சென்னை,மார்ச் 9- மகளிர் நாளை முன்னிட்டு திமுக
எம்.பி. கனிமொழி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், பெண் கல்வி குறித்தும் பேசி இருந்தார்.
பெண் கல்வி இருந்தால்…
மகளிர் நாள் விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி,பேசும் போது இந்த சமூகம் உயரும் என்பதால்தான் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 கொடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பெண்கள் படித்தால் அதைவிட ஒரு சிறப்பான முதலீடு இந்த அரசாங்கத்திற்கு வேறு எதுவும் கிடையாது.
இந்தியாவிலேயே 42 சதவீதம் பெற்று தமிழ்நாடுதான் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முதலிடம். உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் இங்கு வேலை பார்க்கிறார்கள்.
இவர்கள் தமிழ், ஆங்கிலம் தெரியாமல் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அதனால், உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் தமிழ் சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கு நாங்கள் தேவையாக இருக்கும் போது எங்கள் மொழியை நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள். திராவிட இயக்கம் இன்று எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து சிலிக்கான் வெளி வேலைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறது. உலகம் முழுவதும் நமது மருத்துவர்கள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஹிந்தியை படித்து எங்களுக்கு ஒன்றும் ஆகப்போவது இல்லை”
ஹிந்தி படித்தால் என்னென் னவோ கிடைக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்ன கிடைக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நானும் டில்லியில்தான் இருக்கிறேன். ஹிந்தி தெரியாததால் எனக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை என திமுக
எம்.பி. கனிமொழி பேசினார்.