இடர்களைத் தடங்களாக்கி பயன் பெறுவோர்

Viduthalai
3 Min Read

நமது வாழ்வில் ஏற்படுகின்ற இடர்களால் – நம் மக்கள் ஏதோ அதோடு நம் வாழ்க்கையே முடிவுக்கு வந்து விட்டதாக அதீதமாக எண்ணி மனமுடைந்து தற்கொலை வரை சென்று விடுவது மிகப் பெரிய மனிதப் பலவீனமாகும்!
தொல்லைகள் தொடரும்போது அவற்றைத் துணிவுடன் எதிர்கொண்டு எதிர் நீச்சல் அடித்து; ‘வீழ்பவர் உடனடியாக எழுவர்’ என்ற நமது தளராத தன்னம்பிக்கைமூலம் நிரூபித்துக்காட்ட வேண்டும்.
எடுத்துக்காட்டாக பொதுத் தொண்டறப் பெருந்தொண்டர்களின் துணிவுமிக்க இந்த மன வலிமைதான் அவர்களது பேராயுதங்களாகும்!
சிறு சிறு தொல்லைகள் அன்றாட வாழ்வில் அரும்பிய நிலையைக்கூட – மனவேதனையின் உச்சத்திற்குச் சென்று, இருட்டில் தடுமாறும்போது அச்சம், சலிப்பு, மனக்குழப்பம், உதவி நாடாத அல்லது கிட்டாத கோழைத்தனம், மன அழுத்தம், கோபம், இவற்றிற்கு ஆளாகி, குற்றமற்ற நண்பர்கள் குழாமும் கூட நமது கண்டன உணர்வுக்கு தள்ளி விடுபவர்கள் ஏராளம்!
பதற்றமில்லாமல் சில மணித்துளிகள் அமைதி – ஒரு தாளை எடுத்து ‘பிரச்சினை என்ன? எது தடையாக உள்ளது. ஏன் அப்படிப்பட்ட ஒரு திடீர் தொல்லை துன்பம் – எழுதி, தீர்வு எப்படி இரண்டொரு வரியில் எழுதி – சிந்தனைச் சுழற்சியில் இருங்கள்.
தண்ணீர் அருந்துங்கள்.

சிறு பொடி நடை – கோபந் தணிந்த வகையில் சில மணித்துளிகள் நடந்தால், மீண்டும் மனநிலை சற்று மாறும்.
அமைதி ஏற்பட்டவுடன் பிரச்சினை மேலெழுந்த வாறு தீர்வு சொல்லாது. நிரந்தரமாகவே அதற்கு நிரந்தரத் தீர்வு காணுவதை யோசித்து யார்மீதும் வெறுப்பு – அதிகாரக் கோபம் கொள்ளாமல் விடைகளிலே தடைகளை எப்படி தடங்களாக்கி மீள்வது என்பதுதானே விளங்கும்!
சுயக்கட்டுப்பாடு– இப்படிப்பட்ட நேரங்களில் மிக மிக முக்கியம்.
நாம் நம்மை இழந்து விடக் கூடாது. அதே நேரம் நாமாகவே உறுதியாக நின்று அது எதிர் நீச்சலானாலும், சிக்கலான நீர்ச்சுழல் அதுபற்றி அஞ்சாமல் நீச்சலில் நிச்சயம் கரை சேருவோம் என்ற தன்நம்பிகையை ஒவ்வொரு பகுத்தறிவுவாதியும் உணர வேண்டும்.
அதுபோன்ற சோதனை நேரங்களில் சுயக்கட்டுப்பாடும் துணிவும் குழப்பமற்ற தெளிவும் நமக்கு மிகப் பெரிய போர் ஆயதங்களாகும்!

மறவாதீர்!
மார்க்ஸ் அரேலியஸ் என்ற ரோம் சாம்ராஜ்ய மாமன்னர் ஒரு தலைசிறந்த ஆளுமைத் திறனாளி மட்டுமல்ல, பழுத்த தத்துவ ஞானியும் ஆவார்!
அவர் சிறுசிறு சிந்தனைத் துளிகளை – சிறு சிறு பத்திகளில் சில மணித்துளிகள் படித்துப் பதிய வைக்கும் அளவுக்கு எழுதியதே – இது மற்றவர்களுக்காக அல்ல எனக்கு நானே கற்பித்து, அறிந்து, புரிந்து, எதிர் கொள்ள வெற்றியுடன் பயணத்தை – ஆளுமையை நடத்தவே என்று தெளிவுடன் எழுதினார்!

அது ஒரு நல்ல, தானே வழி நடத்தி தனித்தடம் காணும் தகைசால் பண்புக்கு முன்னாக்கம் ஆகும்!
‘நமது செயல்களுக்குத் தடை குறுக்கிடலாம் ஆனால் நமது கருத்தோட்ட விழைவுகளுக்கும், நம்மிடமிருந்து கைப்பற்ற முடியாத நம் அறிவு சார் உடமைகளையும் எவரும் தடுத்துப் பறித்து விட முடியாது. எப்படி?
1. எதையும் நாம் உள்வாங்கி நிறுத்திக் கொள்வது,
2. எதற்கும் தேவைப்படுபோது நம்மை மாற்றிக் கொண்டு – வழிமுறை – பயணம் தொடருதல், நமது இடர்களை தடங்களாக்கி, புதுச் செப்பனிட்டபடி தொடர முடிவு எடுக்கலாம்.
கொண்ட லட்சியத்தில் மாற்றம் செய்யாமல் நடக்கும் பாதையில் மாறவும் என்பதன் மூலம் புத்தியில் தடுமாறாமல் உத்தியில் மட்டுமே மாற்றம் என்பதை மனதில் உறுதி, தெளிவு மூலம் தடுமாற்றம் இல்லாது, தடைகளைத் தடங்களாக்கினால் பயணத் தொடர்ச்சி உற்சாகமாக அமையும் என்பது உறுதி!
வீழ்பவர் எழுவர்
ஆள்பவராக – மீள்வர்
எவ்வளவு இடுக்கண்களாகும்.

மேலும் பார்ப்போம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *