வல்லத்திலுள்ள பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் தேசிய அளவிலான இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது. 1920-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மிகப்பெரிய அமைப்பான இந்திய பொறியாளர் கூட்டமைப்பு Institution of Engineers (India) IE(I) சார்பில் 17.12.2024 முதல் 22.12.2024 வரை 39ஆவது Indian Engineering Congress, கொல்கத்தாவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் சிறப்பான செயல்பாடுகளான தொழில்நுட்ப நிகழ்வுகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவதன் மூலம் மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதிசெய்யும் இக்கல்லூரியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டும் விதமாக, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு “பாராட்டத்தக்க செயல்திறன் – பொறியியல் கல்வி சிறப்பு விருது 2024” (Commendable Performance – Engg. Education Excellence Award 2024) மற்றும் “சிறந்த IE(I) மாணவர் அத்தியாய விருது 2024” (Best IE(I) Students Chapter Award) மற்றும் ரூ.10,000/- காசோலையையும் இந்திய பொறியாளர் கூட்டமைப்பின் IE(I) தலைவர் வழங்கினார்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் நிறுவனத் தலைவர் கி.வீரமணி அவர்கள் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா, துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் மேனாள் முதல்வர், மேனாள் துணைமுதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.