நாவலர் இரா. நெடுஞ்செழியன்
தந்தை பெரியார் அவர்கள் 1926 முதல் ஹிந்தி மொழித்திணிப்பின் உள்ளே இருக்கும் சூழ்ச்சிகள் குறித்தும் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்தும் எழுதி வந்திருகிறார்.
ஹிந்தித் (சமஸ்கிருதத்) திணிப்பை எதிர்த்து 1938 இல் தொடங்கிய ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக்கு எதிரான போராட்டம் இன்று வரை பலகட்டங்களாக தொடர் போராக – நடைபெற்று வருகிறது!
1947இல் “சுயராஜ்யம்” வந்தது என்று பறை சாற்றிய பின், வடமொழியின் வார்ப்புகளில் -வளர்ப்புகளில் ஒன்றாகிய ஹிந்தியை – ஒன்றிய ஆட்சியின் மூலம் திணிக்க முயன்றபோது மொழிப் போராட்டம் 1948 இல் மீண்டும் தொடங்கியது. திராவிடர் கழகம் – இயக்கம் பிரிவு பெறாத நிலையில் எப்படி நடந்தது? ஏன் இம்மொழிப் போராட்டம்? இது வெறும் மொழிக்காக மட்டும் தானா? என்பவற்றை விளக்கி நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்டு 1948 இல் வெளியான கடடுரைகளைத் தொடராக வெளியிடுகிறோம்.
திராவிடர் பண்பாட்டு தளத்தைப் பாதுகாக்க தொடர்ந்த தமிழன் தொடுத்த போரின் அடுத்த கட்டங்கள் தொடர்கின்றன.
இளைஞர்களே! மாணவர்களே! மொழி, இன உரிமை, வல்லாதிக்க எதிர்ப்பு – தடுப்பு – ஒழிப்புக்கானதே ஹிந்தி எதிர்ப்பு வேலைத் திட்டம் என்பதை இத்தொடர் விளக்கும்.
(ஆ – ர் )
அன்றும் – இன்றும்
பத்து ஆண்டுகள் உருண்டோடிய பிறகு மீண்டும், மொழிப் போராட்டம் தமிழ்நாட்டில் எழுந்துள்ளது.
1938இல் சென்னை மாகாணத்தில், காங்கிரஸ் கட்சியினர் மந்திரி சபையிலிருந்தபொழுது, இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக நடுத்தரப் பள்ளிகளில் வைத்தனர். அரசியலாரின் அந்தப் போக்கு, கல்விமுறை பற்றிய சிறு மாறுதலாகக் கருதப்படவில்லை; தமிழ் நாட்டிற்குப் பொருந்தாத ஒரு செயலாகவே கருதப்பட்டது. தமிழ் மொழி அறிஞர்களும், மொழியாராய்ச்சியாளர்களும் அதை எதிர்த்தனர். இந்தி மொழி கட்டாயம் என்றதும் அப்பொழுது கரூர் அறிவுதயக் கழக ஆசிரியராக விளங்கிய ஈழத்துச் சிவானந்த அடிகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் ச.சோமசுந்திர பாரதியார், பல்லாவரம் பொது நிலைக்கழக ஆசிரியர் மறைமலையடிகள், பல்கலைப் புலவர் கா. சுப்பிரமணிய பிள்ளை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள், த.வே. உமாமகேசுவரம் பிள்ளை, பெரும் பேராசிரியர் உ. வே.சாமினாதையர் முதலானோர் அரசியலாரின் கொள்கையைக் கண்டித்தனர்.
இந்தி, இந்நாட்டுக்கு ஏற்றதல்ல
இவர்களது மொழிப்புலமை பற்றியோ, தமிழ்மொழி பற்றி பேசுவதற்கான தகுதி பற்றியோ எவரும் குறைகூற முடியாது. தமிழ் மொழியின் தலைசிறந்த ஆசிரியர்களாக விளங்கிய அனைவரும் ஒருமித்துக் கூறினர். “இந்தி, இந்நாட்டுக்கு ஏற்றதல்ல; அவசியமுமில்லை; பயனுமளிக்காது. பயனில்லை என்பது மட்டுமல்ல, இந்தியால் தமிழ்மொழி சீரழிந்து, சிதைந்து, நலங்கெடும்” என்று திருச்சியில் அன்று கூடிய மாபெரும் தமிழர் மாநாட்டில்
பெரியார் ஈ.வெ.ரா., ச.சோ.பாரதியார், கா.சு.பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை போன்றவர்கள் ஒன்று சேர்ந்து தீட்டிய தீர்மானங்கள் ஆட்சிப் பீடம் அமர்ந்தோர்க்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் அத் தீர்மானங்கள் அரசியலாரின் திட்டத்தை மாற்றுவதாயில்லை.
காங்கிரஸ் மந்திரிகளும், இந்தி ஆதரிப்பாளர்களும் இடைவிடாது கூறிவந்த கூற்றுக்களை மறுத்து, “இந்தி பொது மொழியல்ல” என்ற ஆராய்ச்சிக் கருத்துக்கள் பொதிந்து கிடக்கும் சிறுநூல் ஒன்றைப் பேராசிரியர் மறைமலையடிகள் எழுதினார். அவரது கூற்றுக்கு மறுப்பு இன்று வரையிலும் வெளிவரவில்லை. காங்கிரஸ் மந்திரி சபையின் போக்கைக் கண்டித்து, நாவலர் பாரதியார் முதலமைச்சர் ஆச்சாரியாருக்குப் பகிரங்கக் கடிதம் ஒன்று விடுத்தார். பாரதியார் அன்று வரைத் தீவிரக் காங்கிரஸ்வாதியாக இருந்தவர்; பல்கலைக் கழகப் பேராசிரியராகவும் இருந்தவர். எனவே அவரது மொழிப் புலமையையும், காங்கிரஸ் பற்றையும் எவருமே அய்யுற முடியாது. அவரது பகிரங்கக் கடிதத்திற்குப் பதில் எதுவும் வரவில்லை. அறிஞர் குழுவிலிருந்து கிளம்பிய ஆராய்ச்சியுரைகளும், அறிவுரைகளும், தெளிவுரைகளும் அமைச்சர் குழுவின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டும்படி செய்துங்கூட, ஆட்சிப்பீடம் காணாக் கண்ணையும், கேளாக் காதையுமே கொண்டிருந்தது. அந்த அளவுக்கு ‘அலட்சியம்’ ஆணவத்தோடு அரியணை வீற்றிருந்தது!
கண்டனக் கூட்டங்கள்
மொழிப் பிரச்சினை அறிஞர் குழுவில் மட்டும் விவாதிக்கப்படவில்லை; விவாதம் மக்கள் மன்றத்திற்கும் இழுத்துச் செல்லப்பட்டது. பெரியார் ஈ.வெ.ரா., அறிஞர் சி. என்.அண்ணாத்துரை, தமிழ் வீரர் கே.ஏ.பி.விசுவநாதம் போன்றவர்கள் மக்கள் மன்றத்தின் நடுவே நின்றனர். கல்வி முறையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சினை படிப்படியாக அரசியல் உலகில் தலைதூக்கியது. புயல் வீசத் தொடங்கியது. நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள்; எதிர்ப்பு ஊர்வலங்கள். மாநாடுகள் பல நடைபெற்றன; கண்டனத் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன. எதிர்ப்பொலிகள் கோட்டையை நோக்கிக் கிளப்பப்பட்டன. ஆச்சாரியார் மந்திரி சபை அசைந்து கொடுப்பதாயில்லை. “ஒரு ராமசாமி நாயக்கரின் கூக்குரலுக்குப் பயந்து, மந்திரி சபை தன் முடிவை மாற்றிக்கொள்வதா? ஆளுவது நானா? அல்லது இந்த ராமசாமி நாயக்கரா?” என்று இறுமாப்புடன் கூறினார், கண்ணன் காட்டிய வழியின் ஆசிரியர் ஆச்சாரியார். ஆனால் காலங் காட்டிய வழி வேறாயிருந்தது.
இந்திக்கு எதிர்ப்பு வலுத்து; இந்தி எதிர்ப்பு இயக்கம் உருண்டு திரண்டது. பிரச்சினை பேசுங் கட்டத்தைக் கடந்து, போராட்டக் கட்டத்தை அடைந்தது. போராட்ட வீரர்கள் சென்னை நோக்கி விரைந்தனர். பாசறை அமைக்கப்பட்டது; களங் காணப்பட்டது. சென்னை இந்து தியாலாஜிகல் உயர்நிலைப் பள்ளியின் முன் மறியல் போராட்டம் துவங்கியது. தோழர் சி.டி.நாயகம், கருவூர் அறிவுதயக் கழக ஆசிரியராக இருந்த ஈழத்து சிவானந்த அடிகள் முதலாயினோர் ஆணையாளராக நியமிக்கப்பட்டனர். மறியல் ஆரம்பித்ததும் மந்திரி சபை அடக்குமுறைக் கடுமையை வீச ஆரம்பித்தது. வீட்டிற்குள் வந்தவனை விரட்டியடிக்கக் கையில் கிடைத்ததை உபயோகிப்பேன் என்று முதலமைச்சர் ஆச்சாரியார் பேசினார். எந்த இந்திய பீனல் கோடு சட்டத்தை உடைத்தெறியப் போவதாகக் காங்கிரஸ் வீரர்கள் வீர முழக்க மிட்டனரோ அந்தப் பீனல் கோடு சட்டத்தை ஆட்சி மன்றம் ஏறிய பிறகு, அவர்கள் அணைத்து முத்தமிடத் தயங்கினார்களில்லை. அதிலிருந்து பிறந்த திருத்தச் சட்டங்கள் பலவும் இந்தி எதிர்ப்பாளர்கள் மீது வீசப்பட்டன.
தமிழகத்துக்குள் கேள்வி முறையில்லாது நுழைந்த இந்தியைத் தமிழ் மக்கள் எதிர்க்கத் துணிந்தனர். “வீட்டிற்குள் வந்தவனை விரட்டியடிக்கக் கையில் கிடைத்ததை உபயோகிப்பேன்” என்று ஆச்சாரியார் கூறினாரே உவமானம் அதுபோல, அது சற்று அவசரத்தில் – அவருக்காக – அவரால் சொல்லப்பட்டதாகும். உவமானம் அவருக்குப் பொருந்துவதைவிட தமிழக மக்களுக்குச் சரியாகப் பொருந்தக்கூடியதாகும். வீட்டிற்குடைய தமிழர்கள் வெளியிலிருந்து வந்த இந்தியை விரட்டியடிக்க ஆரம்பித்தார்கள், ஆச்சாரியார் சொல்லிக்காட்டி யதற்கொப்ப.
வீட்டிற்கொரு பிள்ளை தேவை
பெரியார் ஈ.வெ.ராமசாமி தலைமையின்கீழ் இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் நாடெங்கும் பரவிற்று. அதை அலட்சியப்படுத்தச் சொல்லிற்று ஆச்சாரியாரின் ஆணவம்; அதைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தது மக்களின் ஆர்வம். “நாட்டு மொழியைக் காக்க வீட்டிற்கொரு பிள்ளை தேவை” என்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் முழக்கமிட்டார். சர். ஏ.டி.பன்னீர்செல்வம், தோழர்கள் கே.ஏ.பி.விசுவநாதம், அ. பொன்னம்பலனார் போன்றவர்கள் நாட்டின் திக்கெட்டும் பவனி வந்து, வீரவுரை ஆற்றி வெற்றிக் களிப்பூட்டினர். காவியம் தீட்டும் கவிஞரிலிருந்து, கமண்டலம் ஏந்தி நாடு சுற்றிவரும் காவி வேட்டிக்காரர்கள் வரையுள்ள பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் பங்கு கொண்டனர். ஆயிரத்தைந்நூற்றுக்கு மேற்பட்ட அருந்தொண்டர்கள் சிறைக்கூடத்திலே தள்ளப்பட்டார்கள். பச்சிளங் குழந்தைகளைக் கையிலேந்திய நங்கைமாரும், தலைநரைத்துப்போன மூதாட்டியரும் வெஞ்சிறை நண்ணினர். மாதர் மாநாட்டில் தாய்மார்களே இந்தியை எதிர்த்துப் போரிடும்படியாகச் சொல்லித் தூண்டினார் என்ற குற்றமும், வேறோர் குற்றமும் சாட்டப்பட்டு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் , ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, பெரியார் ஈ.வெ.ரா. பெல்லாரி சிறையில் சாதாரணக் கைதியைப் போல சிறை வைக்கப்பட்டார். தோழர்கள் சி.என்.அண்ணாதுரை, சி.டி.நாயகம், அடிகள் போன்றோரும் தலைதாழாச் சிங்கமெனச் சிறையிலே கிடந்தனர். ஆச்சாரியார் அரசாங்கம் தாளமுத்து, நடராசன் என்ற இரு தொண்டர்களையும் மனிதர்களாக ஏற்று, திருப்பித் தரும்போது பிணங்களாகக் கொடுத்தது வேதனை மிகுந்த காட்சி! எனினும் வேதனையுள்ளங்கள் வெடி மருந்துச்சாலைகளாகவே காட்சியளித்தன.
கட்டாய இந்தி கைவிடப்பட்டது
தலைவர்களையும் தொண்டர்களையும் சிறையிலடைத்து விட்டால் இயக்கத்தின் வேகம் தணிந்து நசித்துவிடும் என்று மந்த மதியினர் எண்ணியிருந்தனர். அதற்கு மாறாக இயக்கம் வளர்ந்தது; எழுச்சி அடங்குவதாயில்லை. மந்திரிமார் களுக்குச் சென்ற விடமெல்லாம் எதிர்ப்பு. எதிர்ப்பின் அடையாளமாகக் கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டன. மந்திரிகள் திரும்பிப் பார்க்குந் திசைகளிலிருந்தெல்லாம் “திரும்பிப்போ” என்ற முழக்கம். எங்கணும் கண்டனம். ‘இந்தி ஒழிக’, ‘தமிழ் வாழ்க’ என்ற பேரொலி! மக்களின் நடுவிலே பவனி வரவேண்டிய மந்திரிகள் பதுங்கிச் சென்ற இடங்கள், ஓடிஒளிந்த சமயங்கள், கேட்ட கேள்விகளுக்குப் பதிலிறுக்க முடியாமல் ஓடிப்போன சந்தர்ப்பங்கள், பேசுவதற்கென அழைக்கப்பட்டுக் கைவிடப்பட்ட கூட்டங்கள், வெட்கித் தலைகுனிந்த நேரங்கள் எவ்வளவோ! “இவ்வளவு தூரம் தகராறு முற்றிவிடும் என்று தெரிந்திருந்தால் இதில் தலையிட்டிருக்கமாட்டேன்” என்று சொல்லி ஆச்சாரியார் மனங்கலங்கினார். ஆனால், மயக்கம் அப்பொழுதும் தீர்ந்தபாடில்லை. ‘ஒரு கை பார்த்து விடுவேன்’ என்று இறுமாப்புடன் கூறிய அந்த ஆரம்ப கட்டத்திலேயே இந்தத் தெளிவு பிறந்திருக்க வேண்டும்.
ஏனோ பிறக்கவில்லை!
சென்னையில் அலைகடலை யடுத்துப் பரந்து கிடக்கும் மணற்பரப்பில் – மக்கள் கடல், பலதடவைகள் தேங்கிற்று. மக்கள் இலட்சக் கணக்கில் கூடினர். மைல் கணக்கில் நீண்ட ஊர்வலங்கள் நடைபெற்றன. திருச்சியிலிருந்து பெரும்படையொன்று கிளம்பிச் சென்னையைச் சேர்ந்தது. இவ்வளவும் இந்தியைத் தமிழ்நாடு ஏற்காது என்று எச்சரிக்க, அந்த அளவு சக்தியை இந்தி எதிர்ப்பு இயக்கம் கொண்டிருந்தது ஆச்சரியமானது. எதிர்ப்பின் அளவும், சக்தியும் கூட அல்ல; அவ்வளவு மாபெரும் மக்கட்கடலை ஈர்த்த இயக்கம், மிக அமைதியான முறையில் நடந்ததுதான்.
மக்களின் எதிர்ப்புச் சக்தியைத் தாங்கமாட்டாமல், நாள்தோறும் நலிவடைந்து கொண்டிருந்த மந்திரி சபை, அகில இந்தியக் காங்கிரஸ் தீர்மானப்படி, ஆட்சிபீடத்தை விட்டு அகல வேண்டி நேரிட்டது. காங்கிரஸ் மந்திரி சபை கலைந்ததும், கட்டாய இந்தியும் கைவிடப்பட்டது. சிறைவாயிலும் திறக்கப்பட்டது, தலைவர்களும் தொண்டர்களும் வெற்றிக்களிப்போடு வெளியேறினர்.
இது ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்த விதமும் அதன் முடிவுமாகும்.
மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்பம்
இந்தி எதிர்ப்பு இயக்கத்தின் முடிவு மறுமலர்ச்சி இயக்கத்தின் ஆரம்பமாயிற்று. போராட்டம் நின்றவுடன் தமிழ்த்தென்றல் தமிழ் மக்களின் உள்ளங்களிலெல்லாம் வீசத்தொடங்கிற்று. மக்கள் உள்ளத்தில் அரும்பிய தமிழ்ப்பற்று பழந்தமிழ் இலக்கியங்களின் மீது தாவ ஆரம்பித்தது. அவைகளிலிருந்து தமிழகத்தின் நாட்டுவளம், மொழிவளம், இனப்பண்பாடு ஆகியவை புலப்பட்டன. மொழிப்பற்று இனப்பற்றிற்கும், இனப்பற்று நாட்டுப்பற்றிற்கும் கொண்டுபோய்விட, “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற உரிமை வேட்கைக் குரல் எழுந்தது.
தமிழகம் வடநாட்டானுக்கு சந்தைக்கடையாகவும், வெள்ளையனுக்கு வேட்டைக்காடாகவும் விளங்குவது மக்களுக்கு உணர்த்தப்பட்டது. ஆட்சி பீடத்திலிருந்து வெள்ளையனை நீக்கவும், வாணிகத்திலிருந்து வடநாட்டானை விரட்டவும் வேண்டும் என்ற உணர்ச்சி மக்களிடத்தே கிளர்ந்தெழுந்தது. இரண்டாவது போருக்குப்பின் உலகில் ஏற்பட்ட சூழ்நிலையின் காரணமாக, வெள்ளையன் தானாகவே விலகிச் செல்ல நேரிட்டது. தமிழகம் உள்ளிட்ட இந்திய துணைக்கண்டம் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிப்பிடியினின்றும் விடுதலை பெற்றது என்றாலும், அதற்குப் பிறகும் தமிழகம் (திராவிடம்) தனித்து வாழ வழியில்லாமல், வடநாட்டு ஏகாதிபத்திய ஆட்சிக்குட்பட்டு, முன்பிருந்ததைப் போன்ற நிலையிலேயே வாழும்படி ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தின் – அதாவது திராவிடத்தின் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வடநாட்டாரின் ஆதிக்கம் வளர்ந்தது. வடநாட்டு ஆதிக்கப் பிடியிலிருந்து தென்னாடு விலகித் தீரவேண்டும் என்ற எண்ணம் சற்று வலுவடைய ஆரம்பித்தது. அதன் விளைவாக, தமிழும் அதனைச் சேர்ந்த குழுமொழிகளும், அவைகளைப் பேசுவோரின் கலாச்சாரமும், வரலாறும் ஆகியவை வடநாட்டுக்கு முற்றிலும் மாறுபட்டனவாக விளங்குவதால் திராவிடம் வடநாட்டிலிருந்து பிரிவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற தெளிவு பிறந்தது. அதன் பிறகு திராவிடன், திராவிடம் என்ற உணர்ச்சி மக்களிடத்தே அரும்பத் தொடங்கவே “திராவிடநாடு திராவிடருக்கே” என்ற ஒலி திராவிடரின் இலட்சிய கீதமாக மாறிற்று.
மொழிப் போராட்டத்தில் உருவாகிய மறுமலர்ச்சி இயக்கம் கலாச்சார வரலாற்று ஆராய்ச்சிகளில் இறங்கி, பிரிவினைத் திட்டத்தை வலியுறுத்தும் அரசியல் இயக்கமாக மாறியது. வடநாட்டுப் பொருளாதார, அரசியல் பிடியிலிருந்து விடுதலையடைந்து, பேதமற்ற சமூக அமைப்பில் வாழுவதை அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்ட அந்த இயக்கம், திராவிடர் கழகமாகத் திகழ ஆரம்பித்தது. வடநாட்டின் பொருளாதாரச் சுரண்டலை எதிர்க்கும் சக்தியாக திராவிடர் கழகம் வளர்ந்தது; வளர்ந்து வருகிறது!