அய்யோ அப்பா என்று அலறல்! அய்யப்ப பக்தர்கள் வந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விபத்து!

viduthalai
1 Min Read

மண்டபம்,ஜன.8- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 45 பேர் தனியார் சுற்றுலா பேருந்தில் கடந்த வாரம் புறப்பட்டு சபரிமலை சென்று அங்கு வழிபாடு முடித்துவிட்டு கன்னியாகுமரி, குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை பார்த்து விட்டு 5.1.2025 அன்று இரவு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

அய்யப்ப் பக்தர்கள் நேற்று (6.1.2025) காலை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு பேருந்தில் சொந்த ஊர் திரும்பினார். பேருந்து பாம்பன் அடுத்த காந்தி நகர் அருகே மதுரை – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையை விட்டு இறக்கியபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் தலைக்கு குப்பற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள் நால்வருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மண்டபம் காவல் துறையினர் விரைந்து வந்து காயம் அடைந்த நால்வரையும் மண்டபம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஒருவரை ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் தலை குப்பற விழுந்த பேருந்தை தீயணைப்பு துறையினர் கிரேன் வாகன உதவியுடன் மீட்பதற்கான பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து மண்டபம் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் மதுரை தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *