சென்னை, ஜன.5 பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 17ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி பொங்கல் விழாவை கொண்டாட தொடர்ச்சியாக 6 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் சொந்த ஊர் செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (4.1.2025) வெளியிட்ட அறிவிப்பு: இவ்வாண்டு தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி அன்று தைப் பொங்கல் நாள் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 15, 16ஆம் தேதி, 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி ஆகியவை அரசு விடுமுறை நாள்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான 17ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில், வரும் 17ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 25ஆம் தேதி அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 17ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளதை தொடர்ந்து பொங்கல் விடுமுறை நாள்கள் எண்ணிக்கை என்பது 6 நாட்களாகி உள்ளது. அதாவது வரும் 14ஆம் தேதி பொங்கல், 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 16ஆம் தேதி காணும் பொங்கல், 17ஆம் தேதி அரசு விடுமுறை, 18ஆம் தேதி சனிக்கிழமை, 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்று 6 நாட்கள் விடுமுறை வந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசியர்கள் 13ஆம் தேதி ஒரு நாள் சொந்த விடுப்பு எடுத்தால் முன்னதாக 11, 12 ஆகிய சனி, ஞாயிறு விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாள்கள் விடுமுறை ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.