தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பது தி.மு.க. அரசுதான்! அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு!

viduthalai
4 Min Read

சிவகங்கை, ஜன.6 சிவகங்கையை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தவர் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். இவரது 295ஆவது பிறந்தநாள் சிவகங்கை காளையார்கோவில் ரோட்டில் உள்ள சூரக்குளம் ராணி வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின் பேரில் கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அருகில் உள்ள படைத்தளபதி குயிலியின் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை தலைமை வகித்தார்.மாவட்ட திட்ட இயக்குனர் வானதி வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார், எஸ்.மாங்குடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவின் டோங்கரே உமேஷ் ஆகியோர் பேசினார்கள்.

கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவ தாசன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.விழாவில் கலந்து கொண்டு ராணி வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி அமைச்சர் கேஆர்.பெரிய கருப்பன் பேசியதாவது :–

வீரப் பெண்மணி

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிலேயே முதன் முதலாக குரல் கொடுத்த வீரப் பெண்மணி ஆவார். வேலுநாச்சியார் வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
தமிழ்நாட்டில் முதன் முதலாக சிவகங்கை சீமையிலிருந்து குரல் கொடுத்த அவர்தான் முதல் வீர பெண்மணி ஆவார். ஜான்சி ராணி என்பவர் அவருக்கு பின் வந்தவர் ஆவார்.

தமிழ்நாடு அதிகமான அளவில் சுதந்திரப் போராட்ட வீரர்களை கொண்ட மாநிலம் ஆகும். அதில் சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான அளவில் சுதந்திரப் போராட்டத்தில் வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

வீரர்களின் இத்தகைய தியாகத்தினை பாராட்டி மதிக்கும் அரசு திமுக அரசு ஆகும். தலைவர் கலைஞர் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகள், நாட்டிற்காக போராடியவர்கள் இத்தகைய வீர வரலாறு படைத்தவர்கள் போற்றி மதிக்கப்பட்டார்கள். தியாகிகளுக்கு பல்வேறு உதவிகளை முதலமைச்சர் கலைஞர் செய்து வந்தார்.
அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தற்போது அவர்களை நினைவு கூர்ந்து அவர்களை கவுரவப்படுத்தி வருகிறார். இதே போல் ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் படை தளபதி குயிலுக்கு ரூபாய் 50 லட்சத்தில் உருவச்சிலையினை அமைத்துள்ளார். விரைவில் மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலைகள் நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

மதிக்கப்படுகிறார்கள்

தமிழுக்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்களையும் தியாகிகளையும் இந்த அரசாங்கம் தொடர்ந்து நினைவு கூர்ந்து மதித்து வருகின்றது. திமுக அரசு அமையும் போதெல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழுக்காக போராடியவர்கள் மதிக்கப்படுகிறார்கள், பாராட்டப்படுகின்றார்கள்.

இவர்களது வரலாறுகளை எதிர்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் அமைய வேண்டும். அதற்கான கடமை நமக்கு உள்ளது. இதை வைத்துதான் முதலமைச்சர் அவர்கள் இத்தகைய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்கு மணிமண்டபம் நினைவுச் சின்னங்கள் அமைத்து வருகிறார்.

இளைஞர்கள் இவர்க ளின் வீர வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ராணி வேலுநாச்சியார் களரி,குதிரை ஏற்றம், வாள்வீச்சு, மற்றும் போர் திறமையில் பயிற்சி பெற்றவர்ஆவார் .நாட்டை இழந்ததும் மீண்டும் போர் பயிற்சி பெற்று வந்து சிவகங்கையை மீட்டு ஆட்சி செய்த வீர பெண்மணி ஆவார்.

சிந்து சமவெளி நாகரிகம் என்பது தமிழர்களின் நாகரிகத்திற்கு பிந்தையதாகும் .அதற்கு உதாரணம் கீழடியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்த அங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் சான்றாக கீழடி அமைந்துள்ளது .அது இன்று உலக அளவில் பெருமையாக பேசப்பட்டு வருகிறது. தமிழர்க ளின் நாகரிகத்தை வரலாற்றை சில சக்திகள் மறைக்க முயல்கிறார்கள். அவ்வாறு மறைப்பதை திமுக ஆட்சி வெளிக்கொண்டு வருகிறது.
கழக ஆட்சி இருக்கும் வரை இத்தகைய வரலாற்று உண்மைகளை மறைத்துவிட முடியாது. எத்தகைய சூழ்நிலை யிலும் தமிழர்கள் செய்த தியாகத்தை மறைத்து விட முடியாது . இத்தகைய வீர வரலாறுகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்.

நினைவு மண்டபம்

சிவகங்கை மாவட்டத்தில் பாகனேரி அருகே உள்ள நகரம்பட்டியை சேர்ந்தவர் வாளுக்குவேலி அம்பலம். சுதந்திர போரா ட்டத்தில் ஈடுபட்டதை போற்றி நினைவுகூரும் வகையில் ரூபாய் 50 லட்சத்தில் நகரம்பட்டியில் அவருக்கு நினைவு மண்டபம் சிலையுடன் அமைக்கப்பட்டு வருகின்றது. இதேபோல் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தோழர் ஜீவானந்தம் சிறாவயலில் ஆசிரியராக பணியாற்றிய பொழுது அவரை காந்தியார் சந்தித்தார்.
அந்த காந்தியார், ஜீவா சந்தித்திப்பு நடந்த இடத்தில் சிறாவயலில் ரூபாய் மூன்று கோடியில் பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதே போல் அமராவதி புதூர் அருகில் மருது பாண்டியர்கள் ஆயுதப் பயிற்சிமேற்கொண்ட சத்திரபதிக்கோட்டை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ரூபாய் 10 கோடியில் நடைபெற்று வருகின்றது . இத்தகைய வரலாற்று பெருமைகளை நினைவு கூருவது திமுக அரசின் முக்கிய பணியாக முதலமைச்சர் அவர்கள் செய்து வருகிறார்கள். இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். நாடு பெருமைப்படும்போது மொழியும் முக்கியமாகும். அந்த மொழியும் பாதுகாக்கப்பட வேண்டும் .வரலாறு எவ்வளவு முக்கியமோ மொழியும் முக்கியமாக பாதுகாக்கப்பட்டால் தான் எதிர்கால சந்ததியினருக்கு நமது முன்னோர்கள் செய்த வரலாறு தெரிய வரும்.

ராணி வேலுநாச்சியார் வாரிசு தாரர்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளார்கள். அவர்கள் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் தெரிவித்து படிப்படியாக நிறைவேற்ற என்னா லான முயற்சியை மேற்கொள்வேன் என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசினார். விழா முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜ செல்வன் நன்றி கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலையா உட்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *