59 வயது நிரம்பிய காவலருக்கு இரவுப் பணி இல்லை
சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய காவலர்களின் வயது மூப்பையும், நீண்ட பணிக் காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும், கடின உழைப்பையும் கருத்தில் கொண்டு, 59 வயது நிரம்பிய காவலர் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வரையிலான அனைத்து காவலர்களுக்கும் இரவுப் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த விலக்கு அவர்கள் பணி ஓய்வு பெறும் வரை அமலில் இருக்கும் என காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
ஓட்டுநர்களுக்கு
கண் பரிசோதனை அவசியம்
2022ஆம் ஆண்டு தரவில், தமிழ்நாட்டில் 64,000 விபத்துகள் பதிவாகி இருந்தன. இது, மிக அதிகமாகும். அதிகமான விபத்து மண்டலம் தமிழ்நாடு என அந்த தரவில் இருந்தது. இது, எனக்கு வேதனையை ஏற்படுத்தியது. சாலை விபத்தைத் தடுக்க, விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். ஓட்டுநர்களுக்கு பார்வை தொடர்பாக ஏதாவது பிரச்சினை இருந்தால், உடனடியாக கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை மிகவும் அவசியம். இது தொடர்பாக மற்ற ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குநர் அர்ச்சனா ராமசுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.
வழக்குரைஞர்களுக்கு
கண்ணியம் – கட்டுப்பாடு அவசியம்
வழக்குரைஞர் தொழிலில் நிதானம் இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்றும் மிகவும் அவசியம். பெற்றோர் மிகுந்த நம்பிக்கை வைத்து, பெரும் பொருள் செலவில் வழக்குரைஞர்களாக்கியுள்ளனர். ஆனால், பிள்ளைகளில் சிலர், பணத்தைப் பார்த்தவுடன் பெற்றோரை மறந்து விடுகின்றனர். அப்படி இருக்கக் கூடாது. பெண்கள் திருமணத்துக்கு பின்னரும் பயிற்சியைத் தொடர வேண்டும் என சட்டப் படிப்பு முடிந்த மாணவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஊரக திறனாய்வுத்
தேர்வு தள்ளிவைப்பு
தமிழ்நாட்டில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழுங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக அது பிப்ரவரி 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக அரசின் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், ‘பாரத சாரணியர் இயக்க வைர விழாவில் மாணவர்கள் கலந்து கொள்ள இருப்பதால், ஊரக திறனாய்வுத் தேர்வு அடுத்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டிருக்கிறது.