சீனாவில் பரவும் புதிய வைரஸ் உலக சுகாதார அமைப்பு விளக்கம் கேட்கிறது

Viduthalai
1 Min Read

பெய்ஜிங், ஜன.4 சீனா முழுவதும் புதிய வகை வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த விவரங்களை அளிக்கும்படி சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

புதிய வைரஸ்
கரோனாவை போன்றே இந்த புதிய வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சீன சமூக வலைதளங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்பான காட்சிப் பதிவு, ஒளிப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சீனாவின் பல்வேறு பகுதிகளில் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய வைரஸ் குறித்த விவரங்களை அளிக்குமாறு சீன அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் புதிய வைரஸ் குறித்து சீன அரசோ, உலக சுகாதார அமைப்போ அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் சீனாவின் சில பகுதிகளில் நிமோனியா பரவி வருவதாக அந்த நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம் (சிடிசி) தெரிவித்திருக்கிறது. சீன அரசு வட்டாரங்கள் கூறும் போது, “கடந்த குளிர்காலத்தை ஒப்பிடும்போது இந்த குளிர்காலத்தில் நுரையீரல் தொடர்பான வைரஸ் பரவல் குறைவாகவே இருக்கிறது. தற்போது பரவும் வைரஸால் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பரவல் சற்று அதிகமாக உள்ளது” என்றன.

அச்சப்பட தேவையில்லை
இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவை தலைமை இயக்குநர் அதுல் கோயல் கூறும்போது, “எச்எம்பிவி வைரஸுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. பொதுவான சிகிச்சை மட்டுமே அளிக்க முடியும். வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதே சிறந்தது. எச்எம்பிவி வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை. இது சாதாரண வைரஸ் தொற்றுதான். சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *