ராமேசுவரம், பிப்.20 இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு ரூ.6 லட்சம் அபராதம், படகின் உரிமையாளருக்கு ரூ.1.20 கோடி அபராதம், படகோட்டிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.,9இல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். விசாரணை நாளான நேற்று 14 பேரையும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் ஒரு படகின் டிரைவரும், உரிமையாளருமான ஜான்போஸ் என்பவருக்கு ரூ.1.20 கோடி அபராதம் (இந்திய மதிப்பில் ரூ.34.80 லட்சம்) விதிக்கப்பட்டது. இதனை கட்டத் தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு படகின் ஓட்டுநர் அந்தோணி ஆரோன் 2வது முறையாக கைதானதால் அவருக்கு ஓராண்டு சிறையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் இரு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.மற்ற மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 6 லட்சம் (இந்திய மதிப்பில் ரூபாய் 1.74 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது. செலுத்தத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. இரு படகுகளும் அரசுடமையாக்கப்பட்டது. சிறை, அபராதம் விதிப்பால் மீனவர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.