திருச்சி சிறுகனூர் பெரியார் உலகத்தில் பணியாற்றும் தோழர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டி – குருதிக் கொடை முகாமும் நடைபெற்றது

viduthalai
2 Min Read

திருச்சி, மார்ச் 19 திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இங்கு 95 அடி உயரத்தில் பெரியார் சிலையும், அதில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறுவர்களுக்கான பூங்கா, நூலகம், ஆராய்ச்சி மய்யம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற உள்ளன.

திராவிடர் கழகம்

விளையாட்டுப் போட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி, இதற்கான பணிகள் கடந்த 2024, செப்டம்பர் 14 இல் தொடங்கி கடந்த 7 மாதகாலமாக படிப்படியாக பணிகள் நடைபெற்று வருகிறது. CBRE அதிகாரி காசிவிஸ்வநாதன் மற்றும் PSRPI அதிகாரிகள் மேற்பார்வையில் எந்தவித அசம்பாவிதமின்றி ஒரு இலட்சத்து ஆயிரத்து, எண்ணூறு மணி நேரம் பாதுகாப்பாக பெரியார் உலகத்தில் பணியாற்றி வருகிற பணித்தோழர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 54 ஆவது தேசிய பாதுகாப்பு வாரத்தையொட்டி OCEAN பன்னாட்டு கட்டுமான நிறுவனம், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமும் இணைந்து பணித் தோழர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தின. இதனை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயற்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் இன்று (மார்ச் 19) தொடங்கி வைத்தார்.

திராவிடர் கழகம்

மேலும் பெரியார் உலகத்தில் பணியாற்றும் புலம் பெயர்ந்த பணித்தோழர்கள் தேசிய பாதுகாப்பு வார உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பணித்தோழர்கள் கலந்து கொண்டனர். வயதின் அடிப்படையில் மூன்று பிரிவாக மூன்று விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் ரமேஷ், பேராசிரியர் இளங்கோவன், பெரியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கோகுல் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்டன. அனைத்து பணித்தோழர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். OCEAN கட்டுமான பொறியாளர்கள் காசி விஸ்வநாதன், அரிகரன், நவீன், வெங்கட், PSRPI கட்டுமான பொறி யாளர்கள் ஜெயபிரகாஷ், முஜிபுர் ரகுமான், பாஸ்கர் ஆகியோர் ஒருங் கிணைப்பில் விழா சிறப் பாக நடைபெற்றது.

வீ. அன்புராஜ்
பரிசு வழங்கினார்

நிறைவாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 27 பணித்தோழர்களுக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயற் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் பரிசு, பதக்கம் வழங்க, பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். பரிசு பெற்ற பணித்தோழர்கள் ‘பெரியார் வாழ்க’ என முழக்கமிட்டனர்.

குருதிக் கொடை

மணப்பாறை அரசு மருத்துவமனை இரத்தவங்கிக்கு பெரியார் உலகத்தில் பணியாற்றும் OCEAN நிறுவன கட்டுமான பணித்தோழர்கள் குருதிக் கொடை வழங்கினர். குருதிக் கொடை நிகழ்ச்சியை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயற்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மருத்துவக்குழுவினர் உதவி மருத்துவர் வி.பி. பிரபாகரன், செவிலியர்கள் செல்வராணி, மணிமாலா, ஆய்வக நுட்புநர் தமிழ்வேந்தன், ஆலோசகர் காட்சன், ரஜினிகாந்த், தொழில்நுட்புநர் ஆர்.சிவா ஆகியோர் இரத்ததான முகாமினை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து பெரியார் உலகம் கட்டுமான பணிகளை பொறியாளர்களுடன் சென்று பார்வையிட்டு, பின்னர் பொறியாளர்களுடன் கட்டுமானப் பணிகள் குறித்து பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயற்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *