இயக்க மகளிர் சந்திப்பு (49) ஊருக்கு ஒரு பெரியார் சிலை வேண்டும்!வி.சி.வில்வம்

viduthalai
6 Min Read

செருநல்லூர் வி.கே.ஆர்.தனம்

பெற்றோருக்குப் பிள்ளைகள் என்ன செய்வார்கள்? ஒரு வீடோ, நிலமோ, வணிக வளாகமோ கட்டிக் கொடுப்பார்கள்.‌ அதில் வருமானம் வரும்! ஆனால் இந்தப் பிள்ளைகளோ, தோழர்களின் ஒத்துழைப்போடு, தம் பெற்றோருக்கு வித்தியாசமாக ஒன்றைச் செய்து கொடுத்துள்ளனர்.‌ ஆம்! கிராமத்தில் உள்ள தம் வீட்டு வாசலில் பெரியார் சிலை ஒன்றை நிறுவி, கழகக் கொடியும் அமைத்துக் கொடுத்துள்ளனர். பிள்ளைகள் அனைவரும் வெளியூரில் இருக்க, பெரியாரையும், இயக்கக் கொடியையும் பராமரிக்கும் பொறுப்பை அந்தத் தாய் ஏற்றுள்ளார்!

அவரும் உற்சாகமாக அதனைச் செய்து வருகிறார். கொடியை அவ்வப்போது மாற்றுவதும், பிறந்தநாள், நினைவு நாள்களில் சிலையைப் புதுப்பிப்பதும் என மகிழ்வோடு செய்து வருகிறார்.

அவருக்கு வயது ஒன்றும் அதிகமில்லை… 80 தான் ஆகிறது. வீ.கே.ஆர்.தனம் என்பது அவர்களின் பெயர். ஊர் செருநல்லூர். மகளிர் சந்திப்பின் பொருட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அவரின் கிராமத்திற்குச் சென்றோம்.
இருபுறமும் வயல்வெளிகள், நடுவே தார் சாலை என அழகிய தோற்றத்தில் இருந்தது அச்சூழல். தனம் அம்மா அவர்களின் தெருவிற்குள் நுழையும் போதே, நேரெதிரில் நின்று வரவேற்றார் பெரியார். ஒவ்வொரு ஊருக்கும் பாதுகாப்பாய் இருப்பவர் அவர்தானே! “அம்மா” என்கிற குரலோடு வீட்டிற்குள் நுழைந்தோம்! “என்னம்மா! நல்லா இருக்கீங்களா?” எனக் கேட்டோம். “நன்றாக இருக்கிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை. பிள்ளைகள் அடிக்கடி வந்து போகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்”, என நம்பிக்கையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள்!
பெரியார் கொள்கை

உங்களுக்கு எப்படி அறிமுகம் ஆனது?

எங்கள் வீட்டில் மொத்தம் 4 பெண்கள். படித்து என்ன செய்யப் போகிறோம் என எங்கள் தந்தை எங்களைப் படிக்க வைக்கவில்லை. ஆனால் எங்கள் தாயார் அதற்கு முந்தைய காலத்திலேயே உயர்கல்வி முடித்தவர்கள். எனக்கு 1960இல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது.‌ இணையர் பெயர் வீ.கே.ராமு.‌ அப்போதே தாலி மறுத்த திருமணம். அழைப்பிதழில் இரண்டு பேரின் ஜாதியையும் குறிப்பிட்டு இணையர் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். திருமணத்திற்குப் பிறகே நான் பெரியார் கொள்கையை அறிந்து கொண்டேன். திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் இணையரின் ஊரான நிர்த்தனமங்களத்தில் இருந்தோம். பிறகு எங்கள் ஊரான செருநல்லூருக்கு வந்துவிட்டோம். இவ்வூர் ஒருங்கிணைக்கப்பட்ட கீழத் தஞ்சை மாவட்டமாக இருந்து, இப்போது நாகை மாவட்டத்தில் உள்ளது. எப்போதுமே அவர் இயக்க வேலைகளில் மூழ்கிக் கிடப்பார்.

1976ஆம் ஆண்டு எங்கள் ஊரில் கடும் புயல் ஏற்பட்டது.‌ வீடு பெரியளவில் பாதிப்பிற்கு உள்ளானது.‌ பிள்ளைகளை வைத்துக் கொண்டு தங்குவதற்கே சிரமமான சூழல். அந்த நேரத்தில் கூட, எனது இணையர் இயக்கப் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தார். அந்தப் புயலின் போதுதான் இயக்கம் தொடர்பான ஆவணங்கள், குறிப்புகள், துண்டறிக்கைகள், படங்கள், எழுத்துகள், பேச்சுகள், அவர் எழுதிய பாடல்கள் என அனைத்தும் போய்விட்டன. அந்தளவிற்கு இயக்கமே வாழ்க்கை என இருந்தவர்.

உங்கள் இணையர்
பாடல்கள் எழுதக் கூடியவரா?

ஆமாம்! ஏராளமான பாடல்கள் எழுதியுள்ளார். அவைதான் புயலின் போது காணாமல் போய்விட்டன. அதுமட்டுமின்றி சிறந்த பாடகரும் கூட! கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவில் இருந்தவர். பெரியார் கூட்டங்களுக்கு முன்னும், பின்னும் நடைபெறும் நாடகங்களிலும் நடித்தவர். இவர் நடித்த ஒரு நாடகத்தை ஆசிரியர் அவர்களும் பார்த்துள்ளார்கள். அந்தத் துண்டறிக்கைக் கூட இன்னும் இருக்கிறது.

இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 1978 இல் பெரியார் நூற்றாண்டு விழா தொடங்கிய நேரமது. சிகிச்சை போதும் என மருத்துவமனையில் எழுதிக் கொடுத்து விட்டு, நூற்றாண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை சென்றுவிட்டார். அந்தளவு தீவிரமான செயல்பாட்டில் இருந்தவர்.

அதேபோல சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று, வேலூரில் 9 மாதங்கள் சிறையில் இருந்தார். “சட்டத்தை எரிப்பது மட்டும் போதாது; தோழர்கள் அனைவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டும்”, எனப் பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க என்னைத் திருமணம் செய்து கொண்டார்.

இயக்கத்தில் இருந்து வெளியாகும் நூல்கள், பெரியார் பிறந்தநாள் மலர், நாட்காட்டி, கழக டைரி போன்றவற்றை ஒன்றுவிடாமல் வாங்கிவிடுவார்.

கவிஞர் கலி.பூங்குன்றன், திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தாழை மு.கருணாநிதி ஆகியோருடன் நல்ல பழக்கம் கொண்டவர்.

கிராமத்தில் சிலம்பம், மடு போன்ற விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுத்தார்.

உங்களின் இயக்கச் செயல்பாடுகள்
எப்படி இருந்தன?

இணையரோடு சேர்ந்து மாவட்ட, மாநில நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்றுள்ளேன். குறிப்பாகப் பல மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ளேன். செருநல்லூர் கிராமத்தில் திராவிடர் கழக அமைப்பை இணையர்தான் தோற்றுவித்தார். அந்தக் காலத்தில் திராவிடர் கழகம் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களில் மட்டும் தான் மக்கள் இருப்பார்கள். எங்கள் கிராமத்தில் திராவிடர் கழகத்தவர்கள் அதிகம். நானறிந்து எங்கள் கிராமத்திற்கு 2 முறை பெரியார் வந்துள்ளார். எங்கள் வீட்டருகே உள்ள வயலில் தான் கூட்டம் நடந்தது. பெரியாருடன் நேரடியாகப் பேசியதில்லை. எனினும் நேரில் பார்த்து வணக்கம் கூறியிருக்கிறேன்.

எங்களுக்குச் சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தது. ஜாதி விட்டுத் திருமணம் செய்ததால் தான் இப்படி இருக்கிறது எனக் கூறினார்கள். அதேபோல இணையருக்குக் கடைசி காலத்தில் புற்றுநோய் ஏற்பட்டது. கடவுள் இல்லை என்று சொன்னதாலே, இந்த நோய் வந்ததாகவும் கூறினார்கள்.

அதையெல்லாம் கடந்து தலைமுறையாக இந்தக் கொள்கையில் நீடித்து வருகிறோம்.
எஸ்.எஸ்.பாட்சா, ஆரான், எஸ்.எஸ்.மணியம், பக்கிரிசாமி, அம்மையன், தட்சிணாமூர்த்தி, சண்முகசுந்தரம், பாவா நவநீதகிருஷ்ணன், கீழ்வேளூர் வகாப், திருவாரூர் சுப்பிரமணியம், வெளிப்பாளையம் கணேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் முனியாண்டி, இராமையன், திருவாரூர் எம்.ஆர்.பதி, அவரின் வாழ்விணையர் சுப்புலட்சுமி, கிடாரங்கொண்டான் அறிவுக்கண்ணு, அஞ்சம்மாள், செல்லம்மாள், சந்திரா, சின்னப்பொண்ணு ஆகியோர் என் நினைவில் இருக்கும் பழைய தோழர்கள்.

80 வயதில் கிராமத்து வாழ்க்கை
எப்படிப் போகிறது?

எங்களுக்கு வீ.கே.ஆர்.‌பெரியார் செல்வி, வீ.கே.ஆர்.ரசல், வீ.கே.ஆர்.பெர்னாட்சா, வீ.கே.ஆர்.ரூசோ ஆகிய 4 பிள்ளைகள். அப்பா “சொல் பேச்சு” கேட்டு, கொள்கையில் வளர்ந்தவர்கள். நல்ல நிலையில் இருக்கிறார்கள். என்னையும் நல்ல முறையில் வைத்துள்ளார்கள். எங்களின் 4 பிள்ளைகளுக்குமே ஜாதி மறுப்பு மற்றும் தாலியற்ற திருமணம் தான். ஆசிரியர் அவர்களும், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்கள்.‌ பேரன், பேத்திகளும் கொள்கையில் தொடர்கிறார்கள். அவர்களில் சிலரின் திருமணத்தையும் ஆசிரியரே நடத்தி வைத்தார்கள்.

எங்கள் குடும்பத்தில் தீபாவளி உள்ளிட்ட எந்த மதப் பண்டிகைகளும் கொண்டாடியதில்லை. அதேநேரம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவிற்கு அனைவரும் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள். எனது இணையர் பெரிய பொருளாதார பலமின்றி, எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அதேநேரம் பெரியாரின் கொள்கைப் பலத்தால் பிள்ளைகள் நன்கு படித்து, பெரிய பணிகளில் இருக்கிறார்கள்.‌

நான் கிராமத்தில் வசித்தாலும் கோயில் நிகழ்வுகளுக்கு நன்கொடை உள்ளிட்ட எந்த வரியும் கொடுப்பதில்லை.

ஆசிரியர் அவர்களை இடையில் சந்தித்தீர்களா?

நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எப்போது சந்தித்தாலும் அன்போடு பேசுவார்கள். ஒரு உறவினரைப் போல, இன்னும் சொன்னால் அதைவிட மேலான நட்பு ஆசிரியரிடம் இருக்கும். ஊருக்கு ஒரு பெரியார் சிலை வேண்டும் என ஆசிரியர் அவர்கள் சொன்னதற்கிணங்க தோழர்கள் ஒத்துழைப்பில், எங்கள் பிள்ளைகள் சிரத்தை எடுத்து பெரியார் சிலையை அமைத்தார்கள். இந்தச் சிலையை ஆசிரியர் அவர்கள் தான் திறந்து வைத்தார்கள். அன்று மாலையே பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெற்றது. அனைத்துக் கட்சியினர் மற்றும் அமைப்பினரும் பிறந்தநாள், நினைவு நாளில் மரியாதை செய்யும் இடமாக இன்று வரை இருக்கிறது, எனத் தம் கருத்துகளைத் தெளிவாக எடுத்துரைத்தார்
வி.கே.ஆர்.தனம் அவர்கள்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *