தமிழ்நாட்டுக்கு மும்மொழிக் கொள்கை தேவை இல்லை தமிழ்நாட்டுக்குரிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

2 Min Read

சென்னை,பிப்.22- தமிழ்நாட்டிற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கோபம்

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய கல்வி அமைச்சர் மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்காவிட்டால் ரூ.5 ஆயிரம் கோடி நிதியை தமிழ்நாடு இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டிருப்பது, தமிழ்நாடு மக்களிடையே அதிர்ச்சியையும், ஒன்றிய அரசின் மீது மிகுந்த கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இருமொழிக் கொள்கை

தமிழ்நாட்டில் அண்ணா போன்றோர் வழிகாட்டுதலின்படி, இருமொழிக் கொள்கையின் அவசியம் குறித்து ஒன்றிய அரசுக்கு எடுத்துரைத்ததன் அடிப்படையில்தான், ஒன்றிய அரசு அலுவல் மொழிச் சட்டத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்தது. இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் 1976இல் அலுவல் மொழிகள் விதி வகுக்கப்பட்டு, தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை எம்ஜிஆர், ஜெயலலிதா அரசுகள் கடைப்பிடித்தனர். தற்போதும் இந்தக் கொள்கையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உலகெங்கும்

இதனால்தான் தமிழ்நாடு மாணவர்கள் தாய்மொழிப் புலமையுடன், ஆங்கில மொழியையும் கற்று, பிற மாநிலங்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உயர்ந்த பதவிகளை வகிப்பதுடன், தொழில்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். எனவே, தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கை என்பது தேவை யற்றது. இந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. ஒன்றிய அரசு இதை உணர்ந்து, மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும்.

துரோகம்

அனைத்து மாநிலங்களாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத தேசிய கல்விக் கொள்கையை, தமிழ்நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய விஷயங்கள் தொடர்பாக மாநில அரசுடன் விவாதித்து, சமூக முடிவை எடுக்க வேண்டுமே தவிர, தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தி, மாநிலத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது, மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, மக்களுக்கும் ஒன்றிய அரசு இழைக்கும் துரோகமாகும்.

வெறுப்பு

இதனால், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சமும், ஒன்றிய அரசின் மீது வெறுப்பும் அடைந்துள்ளனர். எனவே, கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திட்டங்களின் நிதியை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். திமுக அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தி, மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *