சட்டக்கதிர் இதழுக்கு தமிழ்நாடு அரசின் சி.பா .ஆதித்தனார் விருது!

viduthalai
1 Min Read

சென்னை,ஜன.7- தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சீரிய வகையில் தொண்டாற்றியமைக்காக சட்டக்கதிர் இதழுக்கு 2024ஆம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது ரூபாய் 2 லட்சம் ரொக்கமும் பாராட்டுச் சான்றிதழையும் உள்ளடக்கியது. தமிழ்நாடு ஜனவரி 7, 2025 இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு கவின் கலைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த அரசின் விருது வழங்கும் விழாவில் சட்டக்கதிர் ஆசிரியர் டாக்டர் வி.ஆர்.சம்பத் விருதைப் பெறுகிறார்.

சட்டக்கதிர் சட்டத்துறை சார்ந்த தமிழ் மாத இதழ். இது 1992 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து கடந்த 32 ஆண்டுகளாக மாதாந்தம் வெளிவருகிறது.
இதன் நிறுவன ஆசிரியர் புகழ்பெற்ற வழக்குரைஞரும் சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ்.சம்பத். இவர் இந்த இதழினை வணிக நோக்கின்றி சேவை மனப் பான்மையுடன் நடத்தி வருகிறார்.

பல்வேறு மாவட்ட, உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை, சட்ட வரைவுகளை, சட்ட விளக்கங்களை பொதுமக்கள், சட்டம் பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறது.

மனித உரிமைகள், சட்ட முறைமைகள், சட்டத் தமிழ் ஆகியன பற்றி இந்த இதழ் கவனம் செலுத்துகிறது. சட்டக்கதிர் இதழ் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, அய்க்கிய அமெரிக்கா, கனடா, அய்க்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளில் சட்டக்கதிர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின்

சி.பா.ஆதித்தனார் விருது பெறும் சட்டக் கதிர் இதழினையும், ஆசிரியர் குழுவையும் இதழின் நிறுவனர் டாக்டர் வி.ஆர். சம்பத் அவர்களையும் நெஞ்சார வாழ்த்துகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *