ்க்கையே போராட்ட வாழ்க்கையாகும். முதன்முறையாக திராவிடர் கழகத்தில் இளைஞரணி உரு வாக்கப்பட்டது என்றால், அது இராம கிருட்டிணனுக்காக – அவருக்கான பொறுப்புக்காக உருவாக்கப்பட்டதாகும். அன்றைக்கு எங்களுடைய உள்ளத்தில் இருந்த இராமகிருட்டிணன், என்றைக்கும் எங்கள் உள்ளத்திலிருந்து வெளியேறியதே இல்லை. மற்றவர்களுக்கு வேண்டுமானால், புறத்தோற்றத்தில் வேறுவிதமாகத் தெரியலாம். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் எங்கள் இராமகிருட்டிணன், இராமகிருட்டிணன்தான். எங்களுடைய அரிய செல்வங்களில் ஒன்று.
என்னுடைய மருத்துவர்கள் சொன்னார்கள், நீங்கள் பயணம் செய்யவேண்டாம்; அதைத் தவிருங்கள் என்று சொன்னார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. நமது இராமகிருட்டிணனைப் பாராட்டவேண்டும் என்பதற்காகத்தான் வந்திருக்கின்றேன்.
தத்ரூபமாக செய்து காட்டிய
தோழர் சத்யராஜ்!
தோழர் சத்யராஜ்!
தன்னுடைய 95 ஆவது வயதில்கூட, இயற்கையான வழியில் சிறுநீர் வெளியேறுவதற்கு வாய்ப்பில்லாமல், ஒரு ஓட்டை போட்டு, அதில் ரப்பர் குழாயைச் செலுத்தி, அதன்மூலமாக சிறுநீர் வெளியேறும். அந்த ரப்பர் குழாய் நகர்ந்தால் வலி ஏற்பட்டு, “அம்மா, அம்மா’’ என்று முணுகுவார். அதையெல்லாம் “பெரியார்’’ திரைப்படத்தில் அப்படியே தத்ரூபமாக செய்து காட்டிய தோழர் சத்யராஜ் இங்கே இருக்கிறார்.
தந்தை பெரியாரின் கடைசி முழக்கம்!
24.12.1973 அன்று – தனது இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், டிசம்பர் 19 ஆம் தேதியன்றுகூட கடைசி முழக்கத்தை அய்யா பெரியார் அவர்கள் முழங்கிய நேரத்தில், ‘‘அய்யோ, அம்மா’’ என்று வலியோடு புலம்பிக்கொண்டே பேசினார்.
‘‘உங்களுக்கெல்லாம் இரண்டு கால்கள், இரண்டு கைகள். ஆனால், எனக்கோ, ஆறு கால்கள்’’ என்றார்.
இதைக் கேட்ட எல்லோரும் அதிசயப்பட்டார்கள். என்ன இப்படி பெரியார் அய்யா பேசுகிறாரே? என்று.
‘‘ஆம்! என்னுடைய வயது காரணமாக, என்னால் எழுந்து நடக்க முடியவில்லை. அதன் காரணமாகத்தான், இந்தப் பக்கம் ஒரு தோழர் என்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்; அந்தப் பக்கம் இன்னொரு தோழர் தாங்கிக் கொண்டிருக்கிறார். ஆக, தோழர்கள் இரண்டு பேருக்கு நான்கு கால்கள்; எனக்கு இரண்டு கால்கள், ஆக மொத்தம் ஆறு கால்கள்’’ என்று சொல்லி, ‘‘என்றாலும், நான் இந்தக் கொள்கை முழக்கத்தை விடப் போவதில்லை; மக்கள் மாறுகின்ற வரையில் இதைச் செய்வேன்’’ என்று சொன்னார்.
அந்தக் காலத்து பகுத்தறிவு ஞானமேதை!
வள்ளலார் எழுதியதாக ஒரு பாட்டைச் சொல்வார்கள்; அவர் எழுதினாரா, இல்லையா என்பதுகூட விவாத அளவில் இருக்கிறது.
வள்ளலார் சொன்னார் என்பது பெரிய அளவில் அறியப்பட்டு இருக்கின்ற காரணத்தினால், அந்த ஒரு வரியை உங்களுக்குச் சொல்கிறேன்.
‘‘கடைவிரித்தோம் கொள்வாரில்லை; கட்டி விட்டோம்’’ என்று அவர் சலிப்போடு கட்டிவிட்டார் வடலூர் வள்ளலார், அந்தக் காலத்து பகுத்தறிவு ஞானமேதை. ஆறாம் திருமுறையில், தான் ஏற்றுக்கொண்ட பழைய கருத்துகளையெல்லாம் தூக்கி எறிந்து, ஒரு புரட்சிகரமான சிந்தனைக்கு ஆட்பட்டார்.
பதவி நாடாத ஓர் இயக்கம்,
புகழ் தேடாத ஓர் இயக்கம்!
புகழ் தேடாத ஓர் இயக்கம்!
ஆனால், அதற்குப் பிறகு மிகப்பெரிய அளவிற்கு ஒரு புரட்சி இயக்கத்தை, சுயமரியாதை இயக்கத்தை இன்று திராவிடர் கழகமாக இருக்கக்கூடிய கழகத்தை அன்றைக்கு நீதிக்கட்சியோடு இணைத்து உருவாக்கப்பட்ட ஓர் இயக்கத்தை, சமூக இயக்கத்தை, பதவி நாடாத ஓர் இயக்கத்தை, புகழ் தேடாத ஓர் இயக்கத்தை, வருவாயைப்பற்றி கவலைப்படாத ஓர் இயக்கத்தை – ஆயிரம் இராமகிருட்டிணன் போன்று உணர்வு படைத்த இளைஞர்களை வைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கத்தைத் தந்தை பெரியார் உருவாக்கினார் என்றால், அது சாதாரணமானதல்ல. அந்த சுயமரியாதை இயக்கத்திற்கு இந்த ஆண்டு நூற்றாண்டு என்பது ஒரு சிறப்பு.
இராமகிருட்டிணன் போன்ற தொண்டர்களுக்குத் தோழர்களுக்கு, கொள்கைச் செல்வங்களுக்கு, சுய மரியாதை வீரர்களுக்கு 75 ஆண்டு. ஆனால், இந்த இயக்கம் தொடங்கி நூற்றாண்டு விழா காண்கிறது.
சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, சொரணையற்ற மக்களுக்கெல்லாம் அதனை உருவாக்கித் தந்த தந்தை பெரியார் அவர்கள் நடத்திய ‘குடிஅரசு’ ஏடு. அந்தப் பச்சை அட்டை ‘குடிஅரசு’தான் மிகப்பெரிய அளவிற்குப் புரட்சி செய்த ஏடு.
அந்தப் பச்சை அட்டை ‘குடிஅரசு’ ஏட்டிற்கு மே 2 ஆம் தேதி நூற்றாண்டு நிறைவு. இன்றைக்கு மே 4 ஆம் தேதி.
காலம் எவ்வளவு அற்புதமானவற்றை சாதித்தி ருக்கின்றது என்பதற்கு இவை அடையாளங்களாகும்.
எனவேதான், இராமகிருட்டிணன் பிறந்த நாளில் நாங்கள் கலந்துகொள்கிறோம்; நாம் அனைவரும் கலந்துகொள்கிறோம் – நெஞ்சார வாழ்த்துகிறோம், பெருமைப்படுகின்றோம் என்று சொன்னால், அது வெறும் பாராட்டுக்காக அல்ல; அது வெறும் புகழுரைக்காக அல்ல. அவர் என்றைக்கும் சோர்ந்து போனவர் அல்ல; இருந்தாலும், இன்னும் அவரை வேலை வாங்கவேண்டும் என்கின்ற மனிதகுலத்தினுடைய சுயநலத்தினால்தான் பாராட்டுவது!
அதிகமாக உழைக்கவேண்டும் என்பதற்குரிய அச்சாரத்தைப் பெறுவது!
திராவிடர் கழகத்துக்காரர்கள் பாராட்டு பெறுவதற்கும்; மற்றவர்கள் பாராட்டு பெறுவதற்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு.
நாம் பாராட்டுப் பெறுவது, இன்னும் அதிகமாக உழைக்கவேண்டும் என்பதற்குரிய அச்சாரத்தைப் பெறுவது போன்று.
பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுகின்ற நேரத்தில், நாங்கள் எல்லாம் பிறந்த நாள் விழாக்களுக்கு அவ்வளவு சுலபமாக ஒப்புக்கொள்வதில்லை.
என்னுடைய பிறந்த நாளை நான் கொண்டாட விரும்புவதில்லை. அன்று நான் வீட்டிலும் இருக்க மாட்டேன்; நான் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தி னரும் வீட்டில் இருக்கமாட்டார்கள். திண்டுக்கல் பூட்டை வீட்டிற்குப் போட்டிருப்போம். வழக்கமாக என்னுடைய கார் ஓட்டுநரை கூட அன்று அழைத்துச் செல்லமாட்டேன். என்னுடைய மகனோ, பேரப் பிள்ளையோ தான் கார் ஓட்டுவார்கள். எனக்கே தெரியாது எங்கே போகிறோம் என்று; எனக்கே தெரியாமல், என்னுடைய இல்லத்தினர் வெளியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பார்கள், இரவு 10 மணியளவில்தான் இல்லத்திற்குத் திரும்புவோம்.
பாராட்டையும், வாழ்த்தையும் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல!
அய்யாதான் சொல்வார், ‘‘எவ்வளவு வசவுகளை வேண்டுமானாலும் கேட்டுப் பழக்கப்பட்டவர்கள் சுயமரியாதைக் இயக்கத்தவர்கள்; ஆனால், பாராட்டையும், வாழ்த்தையும் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருப்பது என்பது சாதாரண விஷயமல்ல’’ என்று சொல்வார்.
ஏனென்றால், நாம் அதிகமாகப் பெறுவது வாழ்த்துகளை அல்ல; வசவுகளைத்தான். அது தான் நம்முடைய கொள்கை வாழ்க்கைக்குப் போடப்படுகின்ற உரங்களாகின்றன. அதனால்தான், இன்றைக்கும் பல தொல்லைகள்; அன்றாட வாழ்வில் பல சிக்கல்கள்; மிசா போன்றவற்றை சாதாரணமாகத் தாண்டி வந்திருக்கின்றோம். இன்னுங்கேட்டால், மிசாவில்கூட ஒரு ஜாதி முறை போன்ற வேறுபாடு உண்டு. இவர்கள் எல்லாம் பிராமண மிசா; நாங்கள் எல்லாம் சூத்திர, பஞ்சம மிசா.
திராவிட மாடல்’ ஆட்சியினுடைய தனித்தன்மையான முதலமைச்சர்!
நாம் பெற்றிருக்கின்ற இன்றைய முதலமைச்சர், ஒப்பற்ற முதலமைச்சர் இந்தியாவே பின்பற்றக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய தனித்தன்மையான முதலமைச்சர்.
அன்றைக்கு நாங்கள் மிசாவில் சென்னை சிறைச்சாலையில் இருந்தபோது, அவரை அடித்து, ரத்தம் சொட்டச் சொட்ட, எட்டடிக் கொட்டடியில் கொண்டு வந்து தள்ளினார்கள்.
ஆனால், இங்கே – சவுகரியமான இடம் கோயம்புத்தூர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இவர்களையெல்லாம் கொஞ்சம் மனிதத் தன்மையோடு நடத்தினார்கள். இன்றைய இளைய தலைமுறையினர் இதனைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
எடுத்தவுடனேயே இன்றைக்கு முதலமைச்சர் கனவு பல பேருக்கு! ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராகக் கூட, அமைச்சராகக்கூட ஆகவேண்டும் என்ற கட்டாயமோ, அவசியமோ எதுவும் இல்லை. அதன்படியே, மிக உயர்ந்த இடத்தில் ‘இனமுரசு’ சத்யராஜ் இருக்கிறார். உலகளாவிய அளவிற்கு அவருக்குச் செல்வாக்கும், பெருமையும் இருக்கிறது.
எந்தக் காலத்திலும் சபலங்களுக்கு ஆளாகாத ‘இனமுரசு’ சத்யராஜ்!
அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, அங்கே இருக்கின்ற தமிழர்களுக்கு, ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்கள், இங்கிருந்து ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வருகிறார், வழக்குரைஞர் அருள்மொழி வருகிறார்; அவர்களைச் சிறப்பாக வரவேற்று – சிறப்புச் செய்யுங்கள் என்று சொன்னார்.
சபலங்களுக்கு ஆளாகி, ‘‘இதோ ஒருவர் அரசியல் கட்சி தொடங்குகிறார்; நாளைக்கு முதலமைச்சராக ஆகப் போகிறார்’’ என்றெல்லாம் கனவு காண்கிறார்கள்.
பெரியாராகவே கொள்கை வாழ்வில் மாறிவிட்டவர் எங்கள் இனமுரசு சத்யராஜ்!
ஆனால், எந்தக் காலத்திலும் சபலங்களுக்கு ஆளாகமாட்டார்; எதையாவது சொல்லி இவரை மட்டும் ஏமாற்றவே முடியாது. காரணம், பெரியாராகத் திரைப்படத்தில் நடித்தவர் மட்டுமல்ல; பெரியாராகவே கொள்கை வாழ்வில் மாறிவிட்டவர் எங்கள் இனமுரசு சத்யராஜ் அவர்கள்.
அவர் யாரைப் பாராட்டுகிறார்?
இராமகிருட்டிணன் போன்றவர்களைப் பாராட்டுகிறார்.
இராமகிருட்டிணன் எங்களால் உருவாக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை!
இராமகிருட்டிணன் ஒரு கொள்கைச் செல்வம். இராமகிருட்டிணன் எங்களால் உருவாக்கப்பட்ட எங்கள் வீட்டுப் பிள்ளை. அவரை என்றைக்கும் நாங்கள் பிரித்துப் பார்த்ததே கிடையாது.
அவருக்குப் பெருமை என்று சொன்னால், அவருக்குப் பிறந்த நாள் விழா என்று சொன்னால், அதில் நாங்கள் கலந்துகொள்கின்றோம் என்று சொன்னால், மகிழ்ச்சி, மகிழ்ச்சி பெருத்த மகிழ்ச்சி!
எங்களையே நாங்கள் பாராட்டிக் கொள்வது; எங்க ளையே நாங்கள் வாழ்த்திக் கொள்வது போன்றதாகும்.
ஒரு காலத்தில் என்ன சொன்னார்கள், எழுதினார்கள் தெரியுமா?
‘‘பெரியார் இயக்கமா? அது அவரோடு தீர்ந்துவிடும்’’ என்றார்கள்.
உமாசங்கர் தீட்சித் என்ற ஒருவர், டில்லி முதலமைச்சராக இருந்த ஷீலா தீட்சித் அவர்களின் மாமனார்; உள்துறை அமைச்சராகவும் அவர் இருந்தார். அவர் நேரு வீட்டு கணக்குப்பிள்ளை.
இதே தெப்பக்குளம் மைதானம், இங்கு நடந்த பொதுக்கூட்டமொன்றில் அய்யா பேசுகிறார். நானும் அந்தக் கூட்டத்தில் அய்யாவோடு இருந்தேன். அந்தக் கூட்டத்தை இராமகிருட்டிணன் அவர்களும், வழக்குரைஞர் கஸ்தூரி அவர்களும் தலைவராக இருந்து நடத்தினார்கள்.
(தொடரும்)