ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் தேவை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

viduthalai
2 Min Read

சென்னை, மார்ச் 11 ‘‘தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (10.3.2025) பேசுகையில், “தேசிய கல்விக்கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது” என்று தெரிவித்தார்.

கண்டனம்

அவரது பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. அதோடு ‘அநாகரிகமானவர்கள்’ என்ற வார்த்தையை தர்மேந்திர பிரதான் கூறியதற்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் அந்த வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

நாவடக்கம்

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என குறிப்பிட்டு தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில், ‘‘தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
அவமானப்படுத்துவதா?

தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்து கிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா? தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம்சிறீ திட்டத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?

பதில் என்ன?

பிரதான் அவர்களே, நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்!”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *