சென்னை,பிப்.3- சாலையோரம் வசிக்கும் வீடற்றோருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் வீடற்றோர் குறித்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளது.
சாலைகளில் வசிக்கும் மக்கள்
சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வீடற்றோர் வசித்து வருகின்றனர். இவர்கள் கழிவறை, குளியலறை வசதி, மின்சார வசதி உள்ளிட்டபோதிய அடிப்படை சுகாதார வசதிகள் இன்றியும், தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியாமலும் வாழ்ந்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்கும்போது, இவர்கள் மீது வாகனங்கள் மோதி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அவர்களிடம் சேமிப்பு பழக்கமும் பெரியதாக இல்லை.
அவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்க முன்வந்தாலும், தற்போது உள்ள நடைமுறைகளின்படி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெற, பயனாளியின் பங்களிப்பாக சுமார் ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது.
அந்த அளவுக்கு அவர்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால், இதுவரை அரசு வழங்கும் குடியிருப்புகளை பெற முடியாமல் இருந்து வருகின்றனர். இதற்கு முன்பு பெரும்பாக்கம், கண்ணகிநகர், எண்ணூர் போன்ற பகுதிகளில் மட்டுமே குடியிருப்பு திட்டப் பகுதிகள் இருந்ததால், வேலைவாய்ப்பை சென்டரல் ரயில் நிலையத்தை சுற்றி வைத்துக்கொண்டு, பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு நீண்ட தூரம் சென்று வர சிரமப்பட்டதால், அரசின் குடியிருப்பு வழங்கும் திட்டங்களை இவர்கள் தொடர்ந்து தவிர்த்து வருகின்றனர்.
மாநகரில் வீடற்றோர் எத்தனை பேர் உள்ளனர் என் உறுதியான விவரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் இல்லை. குறிப்பாக ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, வால்டாக்ஸ் சாலை, என்எஸ்சி போஸ் சாலை, பிராட்வே உள்ளிட்ட ஜார்ஜ் டவுன் பகுதியில் அதிக அளவில் வீடற்றோர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் நடைமுறை சிக்கல்களை தீர்த்து இவர்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கணக்கெடுக்கும் பணி
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறும்போது “இவர்களுக்கு குடியிருப்புகள் இருந்தால் தான் இவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும். இவர்களின் குழந்தைகள் போதிய வெளிச்சத்தில் படித்து வாழ்வில் உயர முடியும்.
அதனால் மாநகரப் பகுதியில் வசிக்கும் வீடற்றோர் குறித்து, மாநகராட்சி சார்பில் மெட்ராஸ் சமூகப் பணி கல்லூரியுடன் இணைந்து கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 6 வாரங்களில் கணக்கெடுப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தரவுகளின் அடிப்படையில் அவர்களின் வீட்டு வசதியை ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தந்தை பெரியார் மீது அவதூறா?
‘நாம் தமிழர்’ கட்சியில் இருந்து
சேலம் நிர்வாகிகள் 60 பேர் விலகல்
சேலம், பிப்.3- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தியில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.
கடந்த நவம்பர் முதல் சேலம் மாநகர் மாவட்டசெயலாளர் தங்கதுரை, நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வைரம், மேட்டூர் நகர துணை தலைவர் ஜீவானந்தம் உள்பட 40 பேருடனும், மாநகர் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அழகரசன் உள்பட 100 பேருடனும், மேட்டூர் சட்டமன்ற தொகுதியின் இளைஞர் பாசறை செயலாளர் சுதாகரன் 120 பேருடனும், மாநகர் மாவட்ட பொருளாளர் சதீஷ், மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் நாகம்மாள் உள்பட 30 பேரும், மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ரகு 500 பேருடனும், சேலம் ஒன்றிய பொறுப்பாளர் ரமேஷ் 50 பேருடனும் அக்கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
விலகல்
கடந்த வாரம் நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட பொருளாளர் சங்கர், ஏற்காடு சட்டமன்ற தொகுதி நிர்வாகி சதீஸ்குமார் மற்றும் நிர்வாகிகள் 200 பேர் கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது சேலம் தெற்கு மாவட்ட மேனாள் செயலாளர் தமிழரசன் தலைமையில் 60 பேர் அடிப்படை உறுப்பினரிலிருந்து தாங்கள் விலகி கொள்வதாக முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கட்சியில் சரியான தலைமைப் பண்பு இல்லை.
தந்தை பெரியார் மீது அவதூறு பரப்புகிறார்கள். கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. இதனால் கட்சியில் இருந்து என்னுடன் பயணித்த 60 உறுப்பினர்களும் விலகி உள்ளோம் என்றார்.