பெரியார் என்ற நுண்ணாடிக்கு சரியாகக் கிடைத்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! எவரிடமிருந்தும் “சன்மானம்“ எதிர்பாராமல் தன்மானம், இனமானம் காக்கப் பாடுபட்டவர்!

Viduthalai
3 Min Read

“பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா”வில் கழகத் தலைவர் பாராட்டு!

சென்னை, ஜன. 7- பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சி உரை ஆற்றினார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (வி.அய்.டி) வளாகத்தில் பேராதன் (மகாத்மா) அரங்கத்தில் 5.1.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இரண்டு நிகழ்வுகளாகப் பிரிக்கப்பட்டு முதல் அமர்வு காலையில் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், இரண்டாம் அமர்வு பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, “பாவலரேறு எழுத்தடைவுகள்” தொகுதியை வெளியிட்டு உரையாற்றினார். வி.அய்.டி. பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் புத்தகத் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் அமர்வில் கழகத் தலைவர் உரை
இரண்டாம் அமர்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த அமர்வில் தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி, ஊடகவியலாளர் ப.திருமாவேலன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிப் பொறுப்பாளர் வாலாசா வல்லவன், தமிழ் இலெமுரியா ஆசிரியர் சு.குமணராசன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம் த.ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் அமர்வில் தமிழ் இலெ முரியா ஆசிரியர் சு.குமணராசன் உரையாற்றியதற்குப் பின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தனது உரையில் பங்கேற்ற பெருமக்களை மிக அருமையாக அறிமுகப்படுத்தித் தனது உரையைத் தொடங்கினார்.

தமிழ் மொழிக்குள்ளேயே ஆரியம் புகுத்திய வர்ணாசிரம வேறுபாடுகளை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய தமிழர் தலைவர், இதைக் களைய எழுந்து போராடி வெற்றி பெற்றிருப்பதே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர், பாவாணர், பாவலரேறு போன்றோரின் சிறப்பு என்று எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பாவலரேறு பெருஞ்சித்திரனா ருக்கும், திராவிடர் கழகத்துக்குமான தொடர்பைச் சுட்டிக்காட்டியதுடன், திராவிடர் கழகம் அறிவித்த மனுஸ்மிருதி எரிப்புப் போராட்டத்தில் 1981-ஆம் ஆண்டு பங்கேற்று பெருஞ்சித்திரனாரும் தமிழறிஞர்களும் சிறையேகியதையும் பொருத்தமாக நினைவு கூர்ந்து, எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும் போராடியவர் பாவலரேறு என்பதை விளக்கினார்.

திராவிடர் கழகம்

கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் பாவலரேறு
மேலும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் பாவலரேறு என்றும், எவரிடமிருந்தும் சன்மானத்தை எதிர்பாராமல் தன்மானம், இனமானம் காக்கப் பாடுபட்டவர் தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றும், புரட்சிக்கவிஞர், பாவாணர், பாவலரேறு என்று இன உணர்வு மிக்க தமிழறிஞர்களை வரிசைப்படுத்தியும், பாவலரேறு அவர்களைப் பாராட்டிப் பேசியதுடன், “வாய்ப்பு இருக்கிறவர்கள் இந்தப் புத்தகங்களை வாங்கி நூலகங்களுக்குக் கொடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துத் தனது உரையை நிறைவு செய்தார்.

உரையாற்றி முடித்த பின் தோழர் பொழிலன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். அடுத்து பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு என்று ரூ.10,000/- கொடுத்து, அங்கு வெளியிடப்பட்ட 16 தொகுதிகளையும் பொழிலன் அவர்களிட மிருந்து பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிலையைக் கழகத் தலைவருக்கு நினைவுச் சின்னமாக தோழர் பொழிலன் வழங்கினார். தென் மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன் தமிழர் தலைவருக்குச் சிறப்பு செய்தார். பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் குடும்பத்தினர் நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, பெரியார் பெருந்தொண்டர்கள் ஆர்.டி.வீரபத்திரன், ஜெயராமன், இளைஞரணித் தோழர்கள் ஆ.இர.சிவசாமி, நித்தியானந்தம், பார்த்திபன், மணிதுரை, உடுமலை, தாம்பரம் நகரத் தலைவர் மோகன்ராஜ், கொடுங்கையூர் தங்கமணி, தனலட்சுமி, ராசேந்திரன், தாம்பரம், மறைமலைநகர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த ஏராளமான கழகத் தோழர்கள், தமிழின ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மேடையை விட்டு இறங்கிய தமிழர் தலைவரிடம் பேரன்புடன் தமிழார்வலர்கள் சூழ்ந்துகொண்டு புத்தகங்கள் வழங்கியும், நாள்காட்டி உள்ளிட்ட நினைவுப் பரிசுகள் வழங்கியும், ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டும் மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *