அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச் சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

viduthalai
1 Min Read

மதுரை,ஜன.7- குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க மறுக்கப்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு கடவுச்சீட்டு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடவுச்சீட்டு

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன். தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்க நல்லூரைச் சேர்ந்தவர். இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

கடந்தாண்டு செப். 9இல் அனைத்து அசல் சான்றிதழ் களுடன் கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் சரிபார்ப்புக்காக பந்தலூர் காவல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.

பந்தலூர் காவல் நிலையத்தில் கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது தொடர்பாக என் மீது குற்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இது குறித்து கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

இதை காரணமாக வைத்து எனக்கு கடவுச்சீட்டு வழங்க மறுத்து வருகின்றனர். கடவுச்சீட்டு வழங்க முதல் தகவல் அறிக்கை ஒரு தடையல்ல என பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே எனக்கு கடவுச்சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

நீதிபதி உத்தரவு

இந்த மனுவை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்து, குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகள் உள்ளன. அதன் அடிப்படையில் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க திருச்சி மண்டல கடவுச்சீட்டுஅலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *