சென்னை, மே 29 சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் முதுகலை பட்டப்படிப்பு
இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (Integrated M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டி கையேட்டை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, நேரிலும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், ‘இயக்குநர், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 2-ஆவது முதன்மை சாலை, மய்ய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்ன 600113’ என்ற முகவரியில் ஜூன் மாதம் 27-ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: இப்படிப்பில் சேரும் மாணவர்களில், தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச விடுதி உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்திலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் விளம்பரப் பலகை அமைப்பதற்கு உரிமம் பெற ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்கும் வசதி
மாநகராட்சி ஏற்பாடு
மாநகராட்சி ஏற்பாடு
சென்னை, மே 29 சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்கும் வசதியை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.
விளம்பரப் பலகை
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது
இணைய வழி விண்ணப்பம்
இந்த முறையின் மூலம், மாநகராட்சிப் பகுதி களில் விளம்பரப் பலகைகள் அமைப்போர் தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனிலேயே சமர்ப்பித்து உரிமம் பெற முடியும். இந்த நடைமுறை, வெளிப்படைத் தன்மை, திறமையான நிர்வாகம் மற்றும் மக்களுக்காக மய்யப்படுத்தப்பட்ட சேவையை வழங்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்டது.
ஒற்றைச் சாளர குழு
கடந்த மே 21 முதல் அனைத்து விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கும் அனுமதி கோரும் விண்ணப்பங்கள், மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிப்பதற்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஒற்றைச் சாளர குழுவின் முன் வைக்கப்படும். இந்தக் குழுவானது மாதந்தோறும் ஒருமுறை கூடி, உரிய அனுமதி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஏற்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திய பிறகு இறுதி அனுமதி வழங்கப்படும். இது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல்கள் மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.