புதுச்சேரி, ஜன. 4- புதுச்சேரி மாநிலத்தில் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய “சுயமரியாதை நாள்-கலைத் திருவிழா-2024” மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
கலைத் திருவிழா 31-12-2024 அன்று மாலை 6.30 மணிக்கு அரசு ஊழியர் சம்மேளனக் கட்டிடத்தில் புதுச்சேரி பகுத்தறிவு கலைத்துறைத் தலைவர் கவிஞர் புதுவைப் பிரபா தலைமையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ. நடராசன் வர வேற்புரை நிகழ்த்தினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி. இளவரசி சங்கர் நோக்கவுரை நிகழ்த்தியதுடன் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
புதுச்சேரி மாநில கழக தலைவர் சிவ. வீரமணியும், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கு. ரஞ்சித் குமாரும் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.
பகுத்தறிவு கலைத்துறை மாநிலச் செயலர், திரைப்பட இயக்குநர் மாரி. கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கழக தலைவர் வே.அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி ராசு மற்றும் லோ.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் தொடக்கத்தில் கழக புதுச்சேரி நகராட்சி வடக்கு கழக தலைவர் “பெரியார் பெரு ந்தொண்டர்” எஸ்.கிருஷ்ணசாமியின் 85-ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. கழகப் பொறுப்பாளர்களும், தோழர் களும் அய்யா அவர்களுக்கு பய னாடை அணிவித்துச் சிறப்பு செய்தனர்.
பெரியார் பிஞ்சு அமுதன் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதை வரிகளை உள்ளடக்கிய உரை வீச்சுடன் கலை நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.
பாலியல் வன்கொடுமை
செல்வி சாதனா சங்கர் தன்னுடைய அழகான நடனத்தால் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து கடலூர் மாநகரிலிருந்து “நாட்டியச் சிறகுகள்” அமைப்பின் சார்பில் 12 பேர் கலந்து கொண்ட “பாலியல் வன்கொடுமை” தொடர்பாக சிறப்பான விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது. இளம் சிறுமிகள் கலந்து கொண்டு நடனத்தை அமைத்தது பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. அவர்கள் அணிந்திருந்த கருஞ் சட்டை உடையும் சிறப்பாகப் பேசப்பட்டது. தொடர்ந்து நாடக நடிகரும் குறும்பட இயக்குநருமான கலை கந்தன் இரண்டு முறை நடிகவேள் எம். ஆர். இராதா அவர்களின் இரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த வசனங்களைப் பயன்படுத்தி தனது செம்மையான நடிப்புத் திறமையால் பார்வையாளர்களை வியக்க வைத்தார்.
அவருடன் நாடக நடிகை விஜயலட்சுமியும் சேர்ந்து நடித்தது சிறப்பாக அமைந்தது.
தொடர்ந்து திராவிடர் கழகத் துணைத் தலைவரும், நாடக நடிகருமான மு. குப்புசாமியின் தனி நடிப்பு மிகச் சிறப்பு. தொடர்ந்து கவிஞர்கள் பெ. முத்துக்குமரன், கோ.மு. தமிழ்ச்செல்வன், ஜெயந்தி, இரா. ஆதிநாராயணன் ஆகியோர் கவிதை வாசித்து அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றனர். விழாத் தலைவர் புதுவைப் பிரபா, கழகக் காப்பாளர் இரா. இராசு மற்றும் கரிகாலன் ஆகியோர் பாட்டுப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். இவர்கள் மூவருடைய பாடல்களுக்கும் இசைக்கலைஞர் பிரகாஷ் மேடையில் இசை வாசித்துப் பாராட்டினைப் பெற்றார்.
குறும்படப் போட்டி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் பெரியார் திடலில் முதல் பரிசினைப் பெற்ற புதுவைப் பிரபாவின் “மெய்யுணர்வு” குறும்படத்தில் நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கும் கலைத் திருவிழாவில் பகுத்தறிவு கலைத் துறையின் மாநிலச் செயலாளர் மாரி. கருணாநிதி பயனாடை அணிவித்தும், சான் றிதழ் மற்றும் நினைவுப் பரிசு வழங்கியும் சிறப்பித்தார். மேலும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கியும், பயனாடை அணிவித்தும் பாராட்டினார்.
மேலும் கலைத் திருவிழா நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்கிய தோழர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் தன்னுரிமை கழகத் தலைவர் தூ.சடகோபன், தெ. தியாகு, நகராட்சி பொறுப்பாளர் மு. ஆறுமுகம், ஊடகவியலாளர் பெ. ஆதிநாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ. சிவராசனின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.