சென்னை, ஜன. 3 பெண்களுக்கு அதி காரம் அளிக்கும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில், சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் மகளிர் திறன் மேம்பாட்டு மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (2.1.2025) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பல்வேறு திட்டங்கள்
பெண்களுடைய உரிமைகளுக்காகவும், அவர்களுடைய முன்னேற்றத்துக்காகவும் ஏராளமான திட்டங்களை முந்தைய திமுக அரசு நிறைவேற்றியிருக்கிறது. அதைத் தொடர்ந்து, தற்போதைய திமுக அரசும் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், அரசுப் பணிகளில் மகளிருக்கு இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை எனப் பல்வேறு திட்டங்கள் உள்ளன. பெண்களுடைய பொரு ளாதார தன்னிறைவுக்காகவும் பல திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
மகளிர் திட்டங்கள்
பெண்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதைத் தாண்டி, அதன் அடுத்தகட்டமாக பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யக்கூடிய வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி எனப் பல்வேறு திட்டங்கள்.
தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது
பெண்கள் உயா்ந்தால்தான் ஒரு சமூகம் நிமிர்ந்து நிற்க முடியும். பெண்ணடிமை தீர்ந்து, பெண் அதிகாரம் பெறும் அந்த மாற்றத்தை நோக்கி தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. பெரிய அளவிலான பல திட்டங்களை முன்னெடுத்து வரும் அதேவேளையில், சிறிய அளவிலான திட்டங்களும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன.
பெண்களுக்குத் திறன் பயிற்சி
அந்த வகையில், நீட் தோ்வின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் பெயரில் கொளத்தூா் தொகுதியில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’ ஆரம்பித்து பெண்களுக்குத் திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்மூலம் கணினி சார்ந்த படிப்புகள், இலவச மடிக்கணினி, தையல் பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகளை முடித்து பெண்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதைப்போன்றே தற்போது மா.சுப்பிரமணியனும் இந்தத் திறன் மேம்பாட்டு மய்யத்தைத் தொடங்கியுள்ளார்
இங்கு ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனம் மூலமாகவும், ‘உஷா’ நிறுவனம் மூலமாகவும் மகளிருக்கு திறன் பயிற்சி கிடைக்கப் போகிறது என்றார் அவர்.
நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கணபதி, அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, தாயகம் கவி, ஹசன் மவு லானா, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.