சென்னை,ஜன.4 6 அணைகளுக்கு சிறந்த பராமரிப்பு விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-
2011-2012 முதல் தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து தமிழ்நாட்டில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட அணை யினை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து அவ்வணையில் பணி புரியும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் முதல் செயற் பொறியாளர் வரை ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10,000/- மற்றும் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரூ.10 ஆயிரம்
அதன்படி, ேநற்று (03.01.2025), தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அரசால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட 2016-2017-ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பெருஞ்சாணி அணை, 2017-2018ஆம் ஆண்டிற்கு ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 2018-2019ஆம் ஆண்டிற்கு தர்மபுரி மாவட்டம், வாணியாறு அணை, 2019-2020ஆம் ஆண்டிற்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை, 2020-2021ஆம் ஆண்டிற்கு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மற்றும் 2021-2022ஆம் ஆண்டிற்கு தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணை ஆகிய 6 அணைகளில் பணிபுரிந்த செயற் பொறியாளர், உதவி செயற் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் / இளநிலை பொறியாளர் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் ஊக்க தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கியும் தலைமைப் பொறியாளர் மற்றும் கண்காணிப்புப் பொறியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கியும் ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.மன்மதன், நீர்வளத்துறையின் மண்டலத் தலைமைப் பொறியாளர்கள் எம்.ஜானகி, ஆர்.தயாளகுமார், எஸ்.முருகேசன் மற்றம் எஸ்.ரமேஷ், நீர்வளத்துறையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமைப் பொறியாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள் கலந்துக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.