தமிழன் என்று சொன்னால் அந்த மொழியை பேசுபவர்களை குறிக்கிறது, திராவிடம் என்று சொன்னால் பார்ப்பனர்களை தவிர்த்து நம்மை மட்டும் குறிக்கிறது என்று பசுமரத்தாணி போல் அன்றே தெளிவாக கூறினார் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.
அதனால் தான் திராவிடம் என்று நாம் இன்றும் உரக்கசொல்கிறோம்.இது பார்ப்பனர்களுக்கு புரிகிறது, ஆனால் சூத்திரனுக்கு இன்னும் புரியவில்லை.
தமிழன் என்று சொல்லி கொண்டு திரியும் குழப்ப அதிமேதாவிகள் இன்னும் பைத்தியம் தெளிந்தவாறு இல்லை.அவர்களுக்கு மேலும் வைத்தியம் தேவைப்படுகிறது.
அதற்கு ஒரு உதாரணம் தான் செம்மொழி ஆராய்ச்சி நிறுவனத்தில் அகத்தியர் விழா என்பது.
திராவிடத்தின் எதிரி பார்ப்பான் தமிழன் என்ற போர்வையில் தமிழ்மொழிக்கான நிறுவனத்தில் தமது பார்ப்பன நஞ்சை விதைக்கிறான்.
பழந்தமிழ் இலக்கியத்தில் இல்லாத அகத்தியர், தொல்காப்பியத்தில் இல்லாத அகத்தியரை கொண்டு இந்த பார்ப்பன கூட்டம் தந்திரமாக ஈடுபட்டு வருகிறது.
அகத்தியர் யார் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1948இல் ‘அகத்தியர் விட்ட புதுக்கரடி’ எனும் தலைப்பில் சிந்தனைக்கணைகளை தமிழனுக்கு புரியும் வகையில் அன்றே விதைத்துள்ளார்.
மொழி, இலக்கியம், கலை என்று அனைத்திலும் பார்ப்பனர்கள் தங்கள் நரித்தந்திரத்தில் ஈடுபட்டாலும் திராவிடம் அதை எப்போதும் வென்றெடுக்கும் என்பதே மெய்.
திராவிடம் எப்பொழுதும் உறங்காது, விழிப்போடு தான் இருக்கும்.பார்ப்பனர்களின் தந்திரம் திராவிடத்திடம் ஒருபோதும் எடுபடாது.
பார்ப்பனர்களின் செயலை மீண்டும் – ‘‘நுழையும் அகத்தியக்கரடி’’ என்று ‘விடுதலை’ நாளேடு எச்சரிக்கை மணியை அடித்து விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது.
புரட்சி கவிஞர் அவர்களின் அனல் கருத்துகளை இக்கால தலைமுறையினருக்கு ‘ விடுதலை’ நாளேடு மீண்டும் ஒளியாக தந்துள்ளது போற்றுதலுக்குரியது.
திராவிடம் என்றால் என்ன என்று இன்றைய தலைமுறையினருக்கு தெரியும் வகையில் , நமது கழகத்தின் சார்பில் துண்டறிக்கைப்பிரச்சாரம் செய்து அதிகளவில் பரப்புரை செய்யவேண்டும்.
குறிப்பாக தமிழன் என்று சொல்லிக் கொண்டு திராவிடம் என்றால் என்ன என்று பைத்தியமாக திரியும் குழப்ப மேதாவிகளுக்கு கழகம் தான் வைத்தியம் செய்ய வேண்டும் .
‘விடுதலை’ நாளிதழ் தான் தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் என்றார் குன்றக்குடி அடிகளார் அவர்கள் , திராவிடம் குறித்த கருத்துகள் சென்றடைய அனைத்து தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும், கரங்களிலும் ‘ விடுதலை’ தவழவேண்டும்.
‘அகத்தியர் விட்ட புதுக்கரடி ‘ என்று புரட்சிக் கவிஞர் அவர்களின் சிந்தனையை மீண்டும் தந்த ‘ விடுதலை’க்கு நன்றிகள்.
– மு.சு. அன்புமணி, மதுரை 625020