ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியான பாலேஷ் தன்கர் (43) பாஜகவின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தலைவராகவும், இந்து மத ஆணையத்தின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ, டொயோட்டா மற்றும் சிட்னி ரயில்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பாலேஷ் தன்கர் சொந்தமாக ஒரு நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள தனது தொழில் நிறுவனத்தில் பாலேஷ் தன்கர் வேலை தேடிவந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிட்னி காவல்துறை பாலேஷ் தன்கர் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட படக்கருவி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
படக்கருவியில் 5 தென் கொரியாவைச் சேர்ந்த பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவும் பதிவாகி இருந்தது. இதனையடுத்து பாலேஷ் தன்கர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகள் அனை த்தும் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன. 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் பாலேஷ் தன்கர் குற்றவாளி என மாவட்ட நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிங் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் தீர்ப்பில், “பெண்களை பாலேஷ் தன்கர் பாலியல் வன்கொடுமை செய்யவே முன்னேற்பாடாக வேலை தருவதாக தனது நிறுவனத்திற்கு அழைத்துள்ளார். பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை துல்லியமாக திட்டமிடப்பட்டது மற்றும் மிகவும் கொடூரமானதுமாகும். குறிப்பாக இளம் பெண்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட கொடூரமான நடத்தையின் தொடர்ச்சியாகும். இதனால் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படு கிறது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்பட முடியாதபடி தீர்ப்பில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது” என மாவட்ட நீதிமன்ற நீதிபதி மைக்கேல் கிங் உத்தரவிட்டார். தன்கரின் 40 ஆண்டுகள் முழு தண்டனையும் முடிந்தபோது அவருக்கு 83 வயது இருக்கும்.
பெண்கள் என்றால் போகப் பொருள் என்று கருதும் கேடு கெட்ட மனப்பான்மை – இங்கு அங்கின்றி உலகம் முழுவதும் இறுக வேரூன்றியுள்ளது.
பெண்கள் என்றால் உடல் அளவில் பலகீனமானவர்கள் என்ற எண்ணக் கொழுப்பு சமுதாயத்தில் நிலவி வருகிறது.
தங்கள் சதை வலிமையால் (Muscle Power) பெண்களை அடக்கியாளலாம் என்ற ஆணவத் திமிர் ஆண்களிடம் இருப்பது ஒழிக்கப்பட வேண்டும்.
ஆஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் (30 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாத) தண்டனையை நீதிமன்றம் அளித் திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
நம் ‘திராவிட மாடல்’ அரசும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று சட்டம் செய்திருக்கிறது.
பெண்களே, கல்வியோடு உடல் வலிமை யையும் வளர்த்துக் கொள்ளுங்கள். நான்கு இடத்தில் ஆண் காம வெறியர்கள் பெண்களால் தாக்கப்பட்டு ஓடினர் என்ற செய்தி வந்தாலே போதும் – இந்த ஆண் அயோக்கிய சிகாமணிகளின் கொட்டம் ஒடுங்கி விடும்! வீராங்கனைகள் என்பது வெறும் வார்த்தைகளில் மட்டும் இருந்து பயனில்லை.