சென்னை,ஜன.8- தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் (6.1.2025) தொடங்கியது. முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். ஆனால் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆர்ப்பாட்டம்
இச்செயலுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர் களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஒன்றிய அரசின் ஏஜென்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரை காப்பாற்றிடவும், ஒன்றிய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜ கள்ளக் கூட்டணியை கண்டித்து நேற்று (7.1.2025) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதி மாறன், அந்தியூர் செல்வராஜ், இரா.கிரிராஜன், கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், தாயகம் கவி, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, அரவிந்த் ரமேஷ், அய்ட்ரீம் மூர்த்தி, ஜெ.கருணாநிதி, மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் தோழர்கள் கலந்துகொண்டனர்.
தமிழர் உரிமை
ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது: சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்படும். நாங்கள் தேசிய கீதத்தை அவமதிக்கவில்லை. அதற்கும் இடம் இருக்கிறது. தமிழ்நாட்டை, தமிழ் மக்களின் உணர்வுகளை, எங்கள் சுயமரியாதையை அவமானப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள், நாங்கள் ஒவ்வொரு நாளும் இதை பார்த்துக் கொண்டே இருப்போம் என்றும் நினைக்க வேண்டாம். திமுகவும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அரணாக நின்று தமிழ்நாட்டு உரிமைகளை பாதுகாப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் வந்து பிரச்சினையை கிளப்பி வருகிறார். ஆளுநர் பதவி என்பது ஒரு ரப்பர் ஸ்டாம்ப். எனவே நீங்கள் வீட்டில் இருங்கள். ஏதாவது திறப்பு விழாவுக்கோ, நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் செல்லுங்கள். என்ன பேச வேண்டும் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தயாநிதி மாறன் பேசுகையில், மகாராட்டிராவில் அதிகமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற தொழிற்சாலைகள் மகாராட்டிராவை விட பாதிதான். உற்பத்தி திறனில் மகாராட்டிராவை விட தமிழ்நாடு தான் அதிகம். காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எங்களுடைய தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு வந்து விட்டால் எங்கள் முதலமைச்சர், எங்கள் அமைச்சரவை என்ன சொல்கிறதோ, அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். எப்படியாவது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்துவீர்களா…இதைப் போன்று தொடர்ந்து செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்றார்.
இதே போல, காஞ்சிபுரத்தில் மாவட்டச் செயலாளர் சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் தலைமையிலும், திருவள்ளூரில் திருத்தணி பூபதி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.