திராவிட நாடெங்கும் இன்று “திராவிட நாடு திராவிடருக்கே!” என்ற முழக்கம் கேட்கிறது. திராவிடர் விழிப்புற்றுவிட்டனர். இன உணர்ச்சி பெற்றுவிட்டனர். சேலம் மாநாட்டில் மூட்டப்பட்ட “திராவிட இனத்தீ” திக்கெட்டும் முழங்குகிறது. திராவிடர் கழகங்கள் ஆங்காங்கு நிறுவப்பட்டும் ஆயிரக்கணக்கில் திராவிடர் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கப்பட்டும் வருகின்றனர்.
சேலம் மாநாடு நடந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இதற்குள் சுமார் 8500 அங்கத்தினர்கள் வரை சேர்ந்திருப்பதாக மத்திய காரியாலயத்திலிருந்து தெரிய வருகிறது. இதிலிருந்து திராவிடர்கள் எவ்வளவு தூரம் இன உணர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பது விளங்கும்.
திராவிடர் இன்று இந்நிலையிலிருப்பதற்கும், திராவிட நாடு இன்று அந்நியருக்கு அடிமையாக இருப்பதற்கும் அந்நியர்கள் திராவிட நாட்டில் லட்சக் கணக்கில் சுரண்டுவதற்கும், திராவிட மக்கள் கடல் கடந்து வெளிநாடு சென்று கஞ்சிக்கும் வழியில்லாமல் மிருகங்களிலும் கேவலமாய் வாழ்ந்து வரவும் காரணமாக இருந்தது இன உணர்ச்சியில்லாததுதான் என்பதை இன்று திராவிட மக்கள் உணர்ந்து கொண்டு விட்டார்கள். இனத் துரோகிகளான விபீஷணர்களும், சுக்கிரீவன்களுந்தான் காரணம் – தம் திராவிட இனம் இந்நிலைக்கு வந்ததற்கு என்பதை இன்று திராவிட மக்கள் நன்கு உணர்ந்து கொண்டு விட்டார்கள்.
திராவிடர் சமுதாயம் ஒரு காலத்தில் ‘இந்தியா’ என்று சொல்லப்படும் இவ்வுபகண்டத்தில் இருந்தது என்று சரித்திரத்தில் பொறிக்கப்படாமல் அன்று உலகிலே சிறந்தது விளங்கிய திராவிட சமுதாயம் இன்றும் ஒப்பற்று விளங்குகிறது என்று சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டும் என்று திராவிட மக்கள் உறுதி கொண்டு விட்டார்கள். அதற்காக எத்தகைய கஷ்ட நஷ்டம் நேரிட்டாலும் அவற்றையும் எதிர்த்து நிற்க நெஞ்சில் உரம் கொண்டு விட்டார்கள்.
வீறு கொண்டு எழுந்த சமுதாயத்தை இனி எவராலும் அடக்கி விட முடியாது. உலக சரித்திரமே இதற்குச் சான்று பகரும். உலகில் அடிமைப்பட்டு, அடக்கப்பட்டு இருந்த நாடுகள் இன்று சுதந்திரம் பெற்று சுயேச்சையுடன் வாழுகிறதென்றால், அதற்குக் காரணமாகயிருந்தது இன உணர்ச்சிதான். இன உணர்ச்சி ஒன்றினால்தான் தூங்கிக் கிடக்கும் சமுதாயத்தைத் தட்டியெழுப்ப முடியும். இனப் பற்று ஒன்றுதான் வேறு எந்தப் பற்றையும்விட ஒரு நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி விழிப்புறச் செய்ய முடியும். இதை இன்றைய இந்நாட்டு சம்பவமே நன்கு விளக்கும்.
சேலம் மாநாட்டில் திராவிடர் என்ற பெயரால் – திராவிடர் கழகம் என்ற பெயரால்தான் இந்நாட்டு மக்களிடையே இன உணர்ச்சியை ஊட்ட முடியும் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு அறிகுறியாக 6 மாதங்களுக்குள் திராவிட நாட்டில் குறைந்தது 10,000 அங்கத்தினர்களாவது திராவிடர் கழகத்தில் சேர்க்க வேண்டும் என்று அன்று பெரியார் அவர்கள் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்தார்கள். ‘குடிஅரசு’ வாயிலாக அறிக்கையும் வெளியிட்டார்கள். இரண்டு மாதங்களிலே 10,000-க்கு எட்டிவிட்டது அங்கத்தினர்களது தொகை. இதை எண்ணும்போது நமது மனம் உண்மையிலே பூரிப்படைகிறது. பெரியார் அவர்களது மனமும் நம்மைவிட பன் மடங்கு பூரிப்படையும் என்பதில் அய்யமில்லை.
ஆகவே, பெரியார் அவர்கள் விடுத்த வேண்டு கோள்களும், நம்முடைய வேண்டுகோள்களும் எவ்வளவு தூரம் மதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுவதற்கு இதைவிட வேறு கண்ணாடி வேண்டியதில்லை என்றே கருதுகிறோம். இவ்வளவு தூரம் முக்கிய பங்கு எடுத்து நம்முடன் ஒத்துழைத்த தோழர்கள் அனைவரையும் நாம் மனமாரப் பாராட்டுகிறோம். இத்துடன் தங்கள் கடன் தீர்ந்து விட்டதென்று கருதிவிடாமல், மேலும் ஊக்கத்துடன் அங்கத்தினர்களை ஏராளமாகச் சேர்த்து, திராவிடர் கழகத்தைப் பலப்படுத்தி திராவிட நாட்டு பிரிவினைக்காக தளராது உழைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். நமது லட்சியம் நிறைவேறுவது, திராவிடர் கழகத்தைப் பலப்படுத்துவதைப் பொருத்துத் தான் இருக்கிறதென்பதை ஒவ்வொருவரும் மனதில் வைக்க வேண்டும்.
பெரியார் அவர்கள் திராவிடர்களின் நல் வாழ்வுக்காக, உயர்வுக்காக வாழ்கிறார் என்பதை எடுத்துக் காட்டவும் அவருக்கு நன்றியறிதலைக் காட்டவும் திராவிட மக்களுக்கு இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைப்பது அரிது. ஆகவே இந்த நேரத்தில் திராவிட நாடெங்கும், இது வரை ஊக்கமாக வேலை செய்து வந்தது போல், திராவிடர் கழகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்த்ததுபோல், இனியும் கவலையுடன் வேலை செய்து வருவதோடு, அங்கத்தினர்களையும் ஆயிரக்கணக்கில் சேர்த்து திராவிடர் கழகத்தைப் பலப்படுத்த வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.
‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.11.1944