தலைசிறந்த மனிதாபிமானம்

viduthalai
1 Min Read

கடந்த ஆண்டில் மூளைச் சாவு அடைந்த 266 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெற்று 1500 பேர் உயிர் பிழைப்பு

சென்னை,ஜன.2- தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு பொருத்தியதில் 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:

உடல் உறுப்பு கொடை

உடல் உறுப்பு கொடையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உறுப்பு கொடை செய்பவர்களின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று கடந்த 2023 செப். 23ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். இதைப் பின்பற்றி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு மரியாதை அறிவிப்புக்கு பின்னர், தமிழ்நாட்டில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு கொடை அளித்துள்ளனர். அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2023-இல் 178 பேர் உறுப்பு கொடை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொடையாக பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 28 பேரின் உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டுள்ளன. ஒருவர் மூளைச்சாவு அடையும்போது அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்வது அவசியம். அதைத் தொடர்ந்து உறுப்புகளை பொருத்த வேண்டும்.

இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. இருப்பினும் ஏராளமானோருக்கு மறுவாழ்வும் கிடைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *